பக்கங்கள்

சேது விநாயகம் செத்துட்டான்யா

நண்பர் காலையில் தொலைபேசியில் சொன்ன வார்த்தை இது.

மனம் சட்டென்று தேடி இனம் கண்டு கொண்ட்து. அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நீங்கள் தமிழ் திரைப்படம் ஆழமாய் பார்ப்பவராய் இருந்தால், இவரை தெரிந்திருக்கும். ஒரு வேளை பெயர் தெரியாமல் இருந்தாலும் கூட ஆளை நிச்சயம் தெரிந்து இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்சா திரைப்பட்த்தில் மிக பிரபலமாய் பேசப்பட்ட மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் காட்சியில் கல்லூரியின் தாளாளர் வேடத்தில் நடித்தவர். வசனமே இல்லாத இந்த காட்சியில் ரஜினியின் கட்டளை போன்ற உடல் அசைவிலே காட்சியின் பொருள் விளக்கப்பட்டிருந்தாலும் சேதுவின் தேர்ந்த உடல் அசைவில் அவர் காண்பித்த உணர்ச்சியில் நல்ல அனுபவம் தெரியும். பயந்து, வேர்வையை துடைத்துக் கொண்டு, பவ்யமாய் எழுந்து நிற்கும் நடிப்பிலுமே அந்த காட்சி நிறைவு பெற்றது என்றால் மிகை ஆகாது.

சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நடிப்பும், திரைப் படமுமே தனது வாழ்வு என்று கொண்டிருந்திருக்க வேண்டும். அவரது மறைவு கேட்ட்தும் சில சிந்தனைகள்.

கதாநாயகனாகும் அல்லது பிரபலம் ஆகும் எண்ணமும், ஆவலும் நிச்சயம் அவரிட்த்தில் இருந்திருக்க வேண்டும். ஆவல் நிச்சயம் முயற்சி செய்ய தூண்டி இருக்கும். முயற்சி சில தோல்விகளை சந்தித்து இருக்க கூடும். நினைத்தது நடக்கும் முன்னே, அல்லது அது நிறைவேறும் முன்னரே மரணம் முந்தி கொண்டது.

வெற்றி பெறும் ஒரு மனிதன் / நாயகன் பின் தான் பொருளும், புகழும் ஏன் இலக்கியமுமே நடை பழகுகிறது. தோற்றவன் பின் யார் இருக்கிறார்கள்.
ஒருவன்!!! பல்லக்கில் ஏரி பவனி வர குறைந்த பட்சம் நால்வர் தங்கள் முகம் தொலைத்து சாதாரணன் ஆக வேண்டி உள்ள நம் சமூக கோட்பாடு புதிராய் உள்ளதே.

பல கோடி தொண்டன்களும் ஒரு தலைவனாகவும் உள்ள அமைப்பு மாறி, எல்லாரும் தலைவராக முடியுமா.

பிறக்கும் அத்தனை மனிதனும் தனது லட்சிய இலக்கு அடைய முடியுமா.

ஒரு சில பேர் மாத்திரம் இலக்கை அடையும் ரகசியம் தான் என்ன.

காமெடி – பொறுப்பில்லாத கோணங்கித்தனம்

ஒளி விளக்கு திரைப்பட்த்தில் ஒரே நேரத்தில் ஐந்து எம்.ஜி.ஆர் வந்து ஆடிப் பாடும் ஒரு அசத்தல் தத்துவ பாடல்.

ஒரு எம்.ஜி.ஆர். திரையில் வந்தாலே தாங்காத நம் ரசிகன், செய்வதறியாது திகைத்த தருணம்.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை நீதான் ஒரு மிருகம்”

பாடல் சிச்சுவேசன், நிறைய பேருக்குத் தெரியும், தெரியாதவருக்கு. இது டாஸ்மாக் மேட்டர். குடிக்கு அடிமையானவனை அவனது மனசாட்சி அதன் பாதகங்களை சொல்லுவதாய் அமைந்த பாடல்.

சிக்கென்று பளிர் உடையில், துறு துறு வென நடிப்பில், நறுவிசான நாகரிக உடல் அசைவில் (பாடி லேங்குவேஜ்- சூப்பர்) தூள் கிளப்பும் காட்சி அமைப்பு. ஆழ்ந்த அர்த்தம், எளிமை வார்த்தைகள், இனிய துள்ளலான இசை, திரையில் தூள் பரத்தும் காட்சி அமைப்பு என்று எல்லாம் நல்லதாய் அமைந்த பாடல். என் பேவரிட் என்றும் சொல்ல்லாம்.

அழுது வடிந்து கொண்டுதான் தத்துவம் சொல்லணும்னு இல்லை என புது டிரெண்ட் செட்டர்.

சரி இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். தலைப்பு பயங்கர கோபத்தில எழுதின மாதிரி இருக்கே என நினைப்பருக்கு, இதனுடன் தொடர்புடைய இன்னொரு நிகழ்வு இதோ.

ஒரு நகைச்சுவை மேடை நாடகத்தில், கதா நாயகனுக்கு வால் முளைத்து விடுவதாய் கதை. தனிமையில் புலம்பிக் கொண்டி இருக்கும் அவன் சென்று ரேடியோ ஆன் செய்கிறான். பாடல் ஒலிக்கிறது.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை.....
(இல்லையா!!! என அதிர்ச்சியில் டிராமா நாயகன் கவுண்டர் வசனம் தர.... அரங்கமே சிரிப்பில் அதிருகிறது)

நீதான் ஒரு மிருகம்”
சரியாக இந்த இடத்தில் ஒட்டை விழுந்த ரெக்கார்ட், இந்த ஒரு பத்த்தையே திரும்ப திரும்ப சொல்ல சலிப்போடு ரேடியோ ஆப் செய்கிறான்.

நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்து ரொம்ப காலம் ஆனது. மீண்டுமொறு நேரத்தில் ஒளிவிளக்கு பாடல் மறுபடி ஒலிக்க, எனக்கு ஆச்சர்யம். பாடல் வரி காதில் விழுந்து மனதில் எம்.ஜி.ஆருக்கு பதில் காமெடி கிங். தத்துவம் போயி காமெடி.

இது என்ன கலாட்டா. இத்தனை வருடங்களாய் ஆக்கிரமித்து இருந்த ரெபரன்ஸ் பாயிண்ட், மாறி விட்ட்தே. என்னைப் போல் ரசிகனுக்கும் இதே உணர்வு வருமே என்றவுடன் சட சட வென சில கேள்விகள்.

