பக்கங்கள்

மிஸ்டர் எக்ஸ்…. வானொலி நாடக குறிப்பு…

 ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அன்பிற்குரிய நிகழ்ச்சி தயாரிப்பாளர் அழைந்திருந்தார்.

லாரன்ஸ்… நாடக விழா… வருசா வருசம் ஆல் இந்தியா ரேடியோவில நடக்கும்…. சிறப்பான வாய்ப்பு. இந்த முறை அறிவியல் புனைவு (Science Fiction) செய்யலாமென நினைக்கிறேன்.. நல்ல ஒரு நாடகம் எழுதுங்களேன்..

அதுக்கென்ன சார், செஞ்சிருவோம் என எப்போதும் இருக்கும் அதே பாசிட்டிவ் எனர்ஜியுடன் சொன்னேன்… உபரியாக… சார் எப்படி இருக்கணும் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்களேன்…

ம்..ஹூம்… தொண்டையை செருமிக் கொண்டு, சொல்லத் தொடங்கினார். அன்பு.. அன்பால மனிதர்களெல்லாம் நிறைஞ்சிருக்கோம்… ஆனா அந்த அன்ப நாம எல்லோரும் மறந்துட்டோம்… கோவை வானொலி நிலையத்துல ஒரு நாடகம் செஞ்சோம்… கதை என்னன்னா..ஹூயுமன் டி என் ஏ ஆராய்ச்சியில ஈடுபட்ட ஒரு சயிண்ட்டிஸ்ட்… அவன் காதலி… ஆராய்ச்சியோட ஒரு கட்டத்தில ஒரு விபத்து… மிகப்பெரிய விபத்து…

அவன் காதலி அந்த எந்திரத்தில விழுந்து கூழாகி, அவளோட ரத்தம் பூரா தெறிக்குது… அவளோட ரத்தம் சிதறும் அந்த தருணத்தில் இவன் கண்டுபிடிப்பும் நிறைவு பெறுதுன்னு…. ஒரு மேட்டர்…
இந்த ட்ராமா நல்லா வந்துச்சு… அது மாதிரி நல்ல தத்துவமா அறிவியல் சார்ந்து எழுதுங்க....

அவரே ஒரு சிந்தனையாக இப்படி சொன்னார்.

சேக்ஸ்பியர் கருத்துப்படி…. ஒரு அபரிமிதமான இழப்பு அல்லது சோகம் தான் ஒரு கதை அல்லது இலக்கியம் என முத்தாய்ப்பாய் சொல்லி முடித்தார்.


நானும் வெளி வந்து சாந்தோம், கடற்காற்று முகத்தில் அடிக்க புல்லட்டை துவக்கி ஓட்ட ஆரம்பித்தேன்… கதை என்னுள் உதயமாக துவங்கியது. ஆனால் நம் கதை எப்போதுமே என்னுடைய வேல்யூ சிஸ்டம் பேஸில் தானே பயணிக்கும்... அப்படி ஒரு அக்மார்க் என் பாணி சிந்தனையில் ஒரு கதை ஓடத் துவங்கியது.

நான் கதை எப்படி அமைக்கிறேன் என தெரியாது. அந்த செயல் புரியாது. என்ன அதிசயம் எப்படி நடக்கிறது என தெரியாது… 

எனக்கே புரியாத விந்தை இது… கதை எப்படி உருவாகிறது… திரைக்கதை எப்படி அமைகிறது… வசனங்கள் எப்படி வந்து அமருகிறது என்று புரிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்… ஆனால் இது வரை புரிந்ததில்லை…

கதை எழுதும் சூட்சமும் தெரியாது… ஆனால் அது தானாகவே நடக்கும்…. பிரபாகர் எனும் சராசரி நான் ஒதுங்கி கொண்டு, இலக்கியம் தன்னை எழுத.... நான் சம்பதிப்பேன். என் மனம் ஒரு நிலைக்கு செல்லும்… கடகடவென வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாய் அணி வகுக்க துவங்கும்… அப்படியே வந்து வசனங்கள் கொட்டத் துவங்கும்…

இன்றும் அப்படித்தான்.
அறிவியல் புனைவு… ராக்கெட்…. ராக்கெட் லாஞ்ச்…  கவுண்ட் டவுண்… இரைச்சல்….

சக்ஸஸ்… சக்ஸஸ்… ப்ரெண்ட்ஸ்.. இப்ப நாம விண்ணுல ஏவியிருக்கிற இந்த ராக்கெட் ஒரு அற்புதம்… ஒரு மாபெரும் சக்சஸ்…. இந்த மனித குலமே மாறப்போகுது….

வீடு வரும் வரை ஒரு 20 நிமிட கதை ஓடி விட்டது. வீட்டுக்கு வந்ததும் மடிக்கணினியில் அத்தனையும் தட்டினேன்…

மனதில் ஓடும் வெர்ஷனை துணை கொண்டு, வார்த்தைகளாக்கும் அடுத்த கட்ட செயல். இது அடுத்த வடிவம்…. இது மனதில் ஓடிய வெர்ஷனின் ஒரு பூசப்பட்ட ஒரு வடிவமாக இருக்கும்…

இப்போது எழுதும் போது இப்படி ஆரம்பிக்கிறேன்…

காட்சி 1

 இந்தியன் ஸ்பேச் ரிசர்ச் செண்டர்
பாத்திரங்கள் : எம்.கே.. சீஃப், மினிஸ்டர், மற்றும் குரல்... குழு....

மினிஸ்டர் கார் சைரன்…. கார்கள் வரும் ஓசை.. குழு…கும்பல் சத்தங்கள்
குரல்
மினிஸ்டர் வர்றாரு..  மினிஸ்டர் வர்றாரு… கொஞ்சம் வழி கொடுங்க…
மினிஸ்டர்
(புன்னகைத்தபடி) வணக்கம்…வணக்கம் வாழிய நலம்
சீஃப்
வெல்கம் டூ இந்தியன் ஸ்பேச் ரிசர்ச் செண்டர்… வாங்க சார் வாங்க… உள்ள போகலாம்…. திஸ் வே….

