பக்கங்கள்

செய்தித்தாள் சொல்லாத கதை

சுவாரசியம் இல்லாம, மேம்போக்காய் தினசரியில் நாம் வாசிக்கும் செய்தியின் உள் சென்று பார்த்தால் இப்படி இருக்குமோ எனும் கற்பனையே இந்த கதை.
உண்மைச் சம்பவம் என சொல்ல எல்லா வசதிகள் இருந்தாலும், கற்பனை கதை என குறிப்பிடுவது குற்றமில்லை.

செய்தித்தாள் சொல்லாத கதை

கதை : ஜனனி
குளிர் காற்று மென்மையாய் அந்த இடத்தில் படர்ந்தது.
இரண்டு நாட்களாய் பெய்த மழையில் முற்றம் நனைந்து ஈரமாய் இருந்தது. நண்பகல் நேர சூரியன், தன் முழு வெப்பம் காட்டாது சீதோசனத்தோடு தோற்றுப் போயிருந்தான்.
தென்னை மர நிழல் தாண்டி, தாழ்வாரத்தில் கட்டில். பெரிசுகள் சிலர் நெருக்கி அமர்ந்திருக்க, மாதவன் வீட்டின் முன் மனிதர்கள் கூட்டம் சிறு சிறு குழுக்களாய். மாமா வந்தாச்சு, பெரியப்பா இன்னும் வரல. என்பதாய் சில குரல்கள். தெளிவில்லாத பேச்சுக் குரல்களின் நடுவே கனத்த அமைதி இருந்தது.

தரையில் சிந்திக் கிடந்த ரோஜா இதழ்களை புறம் தள்ளி சன்னல் ஊடே பார்த்தாள் கமலம். உறங்காத கண்கள் பார்வையை சற்று மங்கல் ஆக்கியது. பார்வை பட்ட இடம் ஒட்டாமல் மனசு, சுழன்று சுழன்று ஒரே சிந்தனையை சங்கிலியாய் சிந்தித்த்து. சட்டென வாழ்வு திசை திரும்பி விட்டதே. ஏதேதோ கனவுகள், என்னென்னவோ திட்டங்கள். எல்லாம் ஒரு நொடியில் மாறி விட்டதே. ஏன் இப்படி. எனக்கு மட்டும் ஏன் இப்படி. செத்து தொலைக்கலாம், அது பரவாயில்லை.
தொண்டை வரண்டு, வாய் புளித்த்து. சே...என்ன நினைப்பு இது. கேசவன் எனும் அந்த பிஞ்சு மகன் என்னை விட்டால் என்ன செய்வான். அவன் எப்படி தாங்குவான்.

எப்படியும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

விளக்கு கம்பத்தை பிடித்து கொண்டு சிறுவர்கள் சுற்றி வந்து விளையாடுவ‌து தெரிந்தது. யாரோ தன் தோள் தொட்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் கமலம். உறவினர் பெண். ஆதரவாய் தோள் தொட்டவள், குடி என்பதாய் சைகை காட்டி விலகினாள். கடுங்காப்பி, கருப்பட்டி இனிப்பில். எடுத்து கவிழ்த்து கொண்டாள். காய்ந்து இருந்த தொண்டையில் உஷ்ணமாய் பரவியது. நல்ல இதம். கொஞ்சம் ஆறுதல்.

புடவைத் தலைப்பால் வாய் துடைத்தாள். பழைய புடவை, லேசான அழுக்கு நாத்தம். கண்ணையும் வாயையும் அழுத்தி துடைத்தாள். விளக்காத பல்லை, அதே புடவைத் தலைப்பால் துடைத்தாள். மீண்டும் திரும்பி சன்னல் பார்க்க, தூரத்தில் ரங்கண்ணா. மூன்று மாதம் முன்பு அவர் வீட்டுக்கு சென்றது நினைவுக்கு வந்த்து.

‘தொழில்ல தீடீர்னு கெடுபிடி, என்ன செய்யுறதுன்னே தெரியல. இரண்டு நாள்ல மூணு லட்சம் கட்டலேன்னா, குடும்பத்தோட சாவ வேண்டியதுதான்’ அழுகையும் புலம்பலுமாய் மாதவன் வெடித்த போது. ‘வெள்ளிக்கிழமையும் அதுவுமா, என்னலே வெறுவாய்க்கலம் கெட்ட வார்த்த சொல்ற. வாய கழுவுலே. வாழ்க்கைன்னா அப்படித்தான்.
பணம் தானேலே, மூணு லட்சந்தானே. நாளைக்கு வீட்டுக்கு வா, அத்தாச்சிக்கிட்ட கொடுத்துட்டு போறேன்’ ஆதரவாய் சொன்ன வார்த்தையில் உருகினான் மாதவன்.

வார்த்தை வராமல் கண்ணில் நீர் மல்கி நிற்க, கமலம் அருகில் வந்து அவன் கை பிடித்து கண் அசைத்தாள். ரங்கண்ணா நல்லவன். சொன்ன மாதிரியே செய்தான். மூணு லட்சம். அய்யோ! இன்னைக்கு திருப்பி கேப்பானே. மாட்டான். ஆனா எப்போ கேப்பான். யேயப்பா... மூணு லட்சம் எப்படி செய்வேன்.

