பக்கங்கள்

ஒரினச்சேர்க்கை ஓகேயா !!!


சர்வதேச அளவில் இந்த சர்ச்சை வெடித்த போதும், சமீபத்தில் இந்தியாவில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த போதும் எழுதத் தோன்றினாலும், அமைதியாய் இருந்து விட்டேன். விவகாரம் வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் பின்னால் அரங்கேறிய சில நிகழ்வுகள் என் மவுன‌ம் கலைத்தது.


ஒரினச் சேர்க்கை செய்பவன் சமூக விரோதி, அவனை கொல், என்பவர் ஒரு புற‌ம்.
இது தனி மனித சுதந்திரம் அதில் தலை இடாதே என்ற எதிர் முகாம் ம‌ற்றோரு வித‌ம்.

இருவ‌ருமே பார்க்க‌ ம‌றந்த கோணத்தை பட்டியலிடுவோம்.

அதற்கு முன் : எழுத தூண்டிய நிகழ்வுகள்.

நிகழ்வு 1: கடந்த வார இறுதியில் நண்பர்கள் நால்வரும் கடல் குளிக்க சென்றோம். குஷியும் கும்மாளமுமாய் கடற்கரை அடைந்த போது, ஒரு மனிதரை பார்த்து முகம் சுழித்தோம். ஐம்பது வயது இருக்க வேண்டும், சுட்ட அப்பளத்தை தலையில் கவிழ்த்தது போல் வழுக்கை. பணக்காரர்கள் அணியும் குளியலறை கவுன் அணிந்து அநாகரிக செயல் செய்து கொண்டு இருந்தார்.

தன் வரைக்கும் என்ன செய்து கொண்டு இருந்தாலும் ஒ.கே. ஆனால் நம்மை தொந்தரவு செய்வது தான் எரிச்சல்.

சக நண்பர் சொன்னார் "டேய்... இது கடப்பாரை கேசு" சரி விலகலாம் என்று நகர்ந்த போது எங்களை நோக்கி வந்தார். "கடலின் ஆழம் எவ்வளவு" என்பது போன்ற உப்பு சப்பு இல்லாத கேள்வி கேட்டு விட்டு எங்கள் பதிலின் தொனி கண்டு விலகி சென்றார். நாங்களும் நிம்மதி பெரு மூச்சு விட்டு குளித்தோம்.

நிகழ்வு 2: இந்தி திரைப்படத்தில் நகைச்சுவை என்ற போர்வையில் இரு ஆண்கள் ஒரின உறவில் உள்ளதாய் காண்பித்தார்கள்.

சரி நம் கோணம் என்ன :

அறுவறுப்பும் எரிச்சலும் விலக்கி,சமன் நிலை எய்து பார்ப்போம்.

இனவிருத்தி, இல்லறம், இன்பம் எனும் நோக்கம் கொண்டு, இரு பாலார் இணைந்தனர்.

இன்பம் வேண்டி மட்டும் கீழ் கூறும் இரு காரணங்களால் தோன்றியது ஓரினச்சேர்க்கை.
1.பெண்ணிற்கு ஆணிடத்திலும், ஆணுக்கு பெண்ணிடத்திலும் தோன்றும் அதீத வெறுப்ப
2.‍எதிர் பாலார் கிடைக்காத காரணம்

இதில் வராத ஒரு முக்கிய பிரச்சனை. பிறப்பால் பகுபடாத திருநங்கைகள். சட்டம் கொண்டு வந்த திருத்தம் இந்த கோணத்தில் அவசியம் ஆகிறது. ஆணென்றும் பெண்ணென்றும் பகுபடாத நிலை வரும் போது, அவர் செயல் சட்டப்படி குற்றம் என்று சொல்வது முறைய‌ற்றது.