கடகடவென ஒரு 20 பக்கங்கள் ஓடி விட்டன…. 4 காட்சிகள் முடிந்தது. துணைவியார் வந்து என்ன பிசியா என்ற போது… நிமிர்ந்து பார்த்து… வேலையிருக்கா… இல்லன்னா உக்காரேன். என சொல்லி எழுதியதை வாசித்தேன். ம்..ம்… என கேட்டவர்… நான் முடித்தவுடன்… ம்.. அப்புறம் என்னாச்சு என்றார்… இல்ல இவ்வளவுதான் தெரியும் இனிம யோசிக்கணும் என்றேன்…

எழுந்து செல்லும் முன் திரும்பி…ம்.. நல்லாயிருக்கு… தொடர்ந்து எழுதுங்க என ஒப்புதல் தந்தும் சென்று விட்டார்.

அடுத்த நாள் காலை, அலுவலகம் வரும் பயணத்தில் மீண்டும் அடுத்த பாதி நாடகம் ஓடியது. அன்று இரவில் அடுத்த பகுதியையும் அடித்து முடித்து விட்டேன்…

அப்புறம் மறந்து போயிற்று… வேறு வேலைகளிலும், அலுவலகத்தின் பணிகளிலும் ஆழ்ந்து போனேன்… இது மறந்து போயிற்று.

நான்கைந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆல் இந்தியா ரேடியோவில் இருந்து ஃபோன். என்ன லாரன்ஸ்… ஏதாச்சும் யோசிச்சீங்களா… சினாப்சிஸ் மட்டும் கொடுங்க… எழுதுறது கூட டைம் எடுத்துக்கோங்க….

பேச்சின் ஊடே ஒரு தகவலை கேட்டதும் சுரிர் என்று இருந்தது. இல்ல ஆர்னிகா நாசர் கிட்ட தான் முதல்ல கேட்டேன். அவர் சிதம்பரம், அதனால பாண்டிச்சேரி ரேடியோவில கொடுக்க சொல்லிட்டேன்… டெக்னிக்கலா எழுதணும், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா யோசிச்சு எழுதணும், அதான் உங்ககிட்ட கேக்குறேன்… என்றதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

என்னது நான் ஆர்னிகா நாசருக்கு ஆல்டர்னேட்டிவ்வா.. சே.. அக்கறை இல்லாம அலட்சியமா விட்டுட்டோமே… என மீண்டும் அன்றிரவு வந்து சுருசுருப்பாக வேலையை தொடங்கினேன்…

இது வானொலி நாடகம். எனவே, ஒலியில் மட்டுமே…. கதை சொல்ல வேண்டும். அதனால் நான் ஒரு ரேடியோ லிசனராக உருமாறி, முதல் முறையாக கதை கேட்பது போல், அமர்ந்து கொண்டு கேட்பேன்… அல்லது வாசிப்பேன்….

எப்படி ஒரு டகால்ட்டி பாருங்க…. 

இருந்தாலும் இதையும் சும்மா ஒதுக்காமல் என்ன என யோசிக்கிறேன். ஆனாலும் இது ஒரு மெடிட்டேட்டிவ் ஸ்டேஜ் என்றே தோன்றுகிறது. அதாவது தற்காலிகமாக, நான் என்னை மறந்து என் படைப்பை மறந்து, ஒரு சாமான்ய ரசிகனாக அமர்ந்து வாசிக்க துவக்குவது.

ஒரு நேயராக வானொலி நேயராக எனக்கு புரிகிறதா... புடிக்கிறதா என பார்ப்பேன். இதுவும் செய்து முடித்த போது, சில சின்ன சின்ன டெண்டிங்க் பெயிண்டிங்க் வேலை அவசியமாக இருந்தது..... ஸ்கிரிப்ட்டுக்குத்தான்.

உதாரணத்துக்கு…….. ‘ஹலோ நான் தான் எம்.கே பேசுறேன்’……… ‘மாப்பிள்ளை அந்த பேக் அ இங்க கொடுங்க… நீங்க முதல்ல உள்ள வாங்க’……… என்பன போன்ற……….. சில பிர்காக்களை சேர்க்க வேண்டியதாயிற்று...

மொத்தமாக முடித்து……………. அடுத்த நாள் ஆல் இந்தியா ரேடியோ சென்றேன்… உணவு இடைவெளி … ப்ரொடூயூசர் சாப்பிட்டு கொண்டிருந்தார்…. அப்புறமா வரேன்..சார் என நான் சொல்ல…

பரவாயில்ல… வாங்க… உள்ள வாங்க….. லாரன்ஸ்… நீங்க சாப்பிட்டுட்டீங்கன்னா… ஃபைன். உக்காருங்க… சொல்லுங்க சினாப்சிஸ் கேப்போம் என்றார்.

நான் மெதுவாக ஸ்கிரிப்ட் எடுத்து… அவர் முன் நீட்டி… முடிச்சுட்டேன் சார்..
கொஞ்சம் நம்பாமல்… முடிச்சுட்டீங்களா.. ஃபுல்லா … தேங்க்யூ… தேங்க்யூ… சரி கதை சொல்லுங்களேன், என்றார்.

ஸ்கிரிப்ட்டை எடுத்து கையில் வைத்து கொண்டு, சொல்ல துவங்கினேன்.... ஒரு 20 நிமிடத்தில்… ஃப்ளோ சொன்னேன்… வசனங்களை அவ்வப்போது துணைக்கு வைத்து கொண்டு, விருவிருவென சொன்னேன்... அவரும் இடை மறிக்காமல் கேட்டார். கேட்டவுடன் திருப்தியாய் தலை அசைத்தார்.

ஹூம்… நல்லாயிருக்கு……. அந்த மிஸ்டர் எக்ஸ்… மனசாட்சின்னு ஒரு லிங்க் பண்ணியிருந்தீங்கள்ல அது பிடிச்சுச்சு…. என்றார்…

இன்று ஒலிப்பதிவு சமயத்தில் நடித்த கலைஞர்கள் கூட ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்.. கொஞ்சம் காம்பிளிக்கேட்டட்….. பட்… நல்லாயிருக்கு என்றார்கள்’

காமெடி நல்லாயிருக்குது, சரியான விகிதத்துல…. எமோஷன், தத்துவம், காமெடி எல்லாம் கலந்திருக்குது… என பாராட்டினார்கள்.

பார்ப்போம், ரசிகர்கள் என்ன சொல்லவிருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள, 30ம் தேதி மே வரை காத்திருக்கிறேன்…. 

சிறுகதை - எதிரொலிகள்....

எனக்கு கவிதைகள் மேல் ஒரு சிறு கோபம் உண்டு்…..