’மதினி மாதவன் பாஸ் புக் எங்க இருக்கு’ குரல் கேட்டு எழுந்தாள். இடுப்பு தடவி அல்மாரி சாவி எடுத்து திறந்தாள். கேசவன் சாப்பிட்டு இருப்பானா, தெரியலயே! உள் நோக்கி குரல் உய்ர்த்தி ‘யக்கா! கேசவனுக்கு ஏதாவது கொஞ்சம் ஊட்டி விடுங்க’ கம்மிய குரல் இருமல் வேறு தொல்லை செய்ய, பாதியில் இருமலாய் அந்த வாக்கியத்தை முடித்தாள்.

மனம் மட்டும் குமுறியது. ‘ராஸ்கல்!!! குடிச்சுட்டா லாரி ஓட்டுரது. ஒரு குடும்பத்தை சீரழிச்சுட்டானே. அவன் மட்டும் கையில் கிடைச்சான். அப்படியே!!!....’

சற்று முன் உட்கார்ந்து இருந்த அதே இட்த்தில் மறுபடி அமர்ந்தாள். என்ன செய்யுறது. தெரியல. வெறுமை. விரக்தி. இது கனவா. ஒரு வேளை கனவாய் இருக்க கூடாதா. எவ்வளவு நல்லா இருக்கும். சே! இரண்டு நாளா ஒண்ணும் ஓட மாட்டேங்குது, எப்போ கண்ணன் ஓடி வந்து சொன்னானோ, அப்ப ஆஸ்பத்திரிக்கு ஓடினது. அப்பல இருந்து.

‘அம்மா!’ கேசவன் கை சுரண்டி கூப்பிட்டான். தலை திருப்பி என்ன என்பதாய் மவுனமாய் கேட்டாள். அப்பா எப்ப எந்திரிப்பாரு. இரண்டு நாளா தூங்கிறாரே, எதுவுமே சாப்பிடலியேமா. அழுகை பொங்கியது. நெஞ்சு அடைத்த்து. யாரோ உறவின் முறை அவள் தோள் அணைத்து கதறினாள் ‘சாவுற‌ வயசா மாதவா. குத்துக் கல்லா நான் இருக்கேன், குத்து விளக்கு நீ போயிட்டியே. அப்பன் சாவு தெரியாத வயசுல பிள்ள’

கமலம் மாதவன் உடல் பார்த்தாள். ரோஜா மாலை பெட்டியை நிரப்பி இருந்த்து. மாலையில் இருந்து ஒரு எறும்பு அவன் உயிரற்ற உடலில் ஊர்ந்து கொண்டு இருந்தது. பின்னே அதனை தொடர்ந்து சில...வரிசையாய்...எந்த அசைவும் இல்லாது உடல். துக்கம் தொண்டையை அடைக்க, சட்டென கை நீட்டி அதை தட்டி விட்டாள்..

மாதவன் உடலில் விழுந்தாள். சில்லிட்ட உடல். சற்றே சுருங்கிய தோல். இல்லை. இது மாதவன் இல்லை. முந்தா நாள் பார்த்த என் மாதவன் இல்லை இது. அவனை இனி பார்க்க மாட்டேன். மூன்று வருடங்களில் எத்தனை நிகழ்வுகள். சந்தோசம், உரிமை. நிறைவான குடித்தனம்.

பெத்த அப்பனிடம் கூட இருபது வயதில் தயங்கி கேட்ட காசை, அவன் பையில் கையை விட்டு கல்யாணமான மூன்றே நாளில் எடுத்தேனே. அவன் பிரச்சனைக்காக உருகினேனே. என் இத்தனை சீக்கிரம் போனாய் மாதவா. கோர்வை இல்லாத உணர்வுகள். யம்மா!! யம்மா!! என வெற்று வார்த்தையாய் புலம்பல். அழுது வீங்கிய கண்கள் என கமலம் கதறினாள்.

செய்தி: (நேற்றைய தேதி)

திருச்சி :
நேற்று நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். இறந்தவர்கள் விவரம் மாதவன் (வயசு 29) மீரான் சாகிப் (வயசு 53)


கதை முடியும் முன் இவரையும் சந்தித்து விடுங்களேன் :

கண் திறந்து அவன் பார்த்தான். தொடர்ந்து குடித்ததில் நாக்கு தடித்து சுவை விட்டு இருந்தது. மெதுவாய் எழுந்து உட்கார தலை சுற்றியது. ஓவ் என அடி வயிற்றில் இருந்து வெற்று காற்று வாந்தி போல் வந்த்து. மூச்சு இரைத்தது. கண்கள் மூடி தலை உலுப்பினான்.

பக்கவாட்டு சாலையில் இருந்து சட்டென அந்த டிவிஎஸ் வந்த்தும் டொம் எனும் ஓசையும் கேட்க, பிரேக்கை மிதித்து குதித்து இறங்கினான். நல்ல மழை. அலங்கோலமாய் கிடந்த அந்த டிவிஎஸ் குறிவைத்து ஓடினான். செத்துருப்பானோ. வேகம் அதிகமோ. இல்லயே ஒரு 50 – 60 தான இருக்கும். ஸ்கிட் ஆயிருக்கும். குடித்திருக்க கூடாது, உடல் வலின்னு சொல்லி.... தப்பு.