உடலால் பிழை இல்லாது மனப் பிழை கொண்டவர், இயல்புக்கு திரும்ப வேண்டும். இந்த கடப்பாரை கோஷ்டிகள் சேர்க்கை தேடுவது, ஒரு தனி மனித உணர்வை நசுக்குவது, கொலைக்கு சமமான் செயல். நம் இளைய தலை முறையை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இதை நாகரீகம் என்றோ, நல்லது என்றோ, தனி மனித சுதந்திரம் என்றோ பகுப்பது ஆரோக்கியம் அல்ல.

புதிய வலைப்பதிவு

தங்கள் ஆதரவு கண்டு கதைக்கென ஒரு புதிய வலைப்பதிவு தொடங்கி உள்ளேன்.
http://www.kabsatime.blogspot.com/
வாருங்கள்.
வந்து வாசியுங்கள். தங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

நன்றி : புகைப்பட உதவி : ராஜ் - என் மகன்.
{ஈன்ற பொழுதில் பிரிதுவக்கும் தன் மகனை போட்டாகிராபர் என கேட்ட டாடி }

சராசரி மனிதனை சும்மா விடுங்க

பாமர மனது சர்ச்சைக்கு ஏங்குகிறது,
இல்லை என்றால் ஏன் இத்தனை பரபரப்பு.

இருபத்தி றோம் நூட்றான்டில் மிக நீளமான தொல்லை / தொலைந்த நேரம். ஆறு நிமிடங்கள் காணமல் போய் பின்னர் நாம் கண்டு பிடித்த சூரியன். உதய சூரியன். (அரசியல் அல்ல)

காலையிலே எழுந்து குளித்து வெறும் வயிறில் நீங்கள் பிரார்த்தனையில் மூழ்கி இருந்தாலோ, அல்லது தொலைகாட்சி பேட்டியின் முன் உக்காந்து மேதைகள் விளக்க உரையோடு, நகம் கடித்து கைகளை பிசைந்து கொண்டு பார்த்த கூடத்தில் இருந்தாலோ, மன்னிக்கவும் நான் உங்கள் கட்சி இல்லை. நான் சோத்து கட்சி.

ஊடகங்கள் கட்சை கட்டி கொண்டு சூரிய கிரகணத்துக்கு நேரடி ஒழி / ஒளி பரப்பு. கழுத்திலே கட்சை கட்டு, முதுகுக்கு பின்னால் கல்லா கட்டு.

இது ஒரு பூகோள நிகழ்வு. பிரத்தேயகமான ஒரு நாள். அவ்வளவுதானே, இதை ஏன் இவளவு பெரிசாக ஆக வேண்டும்.

பழைய காலத்தில் தீடிர் என்று இருள் சூழ மக்கள் பயந்து இருக்க வேண்டும். மேல் நோக்கி பார்த்த சிலருக்கு கண் நொள்ளை ஆகி இருக்க வேண்டும். எனவே இது போன்ற நாட்களில் அச்சம் கொண்டு அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்லி இருக்க கூடும். அதை இன்று வரை கேள்வி கேட்காது செய்தால் எப்படி…. ஆன்மீக வாதிகளே அடங்குங்கள்!!!

சரி. அவன் உண்ண கூடாது என்ற உடன் நீங்கள் உண்டு விட்டால் ஆகி விட்டதா. ஆன்மீகத்தை குறை சொன்ன உடன் உங்கள் வேலை முடிந்ததா. பகுத்தறிவு பாசரைகளே பதுங்குங்கள்

சராசரி மனிதனை சும்மா விடுங்க

அஞ்சலி

நாற்பது வயதில் இந்த தொல்லை.

பிறந்த முதல் பத்து பதினைந்து வருடம் வரை விவரம் தெரியவில்லை. அடிப்படை விவரங்கள் சேகரித்தே அந்த பருவம் முடிந்து போயிற்று. பின்னர் சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பருவதில், சக மனிதரின் வாழ்வு ந‌ம‌க்கு நினைவில் ப‌திய‌த் தொடங்கும். சமூக அங்கி காரம் என்னும் மாயத் தூலபாரத்தின் துணை கொண்டு அவர்களை உற்று நோக்கி அவர்கள் வெற்றியை மனதில் குறித்து கொண்டு அவ‌ர்க‌ளை ஆத‌ர்ச‌ன‌ குறிக்கொளாக‌வும் கொள்வோம்.