நமக்கு சொந்தம் இல்லாத அடுத்தவர் கற்பனையை அல்லது சிந்தனையை அவரின் அனுமதி இல்லாம, நாம் எடுத்துக் கொண்டு, முன்னவர் சொன்னதை அர்த்தம் திரித்து, அவரது நோக்கம் சிதிலமடைந்தால் நாம் அவருக்கு செய்யும் துரோகம் ஆகுமோ...

நிச்சயமாய் எந்த உள் நோக்கமும் இல்லாமல், சும்மா காமெடி தான் பண்ணியிருக்கிறார் என புரிகிறது. சும்மா.... காமெடிக்கு தான பாஸ், என்றாலும், சிரிப்பு வரும் என்பதால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா.
காமெடி செய்யும் போது கவனமாய் இருக்க வேண்டுமோ.

மனதை லேசாக்கும் சிரிப்பு அவசியம் ஆனாலும், வலுக்கட்டாயமாய் தினிக்கும் நகைச்சுவை வன்முறையோ.

நாட்டுக்கு தேவை நல்ல சிந்தனையா, சிரிக்க வைக்கும் காமெடியா..

கலைஞர்களுக்கு சமூக மாற்றும் சக்தி இருப்பதால், நமது ஒவ்வொரு நடையும் கவனமாய் இருக்க வேண்டுமோ.

கலைஞர்களுக்கு சமூக பிரங்ஞை மிக மிக அவசியமோ...

உன்னை போல் ஒருவன் - விமர்சனம்


திரைப் பட திட்டமிடலில் இரு வகை. வியாபாரம், பரிசோதனை.

ஏண்டா படம் எப்படின்னு கேட்டா நீ ஏண்டா கிளாஸ் எடுக்கிர என்று நீங்கள் நினைப்பதுவே எனது மனதிலும், இருந்தாலும் கேளுங்களேன்.

கதைன்னு புதுசா எல்லாம் யோசிக்காத, சேஃபா ஒடுன பட்த்த எடு, இல்ல பழைய படத்தில இருந்து சுடு. கதா நாயகனுக்கு நல்லா மேக்கப் போட்டு ஒரு பத்து இருவது வயச குரை. மார்க்கட்டில சூடான நாயகிய போடு. நடிக்க வெல்லாம் வேண்டாம். காட்டினா போதும் நடிக்கிற மாதிரி. பட்த்துக்கோ கதைக்கோ சம்பந்தம் இல்லன்னாக்கூட பரவாயில்ல, ஒரு காமெடி டிராக் போடு. ஒரு அஞ்சு பாட்டு, கேட்டா தீ பிடிக்கிற மாதிரி குத்தனும். இது ஒரு வகை. வெகு ஜனம் எங்கு இருக்கிறதோ, அங்கு போய் கும்மியடித்து விட்டு, காசு பார்ப்பது. நமக்கும் குடும்பத்தோட போயி பிள்ள குட்டிகளா பாக்கிறதுக்கு சேஃப்.

மற்றது, தனக்கு பிடித்த தளத்துக்கு கலைஞர்கள் போயி, நமக்கு பரிச்சயமில்லாத இட்த்துக்கு ‘எல்லாரும் இங்கே வாங்க’ என்று கூப்பிடுவது. இந்த படம் அந்த வகை.

மிகுந்த எதிர்பார்ப்பு இல்லாமை, பொறுமை, சரி போட்டத பார்ப்போம் எனும் மன நிலை உங்க்ளுக்கு இருந்தால்,

அல்லது நல்லா இல்லை பாஸ் என்று நண்பர்கள் சொன்ன பின் நீங்கள் பார்த்தாலோ,

கலை கண்ணோட்டம், கிரியேட்டிவா சினிமாவை பார்ப்பது உங்கள் பழக்கம் என்றாலோ,

மேற் கூறிய மூன்று பிரிவுகளில் நீங்கள் எதை சார்ந்து இருந்தாலும் உங்களுக்கு படம் பிடிக்கும், மூன்றில் இல்லை என்றால் பிடிக்காது.

கதை என்ன:
மும்பை திவிரவாத தாக்குதல் நடந்த நேரத்தில், என்.டி.டி.வி. ரிப்போர்ட்டர், கேட்க, ஒரு சாமான்யன் நரம்பு புடைக்க, உச்ச ஸ்தாயியில் சொல்வான். ‘அரசியல் வாதி வேண்டாம், எங்களிடம் இந்த நகரத்தை கொடுங்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டு நின்றார்களே, அது தான் கதை.

தீவிரவாத தாக்குதல் மிகுந்து வரும் இந்த காலகட்ட்த்தில் நமது சட்டமும், காவலரும் பின்பற்றும் ஆதிகால அணுகுமுறை வேலைக்கு ஆவாது. எப்போ எது நடக்கும் என்று தெரியாத இந்த சூழ்நிலையிலும், பயம் மேலிட நான் எதாவது செய்ய முடியுமா என்ற கேள்வியோடு வாழும் மத்திய தர வர்க்கம், என்னைப் போல், உன்னைப் போல் ஒருவன். (பேரு சரி இல்லை பாஸ், பிராண்டிங் பத்தி.... கமல்!!! தெரியாதவரா நீங்கள். அல்லது ‘பேர் சொல்லும் பிள்ளை, அல்லாம் இன்ப மயம் எனும் லெமூரியா பழக்க வழக்கம் இன்னும் போகலையா)

என் குடும்பம் இல்லாமல், என் இனம் மதம் இல்லாமல், சக மனிதனுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து கொதித்து எழும் புத்திசாலி மனிதன். சரி இவர் என்ன செய்கிறார். இரண்டு வாரம் வலை உலகில் மேய்ந்து பாம் செய்வது எப்படி எனக் கற்றுக் கொள்கிறார். கூடுதலாய் கைபேசி ஜாதகம் கண்டு பிடிக்கும், காவலர் பொறியை எப்படி ஏமாற்றுவது என்பதையும் உபரியாய்.
காலையில் கிளம்பி முந்திரிப்பருப்பு, கிஸ்முஸ், முருங்கைக்காய், தக்காளி வாங்கி விட்டு, பாதிக் கட்டிக்கிட்டு இருக்கிற ஒரு உயர்ந்த மாடியின் மேல் உட்கார்ந்து விட்டு, முதல்வர், கமிஷனர், சீப் செக்கரட்டரி கண்ணில் விரல் விட்டு ஆட்டுகிறார். என்ன எப்படி என்று சொல்லி நான் ஏன் பாவத்தை கட்டிக் கொள்கிறேன். நீங்களே படம் பாருங்கள்.

புதுமை.