கவிதையின் குணங்கள் அப்படி. அதன் இயல்பு அப்படி. ஒரே நேரத்தில் ஒரு மனிதனை கவிழ்த்து போடும் வலு அதற்கு உண்டு…. ஒரு வரியில், ஒரு மொந்தை கள்ளை அளி(ழி)(விழ்)த்து, மேகத்தில் அலைய விடும் வினயமும் உண்டு, சுடு நீராய் கண்ணீரை பிரசவித்து, ரத்தம் சுண்ட நரம்புகள் புடைக்க உணர்வை தூண்டும் தூண்டிலும் உண்டு…

கவிதை மேலுள்ள கோபத்தில் கவிதையை திட்டி கவிதை எழுதினேன்….

கவிதை கண் ராவி 

கவிதை கண்ணாடிகள் போல.......     முன் வந்து நிற்கும் உருவம் காட்டும் முகமூடி.......

மொட்டை வார்த்தைகளை   மொட்டாய் பூக்கும் பூச்செடி

நம்மில் இருந்து அர்த்தத்தை களவாடும்,    அற்புத விளக்கு பூதம்........

ஓஹோ… கவிதைகளில் இப்படி ஒரு அவஸ்தை இருக்கிறதோ….. ஒவ்வொரு வாசகருக்கும்... கவிதைகள் பிரதிபலிக்கும் அர்த்தம் வேறு வேறாய் இருக்கிறதோ… ஆங்… கட்டுரைகள் செல்லக் குட்டிகள்: என்ன ஆசிரியர் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதிபலிக்கும் என நான் கருதியதுண்டு.

கதைகளை கட்டுரையின் குடும்பம் (சேம் ஃபேமிலி) என நினைத்திருந்தேன்… அவை வேற்று சாதி என்பது எனக்கு நேற்று புரிந்தது….!!!! கதைகள் கூட பூனை போல், புனைவுகளை பிரசவிக்கும் என இப்போது தெரிந்து கொண்டேன்….

சமீபத்தில் எழுதிய தனிமை கதை எதை பற்றி பேசுகிறது என இரு கருத்துக்கள் சொல்லப்பட்டன, ஆனால் அவைகள் நான் நினைத்தவை அல்ல…. !!!! இந்த தனிமை கதையின் ஒற்றை வரி என்னவோ என கேட்ட போது, இரு கருத்துக்கள் வந்தன…

1.   இக்கரைக்கு அக்கரை பச்சை… இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது என ஒற்றை வரி தாக்கமாக ஒருவர் சொல்ல
2.   சம்சாரத்துக்கும், சாமியாருக்கும் நடக்கும் போராட்டத்தில், சம்சாரம் வெல்வதாக இன்னொரு தாக்கமும் சொல்லப்பட …..

நான் கொஞ்சம் திகைத்தேன்… மேற்கூரிய இரண்டுமே மிக நல்ல கருத்துக்கள், ஆம், இக்கதையின் கொள்வுகளாக கொள்ளக்கூடியது என்றாலும் நான் சொல்ல வந்ததை, தெளிவாக சொல்லி விடலாமே என அமர்ந்தேன்… 

நான் சொல்ல விளைந்தது…….. Breathing space பற்றி………….

இது ஒரு நுண்ணிய விஷயம். இதை புரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் மிகுந்த அவசியம் இருக்கிறது… அதிலும் குறிப்பாய் உறவுகளிடத்தில் உரசல்கள் ஏற்பட முக்கிய காரணி இந்த Breathing space தான்.

நீ என் பொண்டாட்டி தான, அப்ப உனக்கு வர்ற மெயில் பூராத்தையும் எனக்கு காட்டு என்பது, வன்முறை. என் புருசன் தான நீ, அப்ப வீட்டுக்கு வந்ததில இருந்து, என்னை சுரண்டிகிட்டே இரு, என மூக்குக்குள் விரல் விட்டு ஆட்டினாலும் வன்முறை.

அன்பு அமைதியானது, ஆர்ப்பாட்டம் இல்லாதது, ஆக்கபூர்வமானது….. அது அடுத்தவரை உரிமைப் படுத்த நினைக்காது… ஒரு மௌனம், ஒரு பேசாத வார்த்தை இவைகள் தான் அன்பின் அடித்தளம்.

எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், ஆனால் எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் …………

உறவில் வெகு ஜன பிரச்சனையே இதுதான்… ஏன் எங்கிட்ட சொல்லல, ஏன் எங்கிட்ட மறைச்ச என நம் எதிர்பார்ப்புக்கள் அத்துமீறலையே பிரசவிக்கின்றன. அன்பை பிரதிபலிப்பதில்லை. சொன்னத கேட்டுட்டு, ஜடமாய் இருப்பது அல்ல உறவு.

ஆனால் நம்மில் பலர், காஸ்ட்ட்லி எல்.சி.டி. மாதிரி காட்டிக் கொள்ள ஒரு பொம்பள, எனும் ரீதியில் தான் பெண்டாட்டியை நடத்துகிறது.

இக்கதையில் வரும் நாயகன் நாதன், மூச்சு விட….!!!! நேரமில்லாமல் உழைக்கிறான். தன்னுள் ஆழ சென்று, தன் சுய விருப்பு வெருப்புக்களை அவதானிக்க முடியாமல் தவிக்கிறான். அதனாலேயே அதில் அன்னியத்தை உணர்கிறான். அந்த அழுத்தத்தில் தன் அடிப்படையை உரசுகிறான்.

ஆத்து மீனில் கூட, அவன் ஆம்படையாளை நினைக்கிறான். கவிதை எழுதுவதை விரும்புகிறான். நயம் இட்லி சாம்பாரை விரும்புகிறான். அவன் தன் மனித இயல்பாய் இருக்கிறான்….. அல்லது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான், அந்த நாதனை ஒரு மாதம் ஃபண்ட் மார்க்கெட் பக்கம் போகாமல் இருக்க சொல்லி, தாமிரபரணியில் மீன் பிடிக்க சொன்னால்…. துள்ளி எழுந்து ஓடி விடுவான்….