ச‌ரி இதில் என்ன‌ தொல்லை என்கிறீர்க‌ளா ???

நமக்கு நாற்பது வரும் போது அவர்கள் வாழ்ந்து முடித்து மரணம் என்ற காரணம் சொல்லி நம்மை விட்டு பிரிந்து செல்வர்.

அப்ப‌டி ஒரு பிரிவு இப்போது என‌க்கு நிக‌ழ்த‌து.

மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய என் உறவினர் இறந்து போனார் என்று கேட்டவுடன் மற்ற எந்த வேலையும் பெரிதாக தெரியவில்லை. முக்கியம் என்று நான் நினைத்த விடயங்கள் அர்த்தம் இல்லாததாக தோன்றியது. இனி அவரை பார்க்க மாட்டோமே பேச முடியாதே என்ற நினைவு நெஞ்சை அடைத்தது.

அவரை பற்றி :

பரவலான ஆழமான தகவல் பெட்டகம். படிப்பு, குடும்பம், பணம் என்ற எந்த பின் புலமும் இல்லாது தன் முயற்சியில் வணிகத்தில் முன்னேறி குடும்பம் சமைத்து இருபதிற்கும் மேற்பட்ட குடும்பத்தின் ஜீவனம் ஓட்ட வேலை கொடுத்தவர். எந்த விடயத்தை பேசினாலும் ஆர்வமாய் பங்கு பெற்று பேசுவார்.

இசை, இந்திய சட்டம், இறை, இனம், மருத்துவம், என எதுவும் பேசலாம்.

அவரது பொது அறிவை சொல்ல ஒரு விடயம்

அமரர் சுஜாதா பத்து கேள்விகள் கொடுத்து இதில் நான்குக்கு மேல் சரியாய் சொன்னால் நீங்கள் கில்லாடி என்பார். நம்மவர் அதில் ஏழு சரியாய் சொன்னார்.

உதாரணக் கேள்வி : நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு நாட்களாய் இருக்கிறது?

தற்செயலாய் சந்தித்த ஒரு பெரியவர் சொன்னார். ஒ அவரா நன்றாக தெரியும். ஒரு முறை என் தம்பியை நாலு பேர் அடித்து விட்டனர், அது மட்டும் இல்லாது தினம் தொல்லை என்ன செய்வது என்று தெரியாத போது இவர் வந்து அந்த நான்கு முரடர்களையும் அடித்து வழிக்கு கொண்டு வந்தார் என்றார்.

நம்ப முடியாத தகவல் அது. நான் சென்று கேட்ட போது உம் என்று சாதாரணமாய் சொன்னார். எப்படி என்ற போது சிறிது வர்ம கலை தெரியும் அதை வைத்து சமாளித்தேன் என்றார். வர்ம கலை தெரிந்ததை கர்வம் இல்லாது சொன்னார்.

சற்று விலகி நின்று அவரை மேலும் கீழும் பார்த்தேன். பின்னர் கேட்டேன், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவும் வண்ணம் எதாவது சொல்லுங்களேன் என்றேன். சிறிது நேர சிந்தனையில் சொன்னார். சொன்னதை இங்கே சொன்னால் வன்முறைக்கு நான் உரை எழுதியது ஆகாதா. வேண்டாம் என்னோடே இருக்கட்டும்.

தன் தொழிற் சாலையில் நடந்த ஒரு நிகழ்வில் உள்ளூர் மீனவர்கள் சுமார் ஐம்பது பேர் சேர்ந்து அடிக்க வந்த போது ஒற்றை மனிதராய் சமாளித்து அவர்களை ஓட ஓட விரட்டினார் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன்.

சரி பயம் இல்லாத மனிதர் என்று சொல்ல முடியாது. அறுவை சிகிச்சை என்றால் அப்படி ஒரு பயம், ஏன் மருத்துவமனை என்றாலே பயம் தான்.