கதையின் நாயகன் மோகன் லால், வில்லன் கமல். இல்ல சரியாத்தான் வாசிச்சிங்க, கமல் வில்லன்தான். கதா நாயகி இல்லை, கவர்ச்சி இல்லை, பாட்டு இல்லை, கதைக்கு தேவைப்படாத எதுவும் இல்லை.

நடிப்பு:

சலனப் படம் தொடங்கிய கால கட்ட்த்தில் பாடுவது நடிப்பு. பின்னர் நம்ம அண்ணன் சிவாஜி காலத்தில அழுவதும், அழ வைப்பதும் நடிப்பு.
கலகலப்பு, காமெடி, காதல் ரசம் இது எதுவுமே நடிப்பு இல்லை. இல்லைன்னா எம்.ஜி,யாருக்கு, ரஜினுக்கு நடிக்க வராது என்று சொல்வது எந்த வகையில் சேர்த்தி. கற்பனையிலோ, காகிதத்திலோ வடித்த கதாபாத்திரத்தை தன் மனதில் வாங்கி, சரிதான் இப்படித்தான் இந்த கதாபாத்திரம் இருந்திருக்கும் என ரசிகரை ஏற்றுக் கொள்ள வைப்பது முதல் படி, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, இன்ஸ்பிரேஷன் தந்தால் அது இரண்டாம் படி.

ஆனால் தமிழை பொருத்தவரை, தானும் அழாமல், அடுத்தவரையும் அழ வைக்காமல் இருந்தால் அது நடிப்பு இல்லை. படுக்காளி ரூட் மாறி மேட்டரு எங்கேயோ போகுது என தாங்கள் நினைப்பது போலே நானும் உணர்கிறேன். தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

அமைதியாய் அட்டகாசம் செய்ய முடியுமா. லாலேட்டனை அறிந்தவர் ஒத்துக் கொள்வார். மோகன் லால் தனது தேசிய விருது வாங்கித்தந்த சங்கத்திற்கு பிறகு பின்னியிருக்கிறார் என்பது தாழ்மையான கருத்து. சீன் ஸ்டீலிங்கில் ஸ்கோர் செய்வது மிக்க கடினம். அப்படி ஒரு ராட்சஸன் அவர். கொஞ்சம் அசந்தால் கூட நடிப்பவரை தூக்கி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு விடுவார்.

ஆனால் கமல் அவருக்கு ஈடு கொடுத்து ஒரு உக்கிரமான போராட்டம் நடக்கிறது. சீன் ஸ்டீலிங்கெல்லாம் ஸ்கீரினில் பார்த்து எத்தனை நாளாச்சு. கதா நாயகனும் வில்லனும் நேரில் சந்திப்பதே இல்லை, கடைசியில் பார்த்துக் கொள்ளும் காட்சியில் கூட, நீ யாரோ நான் யாரோ எனும் பாணியில் பேசி கொள்வது சூப்பர்.

தயாரிப்பாளர், சீனியர், என்ற பல் வேறு அந்தஸ்து இருந்தாலும், மோ.லாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, தனக்கு உள்ள சின்ன சீனானாலும் வாய்ப்பு கிடைக்கும் போது கொளுத்திவிடுகிறார் கமல். இல்லை என்றால் சண்டை போட இரு இளம் ஆக்‌ஷன் ஹீரோக்கள், ஒரு லால் என ஒரு எக்கச்சக்கமான களத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுவது என்பது, கமலுக்கே முடியும்.

மாற்றாத அதே சாதாரண உடை (படம் முழுக்க ஒரே சட்டை!!!! இதெல்லாம் நடக்குமா) மிகை இல்லாத அங்க அசைவு என நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

பத்திரிக்கையாளரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, திடிரென கோபம் பொத்துக் கொண்டு வர, வார்த்தை வராமல் உதடு துடிக்க ஒரு சில நொடிகள் மவுனமாய் இருக்க, லைன் கட்டாகி விட்டதோ என பதறி, ரிப்போர்ட்டர் ஹலோ ஹலோ என கேட்க, சற்றும் குறையாத கோபத்தோடு ம்.... ம்.... இருக்கேன் எனும் போது தியேட்டரே கைதட்டி அதிறுகிறது.

தன் நிலை விளக்கம் தரும் காட்சியில், கோபம், இயலாமை, பரிதாவம், பச்சாதாவம் என்பதை கலந்து அந்த குளோசப் பிரேமில் விளாசும் ஸ்டைல் கமல் ஏற்கனவே பல படங்களில் செய்து இருந்தாலும் திகட்டாத ஆஹாஸ்கர் நடிப்பு (ஆஸ்கர் என எழுதலாம், அவங்களுக்கும் பிடிப்பதில்லை, அவருக்கும் பிடிப்பதில்லை).

கர கர குரலில் முதல்வர் சொல்கிறார் ‘இதுக்கு எல்லாம் நான் பேசினா சரியா வருமா, நீங்களே பேசுங்க’ எனும் போது நமக்கு தோணும் ‘ஆமா கரெக்ட் தான’ இதுவே கமலிடம் லால் சொல்ல, ‘ஓட்டு வாங்கி கோட்டைக்கு போகும் போது, என்ன கும்பிட்டு எனக்காக சேவை செய்யுரேன்னு சொல்லிட்டு இப்போ இல்லையா’ எனும் போது கை தட்டலும் ஆஹா... ஒசையும் தியேட்டரை அள்ளுகிறது. வசனகர்த்தா முருகனுக்கு கை குலுக்கி பாராட்டலாம்.

போலீசுக்கு உதவும் டெக்னோகிராட், ரிப்போர்டர், லட்சுமி, தீவிரவாதி, இன்ஸ்பெக்டர் சிவாஜி என படம் முழுக்க இயக்குனரின் டச் டக்கர்.

இசை பற்றி ஞானம் எனக்கு இல்லை. பிரித்து பேச முடியாமல் இசை படத்தோடு கலந்து அவசியமானதாய் இருந்த்து என்று சொல்லுவேன்.

படம் ஓடுமா என கேட்டால், வெகு ஜனம் ரசிக்க வாய்ப்பு குறைவே. மிக நல்ல முயற்ச்சி. இன்னும் நல்லா செய்திருக்கலாமோ என ஒரு நினைப்பு வருகிறது.

மொத்த்த்தில் பாராட்டப் பட வேண்டிய படம், துணிச்சலான முயற்ச்சி, நல்ல நடிப்பு.

ஆறுதலான, ஆரோக்கியமான தமிழ் சினிமா வளர்ச்சி.