அப்படியென்றால் அவன் தேவை என்ன… அவன் விரும்புவது எதை… தனிமையை… தன்னுள் சென்று தனக்கு இதமானது எது.. தான் விரும்புவது எது என கேட்பதை… அபாயகரமாக, அவனுக்கு இந்த சமூகம் அதை தரவில்லை.. அதனாலேயே ஓடி ஓடி எதையோ தேடுகிறான்… அவனுக்கு தேவையானது அவனது வீட்டிலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது… என்ன ஒரு அசௌகரியம்… அது அவனுக்கு கைக்கு அருகில் இருந்தும், சுயம் விளக்கம் கிடைக்காததால், அர்த்தம் கிடைக்கவில்லை… என அலைகிறான்.

உறவுகள் தான் நம்மை உலவ வைப்பது, உழல வைப்பது. தன்னைப் போல, உறவில் தெளிவு கொண்டு, துணை தேடும் அந்த திரு நெல்வேலி அண்ணாச்சியில் தெளிவு பெறுகிறான் என கதை அமைத்தேன்... 

மனித இயல்பு என்றும் மாறுவதில்லை…

ஹா…ஹா…. உண்மை இதுதான்…. கூடி வாழும் இயல்பினனே மனிதன்……….. எக்காரணத்தை சொல்லியும், தனிமை தேடுபவன் மிருகமே……….. நிரந்தர தனிமை தேடுபவன் மிருகமே... அது என்லைட்மெண்டே ஆனாலும் கூட……………..!!!!!  போ.. தனியாக போய், தனக்குள் இரு... பின்னர் வா என்பதே மனித வாழ்க்கை என்பது என் ஸ்கூல் ஆப் தாட்...

சுய தேடல் மறுதலிக்கப்படும் போது, மதம் கொள்ளும் மடமை நம்முள் இருக்கிறது…. அது தவறான சில தாக்கிதுகளை சொல்கிறது.

சரி…… இப்போதாவாவது நான் சொல்ல நினைத்ததை சொன்னேனா… அல்லது… குட்டையை இன்னும் குழப்பி விட்டேனா….

யப்பா….. முடியல… இப்பவே கண்ண கட்டுதே………………………….. குட்டை குளப்பி குட்டையை குளப்பி........ மீன் கண்டு பிடித்து...... சரியாக மீன் பிடிக்கும் போது, அது கை நழுவி செல்வதை சொன்ன கதையே கீழ்க்காணும் சல்ஃபா கதை...

நம் ஆளுமையை தீர்மானிக்கும் கருத்துக்கள்..... நம்முள் கருதுகளாகத்தான் நுழைகின்றன.... இந்த கருதுகள் எந்த சூழலிலும், எந்த காலகட்டத்திலும் தலை குப்புற வீழும் சாத்தியங்கள் இருப்பதால்... நாம் மாறத்தயாராய் இருக்கிறோமா.... மாற்றத்தை உடுத்தி கொள்ள ரெடியா என்பதே சல்ஃபா...


தனிமை (சிறுகதை)

அண்ணாச்சி… நீரோட்டம் இந்த பக்கமாவா இருக்கு…
ஹாங்… இங்கிட்டு பாவ நாசம், அங்கிட்டு திருச்செந்தூர்…

கேள்வி கேட்ட, நாதன், நாற்பதுகளின் மத்திய வயதில் இருந்தான், அவன் ஒரு இயற்கை நேசி. திருநெல்வேலி பூர்வீகம், இப்போது பொழப்பின் காரணமாக, அமெரிக்காவில் இருக்கிறான். அமெரிக்காவில் வெற்றிகரமான பிசினஸ் மேன். பங்கு சந்தை பற்றி அனைத்தும் அறிவான், ஃபண்டுகளிடையே பல்லாங்குழியே ஆடுவான். எளிமை, ஆழம், ரௌத்திரம், தத்துவம், நக்கல் என கலவையான களேபரமான குணாதிசயங்கள். வீடு, பெண்டாட்டி, குழந்தை குட்டிகள் ஊர்வன, ஓடுவன நீந்துவன என இன்றைய உலக தராசில், காம்பேர்ட் இண்டெக்ஸில் அவன் முண்ணனியில் இருப்பான். கையில் சொளவு போல ஐ பேடை எடுத்து அவன் அமுக்க துவங்கினால் அவனியெல்லாம் அத்துபடி… ஆனால் இன்று கையில் செலவுக்கு மட்டும் காசு எடுத்து கொண்டு, ஆண்டிப்பண்டாரம் மாதிரி, தாமிரபரணியில் குளித்து கொண்டிருக்கிறான்.

அத்தனை அமெரிக்க பளபளப்புக்கள், ஆடம்பரங்கள் இவைகளின் நடுவில் அவன் அனாதையாகவே உணர்கிறான். அவைகள் அவனுக்கு அன்னியமாகவே தெரிகின்றன. In an effort to understand market sensitivity, we have made slighter adjustments…………. என அவன் பேசுவான் ஆனால் உள்ளுக்குள் ஒட்டாது.

என்றோ வாசித்த லிண்டா குட்மேன் சொன்ன அவனைப்பற்றிய சித்தாந்தம் அவன் வரையில் சரி என பட்டது… என்னதான் கூட்டத்தில் சகஜமாக இருந்தாலும், தனிமையை விரும்பும் நபர் விர்கோ.. நால்வர் மத்தியில் இருக்கும் போது, அவர்கள் சங்கோஜமாகவே இருப்பார்கள் என வாசித்ததும் பிடித்தது.

இப்போது, அவன் இருப்பது, திருநெல்வேலியில். குளித்து கொண்டிருக்கிறான். பக்கத்தில் இருப்பவரிடம் தொடர்பில் இருக்க, அவர்கள் இருவரையும் தாமிரபரணியின் நீர் இணைந்திருந்தது.