நிறை குறை உள்ள நல்ல மனிதர்.

அவர் இறந்து விட்டது இயல்பு. எனது கேள்வி.

இத்தனை அனுபவம் செறிந்த அவரது வாழ்கை தகவல்கள் அவரோடு சென்று விட்டனவே. அந்த தகவல்கள் மாத்திரம் வேறு யாருக்காவது கிடைத்து இருந்தால் தன் வாழ்கையும் உயர்த்தி பல குடும்பங்களை வாழ வைத்து இருக்கலாமே!!!! என்று சிந்தித்த போது அவரோடு ஒரு தருணத்தில் பேசிய வார்த்தை எதிர் ஒலித்தது

அவரின் ஒரு லட்சியம். புத்தகம் எழுதுவது. எதை பற்றி என்று கேட்டேன். உலகம் பற்றி என்றார்.. புத்தகம் எழுத தொடக்கி 50 பக்கம் வரை எழுதி இருக்கிறேன் என்றார். மலையாளத்தில். மொழி அறிவு இல்லாத காரணத்தால் வாசிக்கும் வாய்ப்பு இல்லை.

புத்தகம் அது அவர் இறுதி வரை நடக்க வில்லை

முயற்சிக்கிறேன் என்னால் அவர் கனவு நிறை வேற்ற முடியுமா என்று.

ஏன்ஜெல்ஸ் அண்ட் டேமன்ஸ் - விமர்சனம்.


இது வெகு ஜன படம் இல்லை.
நாவல் தந்த தாக்கத்திலே உருவான அலை, மெதுவாய் அடங்கி விடும். சினிமா சரித்திரத்தில் மைல்கல்லாய் நின்ற டைட்டானிக், பென் ஹர் போலே நிற்கும் வாய்ப்பு இல்லை.

எனும் போது படம் சரி இல்லையா, என்றால் நிச்சயம் இல்லை. நல்ல தொழில் நுட்பத்துடன் ரசனையாய் எடுக்கப்பட்டே இருக்கிறது. சரி ஏன் இப்படி சொல்லுர, என்பவருக்கு, படத்தின் கதையில் தொடங்குவோம். மறைந்த சாண்டோ சின்னப்பா தேவர், போலே கேட்டால்,
'ஒற்றை வரியில் கதை சொல்லு'
'அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடிதடி'
மூன்று வார்த்தையில் முடி ந்து போச்சே. இன்னும் விரிவாய் சொல்லு.

பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய கலிலியோ கத்தோலிக்க குருமார்கள் சண்டை நீண்டு இருபத்தோராம் நூற்றாண்டிலேயும் தொடருகிறது.

இந்த சாராம்சம் படத்தில் இல்லையே.

தெரிந்ததில் தொடங்கி தெரியவில்ல்லையே அல்லது தெரியாது என்று முடிப்பது ஆன்மீகம். தெரியாததில் தொடங்கி தெரிந்து விட்டது என்று முடிப்பது அறிவியல்.

நம் நாட்டில் இந்த சண்டை குறைவு. கருப்பு சட்டை பொட்டு பகுத்தறிவு பேசும் கூட்டம் கூட ஒரு மதத்தை சாடுவதையே முக்கியமாக கொள்ளுவார். அமரர் சுஜாதா தொடங்கி அப்துல் கலாம் வரை சராசரி மனிதன் வரை அறிவியலையும் ஆன்மீகத்தையும் சரி சமமாய் கொள்ளுவான்.

உடைந்த கப்பல் பற்றிய படம் தானே என்று மெத்தனமாக இல்லாமல் வருஷங்களாய் ஆராய்ச்சி செய்து தம் பிடித்து கடலுக்கடியில் போய் விவரம் சேகரித்து திரையில் தரும் போது, அதன் தரமே தனி.
அப்படி ஒரு மெனக்கெடல் இதில் தெரியவில்லை. நாவலை மட்டுமே நம்பியது பொல் தோன்றுகிறது.