லோ கிளாஸ்


எங்கள் ஊர் அன்றைக்கு சந்தோசமாய் விடிந்தது. கோழி கூட அவசரமாக சோம்பல் முறித்து விட்டு, புது ராகத்தில் பாடியது. ஊரின் அத்தனை சுவர்களும் புதிய வண்ணத்தில் போஸ்டர் தாங்கியிருந்தன. பத்திரிக்கை விளம்பரம், ஊரெல்லாம் போஸ்டர், காதை கிழிக்கும் பாட்டு, தோரணங்கள் என அதகளம். மேட்டரு இதுதான். புதுசா இன்னிக்கு ஒரு தியேட்டர் திறக்குறாங்க.... பேரு மினி சார்லஸ்.
திரைப்படமும் தியேட்டரும் நம் எல்லோருக்கும் பிடித்தது தானே. விடலை பயலுக, ஸ்கூல் போற குட்டி பிள்ளைங்கன்னு மட்டும் இல்லாம, பெத்தவங்க பெரியவங்க எல்லாம் கூட குஷியா இருக்காங்க.

புது திரை, புது மெஷின், புது சீட்ன்னு சினிமா பாக்குறதே புது அனுபவமா இருக்கு. படமும் ரொம்ப தெளிவா தெரியுது, துடைச்சு விட்ட மாதிரி இருக்குடா.... அச்சு குண்டா நேர்லயே பாக்குற மாதிரி இருக்குடா. என நமக்கு முன் போய் வந்தவர் பெருமையாய் சிலாகித்து சொன்னார்கள்.

பர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் மெத்து மெத்துன்னு பஞ்சு வைச்சு தைச்சிருக்காங்கடா.

சிவப்பு கலர்ல, சூப்பரா இருக்குது என்றவனை அப்படியா என்றதற்கு.... தெரியும்டா நீ நம்ப மாட்டேன்னு... அதுக்குத்தான் இருக்கட்டுமேன்னு கிழிச்சி கொண்டாந்துருக்கேம் பாரு.... என ஒரு சின்ன பீஸ் காண்பித்தான் என் நண்பன். அடப் பாவி, கிழிச்சிட்டியா.. ஏண்டா இப்படி இருக்க... உன்ன மாதிரி எல்லாரும் தொடங்கிருவாங்களே....

படம் போரடிச்சா, சீட்ட போட்டு பிறாண்டி புடுவானுகளே என அக்கறையோடு சொன்னேன். மேலும் தொடர்ந்து, ஹும்... இன்னும் எத்தனை நாளக்கு இதை விட்டு வைப்பாங்கன்னு பார்ப்போம், என்ற என் கவலையில் உண்மை இருந்தது.
கண்ண மூடிக்கிட்டு பாட்ட கேட்டு பாரு, ஒரு குர்ரு சவுண்ட் / இரைச்சல் இல்லடா. என பல பல விமர்சனங்கள் புதிய தியேட்டரைப்பற்றி.

நிற்க, திரைக்கு நேர் எதிரில் நம் முதுகுப் பக்கம், பளிரென்று ஒளி வரும் ஆப்பரேட்டர் ஒட்டைக்கு பக்கத்தில் ஒன்று புதியதாய் கவனத்தை கவர்ந்தது. அது என்னடா புதுசா இருக்கே... கண்ணாடி போட்ட கூண்டு. என்னடா இது புதுசா, பார்த்ததே இல்ல என படுக்காளி கண் விரித்து பார்க்கிறேன்.

இன்றைய தலைமுறைக்கு இது புதுசு கண்ணா புதுசு. முழுவதும் செண்ட்ரல் ஏசி செய்யப்பட்டு, வர்க்க பேதமே இல்லாத இன்றைய தியேட்டர்கள் போல் அல்லாது, அதற்கு முந்தைய வேர்ஷன் தான் இந்த பார்ட்லி ஏசி....

தியேட்டரின் ஒரு பகுதியை மட்டும், குளிருட்டி ஒரு விண்டோ ஏசியில் மேட்டர முடித்த சமாச்சாரம் தான் இது. மொத்த இருக்கைகளே இருபது முப்பது தான். கும்மென்று குளிர், குந்தும் இடத்தில் கூடுதல் பஞ்சு. ஒரு 20% கூடுதல் கட்டணம். என்னதான் இருக்குது என்று சொல்லி நாங்களும் பார்க்க சென்றோம்.

நுழைந்தவுடனேயே, சில்லென குளிர், புழுங்கிய ஆனால் நல்ல ஒரு மணம். உடலும் மனமும் சிலிர்க்க ஒரு அற்புத அனுபவம். ம்.. சூப்பர். நல்லா இருக்குது. பார்வையை சுற்றிய போது, பூரா மேட்டுக்குடி ஆள்கள். நறுவிசாய் உடை உடுத்தி, நேர்த்தியாய் தலை சீவி, வாசனை திரவியங்களோடு பூமிக்கு வலிக்க கூடாது என்பதாய் மெதுவான நடை.

குடும்பமும் குட்டிகளாய் வந்தால் கூட, வால்யூமை மியூட்டில் வைத்தது போல் இருந்தது.
அதிர்ந்து பேசாமல், வாய் பிளந்து மீசைக்கு உள்ளேயே பேச்சுக் குரல்கள். அவர் பேசுவது அடுத்தவருக்கு கேட்காது. அமைதி.

சபை மரியாதை கருதி, நம்மளும் அமைதியாகவோ அல்லது மெதுவாகவோ பேச வேண்டிய நிர்ப்பந்தம். படம் போடப் போகிறேன் என்பதற்கு ஆப்பரேட்டர் தரும் சமிக்கை,
ஒன்று உண்டு. அதாகப்பட்டது, தியேட்டரின் சைடு விளக்குகளை அணைத்து விட்டு, நட்ட நடு செண்டரில் மையமாக (அடேயப்பா... ) ஒரு விளக்கை ஆன் செய்வார்.

திரை மூடியிருக்கும் அந்த வெல்வெட் ஸ்கீரினை இழுத்து பிடித்திருக்கும் குஞ்சம் விளக்கை எறிய விட்டு, ஒரு ஜக ஜக மியூசிக் கோடு மேலே தூக்கும். ஆங்... படம் போடப் போறாங்கடா என எல்லோரும் நிமிர்ந்து உட்காருவார். உணர்ச்சி வசப்பட்டு, கை தட்டி விசில் அடித்து ஆரவாரமும் உண்டு.
ஏசிக்குள்ளே.... அதே மியூட் வால்யூம் கண்டினியூ ஆகிறது. ஒரு சத்தமும் இல்லை, உச்சகட்ட ரியாக்‌ஷனாக நிமிர்ந்து சிலர் உட்காருகிறார்கள். அவ்வளவுதான். கீழே இதே செய்கைக்கு விசில் காது கிழியும், கை தட்டல் நிமிர வைக்கும். ஒ...... எனும் ஒசை கூட சில நேரம் உண்டு. கண்ணாடி கதவு வழி வரும் மெல்லிய ஆரவார ஓசை கேட்ட்தும் லேசாய் உதடு சுழித்து எரிச்சல் காட்டுவார். நம் ஏசிக்காரர்கள்.... கூடுதலாய்.... ’ஃப்ரெண்ட் பெஞ்ச் பிரெண்ட்ஸ்’ என்று அடுத்து அமர்ந்து இருக்கும் அவர் ஆளின் தோள் சாய்ந்து சொல்லுவார்.