காலில் ஆற்று மீன் சுதந்திரமாக விளையாடியது. ஆரம்பத்தில் பயம், மீன் வந்து தொட்ட போது, ஒரு மாதிரியாக இருந்தது. குட்டிப் பல் வைத்து, மீன்கள் மொய்க்க தொடங்கிய போது, பெரும் அவஸ்தையாக இருந்தது. கால் மாற்றி, கால் மாற்றி நின்றான். மீன்கள் விடுவதாக இல்லை, வெளியில் போய் விடலாமா என எண்ண வைக்கும் அளவுக்கு மீன்கள் தொல்லை…. மனதில் கவிதை ஓடியது…

ஆத்து மீனு கடிக்கையிலே…. ஐலேசா… ஐலேசா….
ஆத்துக்காரி உன் நினைப்பு…….. ஹை…. லேசா… ஹை லேசா…
குறுகுறுப்பு கூசுது …. ஐலேசா… ஐலேசா…
நாஞ்செய்யும் குறும்பு கஷ்டம் இப்ப புரியுது… ஜலேசா..ஜலேசா…

கவிதை வரியை மனதிற்குள் சொன்னவுடன், நாதன் வெட்கப்பட்டான். ஹூம்… குறுகுறு மீசையை வைத்து கொண்டு ஆடும் ஆட்டம் … கொஞ்சம் குறைச்சுக்கணும் என யோசித்தான். அதே நினைப்பில் கூடுதலாய் வெட்கப்பட்டான். அருகில் குளித்து கொண்டிருந்த அதே ஆளிடம்,,,,

இது என்ன மீனு
ஹாங்.. .கெண்டை..
ஓ… பயங்கரமா கடிக்குது…
ஆங்…
ஏன் உங்கள கடிக்காதோ…
லேசாய் சிரித்தபடி…. நாளாச்சுல்ல …. பழகிருச்சு…

நாதன் மீண்டும் உள்ளுக்குள் சென்றான். இன்னொரு பாட்டு வரியை சேர்த்தான்…

ஆரம்பத்தில் அவஸ்தை தானே …. தில்லே லோ லேலோ…
அத்தான் இப்ப அது இன்னும் வேணும் . ஜில்லேலோ… லேலோ….

குளித்தான்,  நன்றாக குளித்தான்… தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சு முட்டும் வரை அங்கேயே இருந்தான். அதே தண்ணீரை குடம் குடமாக குடித்தான். ஒன்றிரண்டு எப்பங்களை சத்தம் போட்டு விட்டான். குளிர்ந்த நீரும், ஓடும் நீரும், அவனை சுத்தப்படுத்த…. இன்னும் இன்னும் என குளித்துக் கொண்டிருந்தான்.

அண்ணாச்சி… டிபன் இங்க எங்க நல்லாருக்கும்…
பஸ் ஸ்டாண்டுல…
இல்ல… இல்ல…….. பெரிய ஹோட்டல் வேண்டாம்… மெஸ் மாதிரி…. வீட்டு சாப்பாடு நல்ல கை மணத்தில…..  நாதன் நினைத்த போதே அவனை கேட்காமல் நாக்கு வாய்க்குள் மிதந்தது.
ஓ… சைவாள் மெஸ் இருக்குது…
எங்க
வாங்க காமிச்சிட்டு போறேன்…

அதனாலேயே குளித்து முடித்து விட்டு, வெளி வந்தான். முதுகுப் பையில் தூவாலை எடுத்து, தலை துவட்டி விட்டு, உலர் உடுப்பில் புகுந்தான்… ஈர ஜட்டியை பிழிந்து, தலைமேல் தொப்பி போல அணிந்து கொண்டான். அவன் கணக்கு, ரோடு எட்டும் போது, ஜட்டி காய்ந்து விடும்…. அவரோடு இணைந்து நடக்க துவங்கினான். மெல்லிய விசாரிப்புக்கள், பரிமாறல்கள்,

நாதன் தன் முழு அடையாளங்களையும் சொல்லாமல்…………. அதே நேரம் பொய்யும் சொல்லாமல் டிப்ளோமேட்டிக்காக பேசி வந்தான்….

தம்பிய பாத்தா இங்கன மாதிரி தெரியலியே
ஏங்க…… உங்கூருங்க எனக்கு……… என் பாஜை தெரியலியா
ஹே….. பாஷை சரி, ஆனா பாக்ஸர் ஜட்டில போடுறீக…
ரிடைல்ல, பாக்ஸர் இங்க வரைக்கும் வந்துருச்சு. இல்லியா…
சரக்கு இருக்கு... ஆனா வாங்க தம் வேண்டாமா... தம்பி என்ன ஜோலி
ம்… ஒரு மாதிரி வியாபாரம், இண்டர்னெட்டுல
எந்தூருல
நம்மூர்ல இல்ல……… உலகம் பூரா……. சோறு கண்ட இடம் சொர்க்கமா…
ஆமாமா…… இப்பத்தான் இண்டர்னெட் வந்து உலகம் சுருங்கி போச்சுல்லியா…

அந்த காலை இனிமையாகவே இருந்தது. புத்துணர்ச்சியோடு நடந்தது நாதனுக்கு உவப்பாக இருந்தது.

அந்த மெஸ்ஸை அடைந்ததும், இதுதான்… என சொல்லி விட்டு, என அவர் முன் திண்ணையில் அமர்ந்து கொண்டார். நாதன் உள் சென்று மேசையில் அமர்ந்ததும்… இலை பரிமாறிய ஆள், என்ன பிள்ளைவாள் சாப்பிடலையா… என கேட்க, இல்ல ரூமுக்கு போயிட்டு வந்து சாப்பிடுகிதேன்…

மெஸ்சின் உரிமையாள ஆச்சி வந்தாள். இலையை நாதனுக்கு போட்டுவிட்டு… ஆவி பறக்க இட்லி வைத்தாள்…

நாதனுக்கு இடித்தது… அவரும் இங்குதான் சாப்பிடுகிறாரா… குடும்பம் என்னாச்சு……. ரூமுக்கு போயிட்டு வர்றேன்னா… அப்ப வீடு இல்லியா.. அது என்னாச்சு… உப கேள்விகளை கொடுத்து விட்டு பகுத்தறிவு, பருப்பு சாம்பாருக்கு சென்று விட்டது……….. நாதனும் ததாஸ்து…………
ஆச்சி சொன்னாள்………. ஏய்யா… கருப்பட்டி காப்பி தரட்டா…… உள்ள வாங்க… அவருக்கு சரி என தோன்றி இருக்க வேண்டும்… சரி காப்பி கொடுங்க… உள் நுழைந்து என் அருகில் அமர்ந்தார்…

எப்படி
ம்…. உன்னதம்…….. டிவைன்…..
சாப்பாட்டுல கை மணம்தான்……. மனசு வைச்சாத்தான் இம்மாதிரி அமையும்… அன்போட அக்கறையோட சமைச்சாத்தான் இது வரும்… அண்ணாச்சி தான் சொன்ன சொல்லிலேயே மூழ்கி தன்னை தொலைத்திருந்தார்….சுவையில் மூழ்கி இருந்த நாதன்……… அவரை உற்று நோக்கினான்…

ம்... ரூமுக்கு வந்திட்டு போறியளா…
இல்ல….
துணி கிணி மாத்த வேண்டாமா…
சரியாச்சு……. அவசியம் இல்ல….. அப்புறமா பாப்போம்….