நாவல் திரை வடிவம் பெரும்போது எக்கச்சக்க சிக்கல். ஒன்றே ஒன்று மட்டும் உதாரணத்துக்கு.

விக்ரம் பூரா ப்ரொப்ளெம்.

அமரர் சுஜதா கதையாய் எழுதியபோது,

"இந்த எல்லையை மீறி செல்பவர் கைது செய்யப் படுவார்கள் " என்ற எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதி இருந்தது. இதை படிக்க தெரியாத, இதை பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன் மேல் உட்கர்ந்து கொண்டு இருக்க, ................."

என்று செல்லும் அந்த வரி. இதை எடுக்கிறேன் பேர்வழி என்று சென்ற கலை ஞானி கும்பல் தேடி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று புறாவை பிடித்து பெயிண்ட் அடித்து இரண்டு நாள் தாமதத்தில் (இந்த புறா காட்சிகக மட்டும்) படமாக்கினார்களாம்.

சரி விளைவு என்ன. கதை வாசிக்காத ஒருவரும் இந்த உணர்வை பெற வாய்ப்பு இல்லை.

ஒன்று புரிகிறது. இலக்கியம் வேறு திரைப்படம் வேறு.

திரை க்கதையில் நிறைய மாறுதல் செய்துள்ளார்கள். மிக நல்லது. மிக பெரிய ஆன்டி மட்டர் கண்டுபிடிப்பை செய்தது ஒற்றை தாத்தாவும் ஊர் சுற்றும் மகளும் என்கிறது நாவல். திரையில் அப்படி இல்லை. ஒரு குழுவே உண்டு.

டேன் ப்ரௌனின் பிம்பமே கதா நாயகன் லங்க்டன். அதனால் தானோ என்னவோ செர்ன் இல் நடக்கும் கொலையை துப்பு துலக்க தூங்கி கொண்டு இருக்கும் பேராசிரியரை கொண்டு வருவார்கள். மகளுக்கு முன்னால் முந்திரி கொட்டையாய் இவர் வந்து இவர் மேல் கதை நகரும். திரையில் அதுவும் இல்லை.

பிரசினை செய்ய கூடிய சில விடயங்கள், அரேபிய கொலை காரன், போப் ஆண்டவருக்கு சோதனை கூழாய் மூலம் பிறந்த மகன் என்று உள்ளதை தவிர்த்து விட்டார்கள். புத்திசாலிகள்.

ஆன்மீகத்தை சார்ந்து அறிவியலை சாடுவதாய் மத குரு பேசும் ஒரு வாதம் எனக்கு நாவலில் ரொம்ப பிடித்த இடம்.

"ப்ரொட்டான், ந்யு ட்ரான் என்று விளக்கி காரணம் சொல்லி விட்டு நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன. சராசரி மனித வாழ்க்கையில் இறைவன் என்ற பிம்பத்தினால் அவனுக்கு பெரும் நம்பிக்கையும் நிறைவும் அமைதியும் தர ஏன் முயற்ச்சிகவில்லை. காரணமே இல்லாது நோக்கமே இல்லாது தானாய் உருவாக்கபட்ட சதை பிண்டம் தான் மனிதன் என்று நிருபிப்பதின் மூலம் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள். என்று உணர்ச்சி வயப்பட்டு கேட்பார்.

என் கோணத்தில் நான் யோசித்தது இது.

நடு ரோட்டில் ஒரு சராசரி கிற்ஸ்துவனை நிருத்தி புனித தெரசம்மாள் பற்றி சொல்லு என்றால். நே!! என்று விழிப்பான். இன்னும் கேட்டால் தலை சொரி ந்து கொண்டு பெரிய கோவில்களின் பக்க வாட்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் அந்த சிலையின் வடிவை சொல்லுவான். இதற்கும் மேலாய் ஒன்றும் தெரியும் வாய்ப்பு குறைவு.