படம் ஆரம்பித்த்தும் ஒரு சத்தம் கேட்காது. சிரிக்க வேண்டிய இடத்தில் புன்முறுவல் அதிகபட்சம். இல்லை என்றால் ஒரு பார்வை அந்த ஒரே பார்வை தான் படம் முழுக்க. யாராவது பக்கத்தில் உள்ளவர் அதிர்ந்து சிரித்தால், தலை திருப்பி பார்ப்பார், யாரு நம்ம ஹைகிளாஸ்,

முறைக்க கூட மாட்டார், உணர்ச்சியே இல்லாமல் ஒரு பார்வை சிரித்தவரை நோக்கி அவ்வளவுதான் ‘என்ன இது சின்ன பிள்ள தனமா இருக்கு’ என்பது அவரது பார்வையின் பொருள். ஏதோ சத்தம் போடாமல் அவர் போல் இருப்பது தான் சரி என்றும், சத்தம் வந்தால் அது கொலை குற்றத்துக்கு சம்மானது போலவும் அவர் நடந்து கொள்வார்.

சிரித்தவர் பாவம் டக்கென்று வாய் மூடிக் கொள்வார். வெற்றி பெருமித்த்தில் நம்மாள் திரையை வெறிக்க தொடங்கி விடுவார்.

அட போங்கப்பா, செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி இது என்ன இம்சை, என்று அடுத்த முறை லோ கிளாஸ் வந்து விட்டேன். ஆரவாரமாய் என்னை சுற்றிய சப்தம் புல்லரிக்க செய்தது. சிரிப்பில், அழுகையில், கை தட்டலில், ஏன் ஓ என்ற மறுதலிப்பில் என ரசிகனின் ரசனை புரிந்த்து.

தன் உணர்வை உரக்கச் சொல்லுபவன் யதார்த்த வாதி, கொடுத்து வைத்தவன். மற்றவர் உணர்வோடு தன்னையும் கலந்து கொள்பவர் மனித நேயம் மிக்கவர். ஊருக்காக, தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவன் துரதிருஷ்டசாலி.

தன் உணர்வை உரக்க சொல்லுபவன், சக மனிதனின் கூச்சல் எனை தொந்தரவு செய்யாது என நினைப்பவன், இன்னும் ஒரு படி மேலாய் அது எனக்கும் சொந்தமாகும் எனும் போது இது தான் பெட்டரோ.

நான் லோ கிளாஸ், மேலும் இப்படி இருக்கவே ஆசைப் படுகிறேன். நீங்கள் எப்படி.

அருணாவுக்கு சபாஷ் !!!! கோபிக்கு தேங்க்ஸ் !!!!

நண்பர் கோபியின் மின்னஞ்சல்:
நண்பர்களே
ஒரு தொடர் எழுத என்னை அன்புடன் அருணா அழைத்தார்கள்.. நான் எழுதி முடித்து விட்டேன்... அதன் தொடர்ச்சியாக, உங்கள் ஐந்து பேரையும் அழைத்து இருக்கிறேன்... (உங்களை முன்கூட்டியே கேட்காமல் உங்கள் பெயரை சேர்த்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்...). என்ன, முதன் முதலில் அழைக்கிறோம்... நண்பர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பிக்கைதான்...
தயவு செய்து இந்த தொடரில் கலந்து கொண்டு எழுதவும்...
தொட‌ருக்கான‌ விபரங்கள் இங்கே....

.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.html

நன்றி...


R.Gopi

பின் குறிப்பு : இதை எழுத உங்களுக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே தேவைப்படும்...

எனது பதில் :

அருணாவுக்கு சபாஷ் !!!! கோபிக்கு தேங்க்ஸ் !!!!

நீங்க சொல்லி தட்ட முடியுமா தலைவா....

சங்கிலித் தொடர்

மின் அஞ்சல் உபயோகிப்பவரா, ஆம் என்றால், இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. உங்கள் கணிணியில் வந்து இது குந்தும்.

உடனே இதை 5/10 பேருக்கு அனுப்பு. அனுப்பினால் வானம் பொத்துக் கொண்டு கரன்ஸி ஊத்தும், இல்லை என்றால் உன் கண் நொள்ளை ஆகும்.

பாவம் சில அப்புராணி ஆத்மாக்கள், இதை நம்பி அல்லது பயந்து சிரமேற் கொண்டு காரியம் ஆற்றும். எம்.எல்,எம். எனும் வர்த்தக டகால்டி கூட இது போல் உண்டு.

அருணா தொடங்கிய க....கா....பா.... அ..... கூட அந்த வடிவம் என்றாலும் சத்தானது, முத்தானது, நல்லது. வாழ்த்துக்கள்.

இதில் சங்கடம் இரண்டு.

ஒன்று : பதில் எழுதுவது. இது கூட ஒ.கே. எழுதிப் புடலாம்.

இரண்டு : ஐந்து பதிவர்களை தெர்ந்தெடுத்து அழைப்பு விடுத்து அவர்களையும் எழுத வைப்பது. இது தான் கொஞ்சம் உட்டாலக்கடி போல தோணுது.

முயற்சிக்கிறேன். படுக்காளி

பயங் கொள்ளல் ஆகாது பாப்பா

பதிவுக்கு பொருத்தமாய் இருந்ததால் பாரதியின் வரியை இரவல் வாங்கி விட்டேன். இல்லாமல் முதல் வரிக்கும் இதற்கும் சிநானப் பிராப்தி கூட இல்லை. மேலும் மூன்றாவது நான்காவது வரி தெரிந்து படித்து புரிந்து செய்யப்பாட்டு வினை ஆனால், ஆகும் டேமேஜுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

’சங்கர சங்கர சம்போ
இங்கே சாப்பிடாத பிள்ளை உண்டோ’

அடிக்குரல்ல இப்படி பாடிக்கிட்டு அழுக்கா வீடு வீடா ஒரு சாமியார் சுத்துவாரு. அவருக்கு, மண்டையிலும் தொண்டையிலும் கொண்டை. கக்கத்தில ஒரு துணி பை வைச்சிருப்பாரு அதுல சாப்பிடாத பிள்ளைய பிடிச்சிட்டு போயிருவாறு. சீக்கிரம் சாப்பிட்டுறு ராஜா.....