இங்கதனதான் பழைய இரும்பு வியாவாரம் செய்யுறேன்…
எனக்கு குலத் தொழில் வேற….என் பொஞ்சாதி செத்து போயி, எட்டு வருசமாச்சு….. முதல்ல முழு குடிகாரனா இருந்தேன்… கண்ணு மண்ணு தெரியாம குடிப்பேன்… ஏதாவது போக்கு புகலு வேண்டாமா… அப்புறம் எங்க அண்ணன் பாத்து தான் இங்க வந்து சேத்து விட்டாங்க…
இப்ப குடிக்கது இல்ல…….. வெறும் சிகரெட்டுத்தான்……. தினப்படி ஒரு பாக்கெட்ட ஊதி தள்ளி புடுவேன்.
என்ன செய்ய சொல்றீக….. போர் அடிக்குதில்லையா…. இப்பத்தான் செம்பகம் அக்கா… இப்படியே இருந்தா நீரு வெளங்க மாட்டீரு…… ஒரு கல்யாணம் கட்டிக்கும்ன்னு சொல்றா… வயசாயிப் போச்சு.. இப்ப 44 ஆச்சு… இன்னும் ஒரு 30 -40 வருசம் வாழ்ந்து தொலைக்கணுமே… கிழவனும் இல்லாம, குமரனும் இல்லாம இப்படி ஆயிப் போச்சு… போற வரைக்கும் மாராசி, நல்லாத்தான் இருந்துச்சு வாழ்க்கை… அப்பப்ப முட்டிக்கும், சண்டை போடுவோம், அப்புறம் சேந்துக்குவோம்… இப்படி.. புள்ள பொறக்கல…. என்னவோ வியாதி சொன்னாங்க…… அவளே போயிட்டா அப்புறம் எதுக்கு பேரு…

இப்ப கல்யாணஞ் செஞ்சு என்ன செய்யுறது…….. அதெல்லாம் செரிச்சு போச்சு… இப்ப தேட்டம் வேற மாதிரியால்ல இருக்குது… சரி, கட்டிக்கிடுதேன்… என்னை மாதிரி … இப்படி ஒரு வயசுல…….. போக்கிடம் புகலிடம் இல்லாததா இருந்தா சொல்லுங்க கட்டுக்கிடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்…

இப்ப, ராயல் டாக்கீசுல ஓடுற சினிமாவ நீங்க ஒரு தடவ பாக்க மாட்டீங்க… அப்படி ஒரு மழுங்கின ஃப்ளேடு… ஆனா நான் ஒம்போது தடவ பாத்திட்டேன்… இன்னிக்கு கூட ராத்திரி தூக்கம் வரலேண்னா போ வேண்டியது தான்…

என்னத்த செய்ய சொல்றீரு…….. காசு பணத்த வைச்சு புழுங்கியா திங்க முடியும்… நேரம் அதுபாட்டுக்கு அவுத்து போட்டு கிடக்குது…… சாயங்காலம் 7 மணிக்கு கடைய சாத்திட்டா என்ன செய்யுறது…………… அதுக்குத்தேன்…. சரி போனா போகுதுன்னு கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டேன்…

அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை… எங்கள் இருவரின் பிரச்ச்னையுமே ஒன்றுதான். தனிமை….

அவர் வெறுக்கும் தனிமை……. நான் தேடும் தனிமை….. நான் வெறுக்கும் கடமை குடும்பங்கள், அவர் தேடுகிறார்……………

ஏதாவது செய்ய வேண்டும், வாழ்வதற்கு அர்த்தம் வேண்டும் என்பது எங்கள் இருவருக்கும் பொதுவானது. ஆனால் தேடும் திசை புதிது….  இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள்…..

சல்ஃபா (சிறுகதை)

ஆ… என அலறிய ஆத்மாவுக்கு பயங்கரமான வாய்ப்புண்.

டீ குடித்த போது, சூடாக, ஒரு கவளம் வாயில் இறங்கியபோது, வாய்ப்புண்ணில் பட்டு, பயங்கர வலி. கண்ணில் நீர் கோர்த்தது. புண் சுர்ரென வலித்து, உள் வரை சென்றது.

இரண்டு வாரமாய் இந்த தொல்லை. நல்ல மஞ்சள் நிறப் பழுப்பில், கொப்பளங்கள் நான்கு இருக்கிறது. வாய்க்கு உள்ளே… வலது புறத்தில் இரண்டு, மேல் மேவாயில் இரண்டு என சிவந்து, வீங்கி இருக்கிறது. சாப்பிடும் போது பயங்கர வேதனை. ஏதாவது காரமாகவோ, சூடாகவோ பட்டு விட்டால் அவ்வளவு தான். இதற்காகவே பயந்து கொண்டு, சூடு இல்லாமலும் காரம் குறைவாகவும் சாப்பிடுகிறான் ஆத்மா, தன் பழைய பழக்கத்தை மாற்றிக் கொண்டது கொடுமையாக இருக்கிறது.

பகல் நேரத்திலும், மாலையிலும் நாக்கை சுழற்றி, அந்த புண்ணை தடவி கொடுக்கும் போது, ஒரு இதம் தெரிகிறது. இது ஆத்மாவின் புதிய பழக்கம்.

இந்த வாய்ப்புண் தொல்லை… எப்போது தொடங்கியது.

ஆம், ஆபிஸ் விஷயமாக பெங்களூர் வரை சென்று வந்த பிறகு இந்த தொல்லை. திடிர் சீதோஷன மாறுதல் காய்ச்சலாக, ஜலதோஷமாக தொடங்கியது. ஒரே நாள் மாத்திரையில் காய்ச்சலும் சளி போனது. ஆனால் இந்த வாய்ப்புண் மட்டும் போகவில்லை. ஒரு வேளை பட்டென சூடு, குளிர் மறுபடி சூடு என்பதால் இப்படி ஆனதோ… அப்படியே இருந்தாலும் இவ்வளவு நாள் ஏன் இருக்க வேண்டும்.