ஒரு கன்னியாஸ்திரி புனிதர் ஆக காரணம், சர்ச்சை உள்ளாக்கி அது ஆன்மீகமா லொகிகமா என்று வெடித்து அதை அடிப்படையாய் கொண்டு உருவாகிய சிலை கோவிலுக்குள் வைக்க தகுதி அற்றது என்ற போப் ஆண்டவரின் ஆணையை தொடர்ந்து அது பேர் இல்லா கோவிலுக்கு மாற்றப் பட்டது என்று அறிவது சராசரி மனிதனுக்கு எந்த வகையில் உபயோகம்.

ஒரு சுற்றுலா பயணியின் ஆர்வத்தோடு பாப்பானவர் அறை, அவர் தேர்வு, ஆலயங்கள்,சாலைகள் என ரோமை சுற்றி சுற்றி கலக்கி இருக்கிறார்கள். புகை பிடிக்கும் கர்தினால் நிதர்சனம்.

மைக்கேல் ஆஞ்சேல்லோ டிசைன் செய்த காவலர் உடை சூப்பர். மாசு படக் கூடாது என்று குறைக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு அறையில் பதைபதைக்கும் அந்த புத்தகத் தேடல் ஒரு சபாஷ்.

மொத்ததில் ஒகே. இன்னும் நல்லா இருந்து இருக்கலாம்.

வலி தவம்


வலி உபாதை அல்ல.
அது ஒரு உணர்ச்சி. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாயம்.
போராட வேண்டாம். அதோடு சண்டை இட அவசியமில்லை. வலி! விலக்க அதன் போக்கில் சென்று அதை நிர்வகிக்க வேண்டும். இந்த அனுபவம் / பதிவு அதை வி(ல)ளக்கினால் தாய் தமிழுக்கு நன்றி.

தொடங்கும் முன் :
குடல் இறக்கம், மூலம் என்று இரண்டு தொல்லைகள். எனக்குத்தான். இந்த இரண்டு தொல்லைகளுமே என்னை அறுவை சிகிச்சை செய்தால் தான் ஆயிற்று என்று நிர்பந்தித்ததால் வேறு வழியின்றி அது சொல் படி கேட்டேன்.
மூன்று வார விடுமுறையும் நல்ல உடல் நலமுமாய் திரும்ப வந்து விட்டேன். இதுவும் ஒரு அனுபவம், இதையும் பங்கு வைக்கலாமே என்ற போது, ஒரு சின்ன தயக்கம். இது அந்தரங்கமா. இது சொல்வது சரியா.
சரேலேன்று ஒரு நியாபகக் கீற்று.
சிறு வயதில் என்னை செதுக்கிய இருவர். என் எண்ணங்களுக்கும் இயல்புக்கும் காரணகர்தாக்கள். என் குடும்பத்தின் அடி வேர்கள். எனக்கு இரு வேறு ஆலோசனை தந்தனர்.
ஒருவர்: காய்ச்சல் என்று லீவு எடுத்த உன்னை பார்க்க வரும் ஆட்களுக்கு முகத்தில் சோர்வை காட்டு. மெதுவாய் பேசு. உன் வலியை உணர்த்து. அவர் அனுதாபம் சம்பாதி.
மற்றவர்: அடுத்தவர் பரிதாவம் உனக்கு என்ன பயன். உன்னோடு சிரிக்கத்தான் இந்த உலகம் தயார், அழ விரும்பினால் உன்னை தனியாய் விட்டு செல்லும். நம் துன்பம் நம்மோடு. ரௌத்திரம் பழகு. உள்ளுக்குள் போராடு. குறை இல்லை என்பதாய் மூர்க்கம் காட்டு. உன்னிடத்தும் உலகிடத்தும்.
எனக்கு குழப்பம். இன்று வரை தெளிவு இல்லை என்றாலும் இரண்டில் உள்ள நிறை குறை தெரிகிறது. தீர்மானம் இல்லாது வாழும் எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரி மேலே!!! .... என்று கவுண்டமணி பாணியில் செல்வோம்.
சற்று நேரம் சிந்தித்தேன். சிறிய ஆலோசனையில் தெளிவு பிறந்தது. எழுதுவது நல்லது என பட்டது. நேர்மையாய் உணர்ந்ததை சொல்லலாம் என்று தோன்றியது. என் நினைவுகளை பதித்தது மட்டும் அல்லாது, எவருக்கேனும் நல்லது செய்தால் இந்த பதிவின் படைப்பு நோக்கம் பூரணம் பெறும்.