வண்டியை நெருங்கி பார்த்தான். மார்புப் பகுதியில் வண்டி ஏறிய தடம் தெரிய, அந்த பகுதி கூழாகி இருந்த்து. ஐயையோ!! மனம் பதறியது. இரண்டு கையும் அனிச்சையாய் தலை பின்னால் சென்றது. வாய் சே! என்றது. அசைவு இருக்குதா என பார்க்க, குனிந்த போது பெரிய மீசை தெரிந்த்து. இல்லை செத்து விட்டான்.

சுற்று முற்றும் பார்த்து, ஆளில்லா அந்த தெருவில் மீண்டும் லாரி வந்து ஏறி விரைவாய் செலுத்தினான். படபடப்பு அடங்கி முதலில் பார்த்த சாராயக் கடையில் குடிக்க ஆரம்பித்தவன். இரண்டு நாளாய் குடிக்கிறான்.

சே! அந்த மீசை, அந்த சத்தம் தாங்கவே முடியல. எவ்வளவு உதறினாலும் போறதில்ல. குடிச்சா தேவல. வாய் கொப்பளித்து விட்டு சாராயம் மீண்டும் குடித்தான். அமிலம் போல் இறங்கி குமட்டிக் கொண்டு வந்த்து. வயிற்று சாராயம் தன் முகம் காட்ட, சற்று நேரத்தில் உடல் தளர்ந்து அந்த சுவரில் சரிந்தான். மெல்லமாய் முகம் இருக்கம் தளர்த்தியது.

7 கருத்துகள்:

  1. நல்ல கதை..இயல்பான நடை..

    எனக்கு பிடித்திருந்தது

    வெற்றி பெற வாழ்த்துகள்

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நன்றி சுவாமி. வருகைக்கும் கருத்துக்கும்

    உங்க சுவாசிகா வீடு நல்லா இருக்கு. சிக்குன்னு சித்து சிறுக்குன்னு பதவிசா இருக்கு. கலர் காம்பினேஷன் கூட பிரமாதம். அதுலயும் வலை மனை வீட்டு மனை என்பதின் உருவகம் சூப்பர்.

    நானும் கூட விருந்தினராக வீட்டில் வந்து கும்மியடிக்க ஆசை. எங்களையும் விளையாட்டுக்கு சேத்துக்கோங்க....

    இதையும் பாருங்களேன்.

    http://edakumadaku.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. நன்றி லாரன்ஸ் :)

    //நானும் கூட விருந்தினராக வீட்டில் வந்து கும்மியடிக்க ஆசை. எங்களையும் விளையாட்டுக்கு சேத்துக்கோங்க….//
    எனக்கு மெயில் பண்ணுங்களேன்..விரிவாக பேசலாம்..என் மெயில் முகவரி ksawme@gmail.com

    பி.கு : குண்டக்க மண்டக்க இருக்கும் உங்க எடுக்கு மடக்கு தளத்தையும் பார்த்தேன் :) ரொம்ப நல்லா இருக்கு

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  4. All the best to win,
    http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. வாங்க...கந்தசாமி.

    போட்டியில் கலந்து கொள்வதே இலக்கு. கதை விட (எழுத) துவங்கியே இப்பத்தான் சில மாசமாச்சு, அதுக்குள்ள பரிசு எதிர் பார்க்கவெல்லாம் மாட்டேன்.

    என்றாலும் தங்கள் அன்புக்கு நன்றி.

    தமிழ் இலக்கியம் எனும் ராஜ பாட்டையில் தவழ, தத்தி தத்தி நடக்க ஆசை. ஒருமித்த கருத்துடைய தங்கள் போல் நண்பர் அன்பு கிடைத்ததே மிக்க மகிழ்ச்சி.

    உங்க கதை படிச்சேன். அதற்கான பின்னூட்டம் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    படுக்காளி

    பதிலளிநீக்கு
  6. என் கதையையும் மதிச்சு ஒருத்தரு comment போட்டுட்டார் னு மெயில் வந்ததும் பார்த்தேன்,மகிழ்ந்தேன்.
    நண்பர் படுக்காளி என்னை எழுத்தாளன் என்று சொல்லிவிட்டார்.நன்றி நண்பரே.

    எதோ சப்தம் -->"ஐயயோ ,இத சக்கா வெச்சே இன்னொரு பதிவு போடுவானே இவன்."
    சப்தம் இட்டது "மனசாட்சி "

    பதிலளிநீக்கு
  7. நண்பர் படுக்காளி,

    செய்தியையும் கதையையும் இணைத்து வித்யாசமான கதை.படங்களும் பொருத்தமாய்... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். "அடுத்த வீட்டு பெண்" கதை படிக்க நமது blog-க்கு வரவும். : http://veeduthirumbal.blogspot.com/

    பதிலளிநீக்கு