முதல் நாள் அவஸ்தையிலேயே, இது வேண்டாம், என உடனே மருத்துவரிடம் சென்றான். காய்ச்சல் போச்சு, சளியும் பரவாயில்லை… இந்த வாய்ப்புண் தான்… என சொன்னதும், டாக்டர் அதே சீட்டில் இன்னும் சில மருந்துகளை எழுதினார். அவற்றை வாங்கி சாப்பிட தொடங்கினான். வாயில் போடும் ஒரு களிம்பு, பிறகு சில மாத்திரைகள் என எதையும் நேரம் தவறாமல் சாப்பிடுகிறான், என்றாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. வேண்டுமானால் இப்படி சொல்லலாம். புண்கள் பெரிசாகித் தான் போகின்றன. வலியிலும் சைசிலும்….

ஒரு வேளை பழுத்து தான் உடையும் போல… எப்படா இந்த தொல்லை போகும். எப்படா பழையபடி சாதாரணமாகும் என ஏங்குகிறான். அதைப்பற்றியே நாள் முழுதும் சிந்திக்கிறான்.

பக்கத்து வீட்டு, பாட்டி கூர்மையாக பார்த்து பிறகு சொன்னாள்.

ஐய்யா… இது கக்கட்டி மாதிரி… வாக்கட்டி…. ஒண்ணுமில்ல… எல்லாம்… திஷ்டிதான்…

ஆத்மா திஷ்டி பற்றி இதுவரை கேட்டதில்லை. குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்து கேட்டான்.
அப்படின்னா…

பாட்டி தொடர்ந்து சொன்னாள்… திருஷ்டின்னா… கண்ணேர்… அப்போதும் ஆத்மாவுக்கு புரியவில்லை. அப்படின்னா… என தொடர்ந்தவனை உட்காரச் சொல்லி பாட்டி சொன்னாள்.

தம்பி, நீங்க நல்லாயிருக்கிறத பாத்துட்டு…. ஐய்யோன்னு வாய் பொளந்து பொறாமை பட்டு, உஷ்ணமா ஒரு பெருமூச்சு விட்டா, அது அப்படியே உங்கள பத்திக்கும். தம்பி இது சும்மாயில்ல… ரொம்ப பவர்ஃபுல்லு…. அப்படியே பொசுக்கிரும்…

ஓ… அப்ப இதுக்கு என்ன செய்யணும்.

ம்… மண்கட்டி எடுத்து கிணத்துல போடுங்க… அதுலயும் நிக்கலேண்ணா, திஷ்டி கழிக்க, சூடம் சுத்தி வையுங்க, வத்தல் உப்ப தலைய சுத்தி அடுப்புல போடுங்க….

ஆத்மா இதில் நம்பிக்கை கொள்ளவில்லை, என்றாலும் செஞ்சு பார்ப்பதில் என்ன நஷ்டம். ஒரு வேளை வாய்ப்புண் போனால்… சரி செய்துதான் பார்ப்போமே என பாட்டி சொன்னதை அப்படியே செய்தான்.

நாள் ஒன்றும் போனது, ஆனால் பயன் தான், பலன் தான் ஒன்றும் இல்லை.

இன்றோடு இரண்டு வாரம் ஆகிறது… ம்… ஒன்றும் பலனில்லை என கவலையோடு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது அருகில் இருந்த ஒரு நபர் வாஞ்சையுடன் கூறினார். என்ன தம்பி வாய்ப்புண்ணா…

ஆமா சார், ரெண்டு வாரமா மருந்து சாப்பிடுறேன்.. சரியாக மாட்டேங்குது… ரொம்ப கஷ்டமா இருக்குது… சொல்லும் போதே, இயலாமையில் கண்கள் முட்டின, தொண்டை கரகரத்தது.

அவர் பரிதாபப் பட்டார். தம்பி, சொல்றேன்னு வித்தியாசமா நினைக்காதீங்க. எனக்கு என்னவோ இது வேற மாதிரியா படுது. ஆத்மா அவரை ஏறிட்டு பார்த்தான். வேற மாதிரின்னா…

அவர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, உங்களுக்கு வேண்டாதவங்க யாராவது இருக்காங்களா..

வேண்டாதவங்கன்னா….
அதான் தம்பி, விரோதிங்க, ஒரு வேளை உறவுக்காரங்க… யாராவது உங்கள் பிடிக்காதவங்க…
ஏன் கேக்குறீங்க…
இல்ல தம்பி, நீங்க சொல்றத பாக்கும் போதும், உங்க முகம் கருத்து இருக்கும் போதும், எனக்கு தோணுது… இது ஏதோ ஒரு வினை…. எனக்கு சரியா தெரியல… சூனியம், செய்வினைன்னு என்னன்னவோ இருக்குது.

தம்பி இதக் கேளுங்களேன்… எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க இந்த மாதிரித்தான், வயித்து போக்கு, வாந்தி வேற… என்னன்னவோ வைத்தியம் செஞ்சாங்க… ஆனா ஒண்ணும் தீரல… அப்புறம் மவுண்ட் ரோடு தர்காவுக்கு போய், மந்திரிச்சு ஒரு தாயத்து கட்டினாங்க… ஆச்சரியம் பாருங்க ஒரே ராத்திரியில சரியாயிருச்சு…

அவர் இறங்க வேண்டிய இடம் வர, பாத்து தம்பி, ஒண்ணும் கவலைப் படாதீங்க எல்லாம் சரியாகும்.. அவர் இறங்கி சென்றார். ஆத்மா மீண்டும் குழப்பமானான்.

என்ன செய்வது… எது வேண்டுமானாலும் செய்யலாம். தீர்வு இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம்… இவர் சொல்லும் இடம் எது… எங்கிருக்கிறது, என எண்ணிக் கொண்டிருக்கும் போதே… பின் சீட்டில் அமர்ந்திருந்தவர் அருகில் வந்து அமர்ந்தார்.

ஆதரவாய் ஆத்மாவின் கைகளை பற்றி கொண்டு, நீங்க பேசுனத எல்லாம் பின்னால இருந்து கேட்டுகிட்டுத்தான் இருந்தேன்… ஆத்மா மறுபடியும் உணர்ச்சி வசப்பட்டான். அவரது கைகளை தன் இன்னொரு கையால் பற்றி அழுத்தினான். நெஞ்சால் அழுதான்.