என்று ஆச்சி பயந்த மாதிரி நடித்துக் கொண்டே சொல்ல, எச்சி முழுங்கி விட்டு அரக்கப் பரக்க பார்த்து விட்டு படுக்காளி நானும் சத்தமில்லாமல் சாப்பிடுவேன். அப்போது வயது நான்கு இருக்கலாம்.

என்னை மட்டும் அல்ல, இந்த சங்கர சங்கர சம்போ சாமியார், மூன்று நான்கு தலைமுறையாய் எங்கள் குடும்பத்தை மட்டுமே டார்கட் பண்ணி, சுற்றி சுற்றி வருகிறார். சந்தோசமான ஒரு தருணத்தில் அப்பா அம்மா, ஆச்சி எல்லாம் சொன்னது. எந்த ஊருக்கு நாங்கள் சென்றாலும், ஏன் விமானம் ஏறி, சென்றால் கூட, சாமியாரும் விசா வாங்கி அங்கும் வந்து விடுவார். வயசு கொஞ்சம் பெரிதானதும் நானும் தேடு தேடு என்று தேடினேன். ஹுகும் கிடைக்கவே இல்லை. அந்த நாள் வரை. எந்த நாள் ????

பயங்காட்டும் பதவிக்கு படுக்காளியும் வந்த போது. அதாவது நான் தகப்பனாகி பிள்ளைக்கு அமுதூட்ட பணித்த போது. சும்மா இருக்குமா நம்ம புத்தி. என் பணி குழப்பமாய் சிந்திப்பதே என்று சூளுரைத்து விட்டு இதை பத்தி யோசித்த்து.

இது சரியா. ஒரு சோறு ஊட்டுறதுக்கு பிள்ளைய பயங்காட்டலாமா.

சுத்தி முத்தி பார்த்தேன். அக்கம் பக்கத்து வீட்டெல்லாம். காக்கா காட்டி, இரவில் நிலவ காட்டி கவனத்தை சிதறடித்து கவளத்தை ஊட்டும் ஒரு வகை தாயார்கள். ஆட் காட்டி விரலை வாய்க்குள் திணித்து பிளந்து மற்ற விரல்களில் உள்ள உணவை திணிக்கும் வன்முறை கோஷ்டிகளாய் சில தாய்மார்கள். என இரண்டு வகை பார்த்தேன்.

மூன்றாவதாக ஒரு புது முறை நான் பரிசோதித்து பார்த்தேன். பகுத்தறிவு வழி.

உண்ணும் நோக்கம் பயன்பாடு என்ற விசயத்தை சொல்லுதல். ம்கும்... வேலைக்கு ஆக வில்லை. பகுத்தறிவு பப்பு வேகவில்லை. பொறுமையும் இல்லை. சரி ஏன் வீண் வேலை என்று காலம் காலமாய் செய்ததை செய்தேன். வந்தார் நம்ம சங்கர சங்கர சம்போ சாமியார். அதே கொண்டை மண்டையிலும் தொண்டையிலும். அதே பை கம்கூட்டிலே. கை மேல் பலன். சட்டி சோறும் காலி, அடுத்தடுத்த நாளும் வேலை ஈசி.

நண்பர் கூட சொன்னார். ‘என் பையன், சேட்டை. தாங்க முடியாதப்போ இப்படி சொல்லுவேன். ”கூப்பிட்டுர வேண்டியது தான்”. ‘யார... கந்தசாமியவா...’ என பையன் பதிலுரைப்பான்.

கோழி தூவல் பறக்க, சுவரில் கால் பதிக்கும் கந்தசாமி, காற்றில் பறந்து பறந்து வரும் முகமூடி, நண்பரின் மகனுக்கு பீதி.

பயங்காட்டுவது எளிமையானது. நோக்கம் நல்லது என்றாலும் பசு மரத்து ஆணியாய் ஒரு பய உணர்ச்சி நல்லதா. அஞ்சுவது அஞ்சாமை பேதமை, என வள்ளுவர் வாய் மொழிந்தாலும் யாருக்கும் எதற்கும் அச்சமில்லை எனும் மனித ரவுத்திரம் நம் பிள்ளைகளுக்கு நல்லதோ.

சிற்றுலா – நிறைவுப் பகுதி

மான் கண்டேன் மான் கண்டேன்
மானே தான் நான் கண்டேன்,

நான் பெண்ணைக் காணேன்,

ராஜரிஷி படத்தில் வரும் அருமையான பாடல் வரி. நல்ல வேளை மிருக காட்சி சாலை போனதை முதலில் சொல்லி விட்டோம், இல்லை என்றால் லவுசு மூடுல இருக்கேன்னு தப்பால நினைச்சிருப்பீங்க. நாங்க நுழைஞ்ச உடன் பார்த்தது முதலில் மான்களை, அவ்வளவு தான்.

சரி ஒரு சிந்தனை. மானை அழகான பெண்ணுக்கும், ஆண் என்றால் - வம்பு தும்புக்கும் செல்லாத அப்புராணிக்கும் அல்லவா கூறுகிறோம். அது ஏன். காரணம் தேடி மனம் இந்த கேள்வியில் சிக்கிக் கொண்டது.

மான் தோற்றத்தில் ஒரு ஆட்டுக் கூட்டம். ஆடு போல பார்ப்பதற்கு, அதே போல் இருக்கும். நாலு காலில் ஒரு வளைந்த வாலில். தொல்லை செய்யாது மேயும், தானாய் வால் ஆட்டி, மேய்ந்ததை அசை போடும். மான் அழகாய் இருக்கும். பெரிய கொம்பு உண்டு, என்றாலும் குத்தாது.

சரி ஒரு பெண்ணை பார்த்து மான் போல் இருக்கிறாய் என்றால் மகிழ்வாள். ஆடு போல் இருக்கிறாய் என்றால் அடிக்க வர மாட்டாளா. அடிக்க வரும் காரணம் இதுவோ. குண்டான ஆடு உண்டு மான் இல்லை. எல்லாம் சிக்கென்று, அழகிய வடிவம் நிறம் கொண்டு நிச்சயமாய் இருக்கிறது. சரி, அது ஏன். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். இந்த பழமொழி இறைவனுக்கும் உண்டோ. ஆடு குண்டாக இருக்கிறது. திங்கத் தெரியாம தின்னுட்டு, தொப்பை எல்லாம் வைக்குது. விடை சொல்லாமல் கேள்வியோடு இதை விடுவது நல்லது என தோணுது.