எங்கே தொடங்குவது :

ரம்ஜான் நோன்பு நேரம். துபாய் அலுவலங்கள் கதவு மூடி உணவு உட்கொள்ள தயார் ஆகும் மாலை நேரம். சூரியன் மறைந்தால் ஆரம்பிக்கலாம் என்று இஸ்லாம் சகோதரர்கள்.
நான் மட்டும் அலுவலகத்தில்.
முடிக்க வேண்டிய முக்கியமான வேலையின் காரணமாய். பாதாள கார் பார்க்கிங்கில் உடன் பணி புரியும் அதிகாரியோடு நீண்ட நேரமாய் நின்ற வாக்கில் சம்பாஷனை, இரண்டு மணி நேரமாய்.

உடல் சோர்வு. வியர்வை. முதலில் அசொவ்கரியமாய் ஆரம்பித்த உடல் சோர்வு மெல்ல பரவி உடல் முழுதும் வியாபித்தது. கால் மாற்றி கால் மாற்றி அவஸ்தையாய் நின்று இருந்தேன். வியர்வையின் அளவு அதிகரித்தது. முக்கியமாய் முகத்தில் கூடுதலாய் வியர்த்தது. காற்று குறைவு என்று மனதில் ஒரு நினைப்பு.
முடிக்க வேண்டிய வேலையின் அளவு தெரிந்ததால் அவரிடம் சொல்லி விட்டு சரி வேலை தொடங்கலாம் என்று மெதுவாய் நகர்ந்தேன்,பாதாள கார் பார்க்கிங்கில் இருந்து மெதுவாய் மேலே வந்தேன்.
வியர்வையின் அளவு குறையவே இல்லை. மிதப்பது போல் ஒரு பிரமை. உச்ச ஸ்தாயியில் சில் வண்டின் குரல் போலே காதில் கேட்கிறது. கால் தன வலுவிழந்து சற்றே தள்ளாட்டம். முகத்தில் சதை திரசியில் ஒரு உணர்வின் வீக்கம். நடக்க முடியுமா என்ற கேள்வி சந்தேகமாய் தோன்றுகிறது. முடியும் என்று மனது சொல்லுகிறது. சுவரின் அண்மை பார்த்து கை அன்னிசையாய் தடவி பிடித்தது. உடலில் ஒரு சிறு பதட்டம் காரணமாய் நடையில் ஒரு வேகம். விசையுடன் தலை சுழல்வது தெரிகிறது. கண்களில் ஒன்றிக்கும் மேலாய் நீருற்று போலே தெரிந்து பார்வையில் ஒரு குழப்பம்.
சே... என்ன இது தொல்லை. சாப்பிட்டோமா . ஆம் சாப்பிட்டேனே. பின்னே என்ன இது. எதோ பிரச்சினை போல் தெரிகிறதே. பெரிதாய் இருக்குமோ. சரி போய் அலுவலகத்தில் உட்கார்ந்து ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் சரி ஆகும்.
காதுகளில் கேட்கும் ஒலியின் தாக்கம் அன்னியமாய் பட்டது. தட்டுத் தடுமாறி என் மேசையை அடைந்து இருக்க, மேலும் சுழன்றது. முன் சரிந்து படுத்த நிலை மேலும் அசௌகரியம் தர நிலையை மாற்றி தலை பின்னுக்கு சாய்த்தேன். நினைவு தவற காது சில் வண்டின் சத்தம் அதிகரிக்க கண்கள் இருட்ட தரையில் மயங்கி விழுந்தேன்.
................................. தொடரும்.