மொத்தமாய் நான்கு மணி நேர நடை. அது ஏனோ தெரியவில்லை, சூவில் ஷு தேய நடக்க வேண்டி இருக்கிறது. ஒரு சோம்பேறி சிந்தனை, நண்பரிடம் ஆலோசனையாய் சொன்னேன். ஒரு வ‌ட்ட‌ வ‌டிவத்தில் இதை நிர்மாணிக்க‌ வேண்டும், ந‌ட்ட‌ ந‌டுவில் உண‌வ‌க‌ம், உட்கார‌ வ‌ச‌தி எல்லாம் இருக்க‌ வேண்டும், அடுத்த‌ சுற்றில் மிருக‌ங்க‌ள் இருக்க‌ வேண்டும். ந‌ம் ந‌டை ப‌ய‌ண‌ம் 10 நிமிட‌த்துக்கு குறைவாக‌வே இருக்க‌ வேண்டும் என்ற‌தும், ஏற‌ இற‌ங்க‌ பார்த்து விட்டு, உட‌ற் ப‌யிற்சி என்று தான் ந‌ட‌க்க‌ வில்லை, இப்ப‌டியாவ‌து ந‌ட‌வேன்.


நியாய‌ம். ச‌ரியான‌ அறிவுரை. ம‌ன‌தை கேட்டேன், உட‌லையும் கேட்டேன், பெரிய‌ துன்ப‌ம் இல்லை, நடக்கலாமே என்றது.

எது நடந்த‌தோ அது ந‌ன்றாக‌வே இருந்தது
எது ந‌ட‌க்கிற‌தோ அது ந‌ன்றாக‌வே இருக்கிற‌து
எது ந‌ட‌க்குமோ அது ந‌ன்றாக‌வே இருக்கும்

ஆஹா! நடை பயிற்சி பற்றி இந்த உபதேசம் கேட்டிருக்கீங்களா!

டார்வின் தியரி தப்பு என சொல்லக் கேட்டாலும், சரியோ என நினைக்க வைக்கும் அளவு நல்ல கூட்டம் குரங்கு கூண்டின் முன். செக்யூரிட்டியும் அங்குதான். கூண்டின் உள்ளேயும் வெளியேயும் நிறைய கருத்துப் பரிமாற்றங்களும், தொடர்புகளும். நமக்கும் வெகு சுவாரசியமாய் உள்ளது.

இந்த ஊர் சீதோசனத்தில் சொல்ல வேண்டிய முக்கிய விசயம் ஒன்று உள்ளது. ஈரப் பதம். நம் ஊரில் இல்லாத ஒரு தொல்லை இங்கு உண்டு. காற்றில் ஈரப்பதம் கூடியும் குறைந்தும் நம்மை சங்கடப்படுத்தும். குறைவான தருணத்தில் நம் உடம்பில் உள்ள ஈரத்தை உறிஞ்சி விடும். இதனால் வீட்டிற்குள் உட்கார்ந்து இருக்கின்ற போதும், பத்து கி.மி. நடந்தது போல கால் உளையும். உடனே சென்று நாலு கிளாஸ் தண்ணீர் குடித்து விடுவோம்.

பொது இடங்களில் நீர் துவாலைகள் உண்டு. வாட்டர் ஸ்பெரயர்கள் மூலமாய் பனித்துகள் போல் தண்ணீர் தெளிக்கப்படும். இங்கும் அப்படி ஒரு துவாலையின் அருகில் மனிதர் கூட்டம். நாங்களும் போய் சுகமாய் நின்று கோண்டோம். சாரல் போல விழுந்த துளி நின்றதும் மாயமாய் போனது.

நிற்கும் போது, இன்னோரு துணுக்குற்ற‌ ச‌ம்ப‌வ‌ம்.

சாரலில் நனைய விரும்பி ஒரு அரேபிய தம்பதியினர் ஒரு வ‌ய‌தே ஆன குட்டி பாப்பா என எங்கள் அருகே. குழந்தை ரோஜா பூ போல‌ இருந்த‌து. திடிரென்று சின்ன‌ வாய் திறந்து த‌ண்ணீ என்ற‌து. அரேபிய அப்பா பாட்டில் தந்ததும் குடித்தது. ஆடிப் போய் விட்டோம். பின்ன‌ர் க‌வ‌னித்த‌ போது கூட‌ அப்பா அம்மா அர‌பியில் பேசுகிறார்க‌ள். யோசித்து யோசித்து ம‌ண்டை காய்ந்து விட்ட‌து, சற்று நேர‌த்தில் ப‌ணிப் பெண் வ‌ரும் வ‌ரை.
ந‌ம்மைப் போல் நிற‌த்தில் வந்தவள் தமிழச்சியாக இருக்க சாத்தியம் இருந்ததால், த‌மிழ் மொழி ப‌ர‌விய‌ வித‌ம் க‌ண்டு பெறுமை கொண்டோம். எடி ஊர அப்பாக்களும், பங்கா ரப்பாக்களும் உணராத தமிழ் தண்ணீர் தாகம் அரேபிய அப்பாக்கு புரிந்து விட்டதே. அடங்கொம்மா....
........................ முற்றும்.

சிற்றுலா - பகுதி 1

வார இறுதியில் குடும்பத்தோடு ஒரு சிற்றுலா.
ஊர் சுற்றுலா!!!.

அல் அய்ன் மிருகக்காட்சி சாலை வரை ஒரு நடை போய் விட்டு வந்தோம். சின்ன சூ தான். நம் வண்டலூருக்கு பஸ் விட்டு இறங்கி மிருகக்காட்சி சாலை டிக்கெட் வாங்க செல்வோமே அத்தனை பரப்பில் கொஞ்சம் அகலத்தில் அவ்வளவு தான். என்ன!!! சுத்தம் கொஞ்சம் தூக்கலாய் இருக்கும். போய் வந்ததில் கால் வலி ஒரு உபரி பரிசு (இதுக்கேவா...). சூடு குறையும் முன்னே ஒரு பதிவு சுட சுட எழுதலாம் என அமர்ந்து விட்டேன்.

எங்காவது வெளியில் போகலாம் என்றதும் சினிமா, அம்முஸ்மெண்ட் பார்க்,கடற்கரை என நீளும் பட்டியலில் ஏனோ இறுதி இடம் தான், பாவம் நம் மிருக காட்சி சாலைக்கு.
நுழைவுக் கட்டணம் ரொம்ப கம்மி. எங்கேயும் எப்போதுமே குறைவு தான். ஊரில் கூட இதே நிலவரம் தான்.

சினிமாவின் கட்டணத்தில் 50%, நாடகம், இன்ன பிற நிகழ்ச்சிகளின் 25%, கேளிக்கை பார்க்குகளின் 10%. பெரும்பாலும் அரசே நடத்துவதால் இந்த விலை குறைவா என்பது தெரியவில்லை. என்றாலும் குடும்பத்தலைவருக்கு குஷி. பின்னே முட்டை போடும் கோழிக்கு தானே பிட்டி வலி தெரியும். கட்டணத்தை உயர்த்தி, பார்வையாளர் அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்கினால், நல்லா இருக்குமோ.

துபாயிலிருந்து 120 கி மி தூரத்தில் உள்ள அல் அய்னுக்கு 120 கி மி வேகத்தில் சென்றால் ஒன்று ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம். இதற்கு மேல் வேகத்தில் போக முடியாதா ரோடெல்லாம் நல்லா தான இருக்கு என்ற நினைப்புக்கு, தாராளமாய் அபராதம் கட்ட திராம் மரத்தில் காய்த்து இருந்தால் ஒ. கே. சாலை யோரத்தில் ராடார் உதவியுடன் காமிரா தயாராய் இருக்கும். வேகம் கூடி கார் வந்தால் ஒரு போட்டாவும் எடுத்து அபராதம் என நம் அக்கவுண்டில் ஏற்றி விடும். பியுஜைரா போகலாம் என்ற திட்டம் முதலில் வந்தது. போகும் வழி அன்றி போய் சேர்ந்ததும் பார்க்க பெரிதாய் ஒன்றும் இல்லையே என்ற நினைப்பே அல் - அய்ன் என முடிவானது.

மலை சுழ்ந்த வளைந்த பாதைகள் அடங்கிய டிப்பா வழி செல்லும் ஃபுஜைரா கூட ஒன்ற்ரை மணி நேரத்தில் செல்லும் தூரம் தான்.

போகும் வழியில் மொட்டையாய் பாலைவனங்களை பார்க்கலாம். சில நேரம் ஒட்டகமும் பார்க்கலாம். சாதுவாய் இருக்கிறதே அதனால் தொல்லை இல்லை என்றே கருதலாம். வாஸ்தவம் மிகுந்த சாது வான பிராணி. வாயில் விரல் விட்டா கடிக்க கூட தெரியாது. இருந்தாலும், சாலையில் அதை மோதி அது உங்கள் வண்டியில் சாய்ந்தால் நீங்கள் சட்டினிதான். பின்னே 250 கிலோன்னா சும்மாவா.

எதோ பூர்வ ஜன்ம புண்ணியத்தில் புழைத்தாலும், ஒரு ஒட்டகத்தின் இழப்புக்கு ஈடுகட்டும் தொகையில் நம் ஊர் ஒன்று பிழைத்து விடும்.

அல் - அய்ன் : ஏழு எமிரடேகளில் இதுவும் ஒன்று. பசுமை ஊர் என்றும், கோடை வாசஸ்தலம் என்றும் பெருமையாய் சொல்லும் இந்த ஊர் மூன்று நான்கு டீகிரிகள் மற்ற எமிரடேகளை விட குறைவே. பார்ப்பதற்கும் பச்சை நிறமே.

இரண்டு அதிசயங்கள் உண்டு. ஒன்று நிலத்தடி சுடு நீர். இயற்கையாகவே கொதி நீர் இருக்கும் கிணறு. வட நாட்டில் நிறைய இடங்களில் உண்டு. தமிழ் நாட்டில் இருப்பதாய் நியாபகம் இல்லை. மற்ற அதிசயம் வில்லங்கமானது. ஒரு மொட்டை மலையை எடுத்து அதில் பூராவும் தண்ணீர் குழாய் பதித்து, செடி நட்டு, பச்சை மலை ஆக்கி இருக்கிறார்கள் இந்த ஊர் பிரகஸ்பதிகள். இயற்கையாய் நிமிர்ந்து நிற்கும் பச்சை மலைகளை செயற்கையாய் உருவாக்கி நம் கண்ணுக்கு விருந்தாக்கி இருக்கிறார்கள்.

அல் அய்ன் வந்தாச்சு... உள்ள போவோமே...

தொடரும்....

மரணம் மலர்ந்தே தீரும்

மரணம் மலர்ந்தே தீரும்.

மண்ணில் பூத்த மனித மலர்கள் மணம் வீசி, மகரந்தம் உதிர்த்து விடை பெற்றே ஆக வேண்டும்.
வேறு மார்க்கம் இல்லை.

கடந்த சில மணிகளாய் அங்கலாய்த்த தேடல் பணி, விபத்து விடை பெற்றார் என முற்றுப் புள்ளியாகி விட்டது.
ந‌ம் இத‌ய‌ம் க‌ன‌க்கிற‌து.
ஆந்திரா தேசம் தனது முதல்வரை தொலைத்து விட்டு, கண்ணீரில் கரைகிறது.

ஏழைகளின் பங்காளன் என விவசாய மக்கள் கூறிய ஒய்.எஸ்.ஆர்., எத்தனை சினிமா கவர்ச்சி வந்தாலும் வெற்றி ஈட்டுவேன் என்ற காங்கிரஸ் கட்சியின் வெற்றி வீரர், வியாபாரம் சீர் பெற உதவிய குடும்பத் தலைவன் என பன் முகம் கொண்ட பர்சனாலிட்டி. இன்று வாழ்வு முடித்து ஒய்வு எடுக்கிறார்.

எதிர்பாராத‌ நேர‌த்தில் வ‌ருப‌வ‌ன் கால‌ன். எப்போதும் வ‌ர‌லாம், எத‌ற்கும் வ‌ர‌லாம். ம‌ல‌ராய் ம‌ண‌ம் ப‌ர‌ப்பி ந‌ம் இருப்பையும் சொல்லி விட்டு, ந‌ம் பெய‌ர் சொல்லி ச‌ந்த‌திக‌ள் விட்டு செல்லும் போது ந‌ம் வாழ்வு அர்த்த‌திற்கு த‌குதி பெறுகிற‌து.

அவ‌ர‌து ஆன்மா சாந்தி பெற‌ட்டும். அவ‌ரை இழ‌ந்து வாடும் குடும்ப‌ம், க‌ட்சி, அமைப்புக்க‌ள், ச‌ராச‌ரி குடிம‌க‌ன் எல்லாம் துக்க‌ம் குறைய‌ட்டும்.

இறைவா இற‌க்கும் முன் தெரிவேனா, இதெல்லாம் என்ன வென்று?
எத‌ற்கு என்று?