வேண்டாம் தம்பி, இந்த செய்வினை, சூனியம்ன்னு தொடங்கிட்டீங்கன்னா, அப்புறம் வாழ்க்கை முழுக்க அது உங்கள விடாது. இதெல்லாம் வேண்டாம், அசிங்கமான பாதை. உங்களுக்கு நல்ல வழி நான் சொல்றேன். எங்க சபைக்கு வாங்க… உங்கள மாதிரி எத்தினியோ பேருக்கு எங்க பாஸ்டர் உதவியிருக்காரு. அவரு மேல பரிசுத்தாவி இறங்கும் போது, அவரு செபிப்பாரு…. அப்ப எந்த சாத்தானோட செயலும், பரிசுத்தாவியின் வல்லமைக்கு அடிபணியும். நம்மைப் படைத்த யேசு சாமி சொல்றார், ஒண்ணு பதிமூனுல சொல்றார், நான் உன் தேவன், உன்னை காப்பேன்னு… அத விசுவாசத்தோட பிரதிக்கனை செய்யுங்க… பிரார்த்தனை செய்யுங்க… உபவாசம் இருங்க.. சபைக்கு உண்மையாயிருங்க… எந்த துஷ்டாவியும் நம்மை அணுகாது… நம்மை காக்கும் தேவன் நித்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என வேதம் சொல்கிறது…..

ஒரு வேகமாக, ஒரு ராகமாக அவர் பிரசங்கம் போல சொல்லி முடிக்காமல் சொல்லி கொண்டே இருந்தார். ஆத்மா அவரை அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்…. ஆத்மா இறங்க வேண்டிய இடம் வந்த போது, அவரிட்ம் விடை பெற்று அவன் இறங்கினான்….

ஆள் நடமாட்டமில்லாத அந்த சாலையில் அவன் வந்த பேருந்தும் கடந்த போது, ஆத்மா தனியாளாக நடந்து கொண்டிருந்தான். வாய்ப்புண் வேதனையாக இருந்தது. எப்படி இதை போக்க வேண்டும் என தெரியவில்லை. மருந்தும் சாப்பிட்டாயிற்று…. போக மாட்டேன் என்கிறது… எளியதாய் திஷ்டி கழித்தாயிற்று … அதிலும் பயனில்லை….

ஒருவர் சொல்கிறார்… சூனியம், செய்வினை என, இன்னொருவரோ…. பரிசுத்தாவியிடம் மன்றாட்டு என்கிறார்… என்ன செய்வது, எங்கே செல்வது. இரண்டுமே பயமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை இப்படி சூனியம் செய்வினை, சாத்தான் இதெல்லாம் இருக்கிறதோ.

இயலாமை… இயலாமை… குழப்பம்… என்ன நடக்கிறது… என்ன இது… நான் என்ன செய்ய வேண்டும்… தெளிவில்லாமை… ஆத்மா புலம்பினான்.. அழுதான்… வாய் விட்டு ஓவென கத்தினான். கண்கள் தாரை தாரையாக நீர் விட்டது… வாய்ப்புண் வலித்தது…. ஒரு கெட்ட வார்த்தையை உரக்க சொல்லி…..  திட்டினான்.

அவன் யாரை திட்டினான்… தன்னையா… பிறரையா என தெளிவில்லாது… மீண்டும் மீண்டும் இன்னும் சில வார்த்தைகளால் திட்டுதலை தொடர்ந்தான்.

அப்போது, சாலையில் ஒரு பிள்ளையார் சிலை கண்ணில் பட்டது. சின்ன சிலை, சின்ன மேடை. அச்சிலை கண்ணில் பட்டதும் வாய் சட்டென நின்றது. அமைதியானது. மனம் ஸ்தம்பித்தது. கைகள் அமைதியாகின. சட்டென அதை நெருங்கி, முட்டிக் காலில் அமர்ந்து, பின் தரையில் சரிந்து அப்படியே உட்கார்ந்தான். முதுகை அங்கிருந்த சுவரில் சாய்த்து, உடலை தளர்த்தினான்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. காலம், கடமைகள் எதுவும் உரைக்காமல் அவன் அப்படியே உறைந்து இருந்தான். தலைக்கு மேலே இருந்த, ஆலமரம் குளிர்ந்த காற்றை அவன் மீது வீசியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ… திடிரென ஆத்மா எழுந்தான்.

எனக்கு எல்லாம் சரியாச்சு.. வாய்ப்புண் போச்சு… சூனியம் இல்ல, மந்திரமும் இல்ல… எனக்கு ஒண்ணும் இல்ல… நான் சரியாயிட்டேன் என தீர்க்கமாக வாய் முணுமுணுக்க மனதினுள் உறுதியாய் சொன்னான்.

அமைதியான மனதுடனும், உறுதியான நடையுடனும் வீட்டிற்கு சென்றான். நன்கு குளித்தான்… இரண்டு செம்பு நீரை வாய் நிறைய வயிர் நிறைய குடித்தான். வீட்டை சுத்தம் செய்தான். அவன் சாப்பிட்டு கொண்டுருந்த மருந்துகள் மேசை மேல் இருந்தது. அதை எடுத்து பார்த்தான். தீர்மானமான முகத்துடன், அமைதியாக அதை வீசியெறிந்தான்.

அவனுக்கு என்னவோ அவன் செய்வது சரியெனப்பட்டது….  நன்கு உறங்கினான். காலையில் எழுந்த போது, நான்கில் ஒரு வாய்ப்புண் காணாமல் போயிருந்தது….

முற்றும்.

தோழமைக்கு… 

இக்கதையை இத்துடன் முடிக்க விரும்பவில்லை… இக்கதையை இப்படி முடித்தால், டேக் லைனர், அல்லது கதையின் மெசேஜ் என்பது…. ‘கடவுளை நம்பு… உன்னை நம்பு…. வேறெதுவும் வேண்டா…. பயப்படாதே…… என்பதாய் ஆகும்….

இல்லை, இக்கதையை அப்படி முடிக்காமல், இன்னொரு விதமாய் முடிக்க ஆசையுண்டு… இது தரும் மெசேஜ் அல்லது டேக் லைனர்… வேறு விதமாய் ஆகும் என நம்புகிறேன்.

…..

எட்டு வருடங்களுக்கு பின், ஒரு நாள் ஆத்மா மருத்துவமனையில் இருந்தான். வாய் திறந்து டார்ச் அடித்து பார்த்த டாக்டர் சொன்னார். ஹூம்… அலர்ஜி டெஸ்ட் எழுதியிருக்கேன்.. இத பண்ணிருங்க… அதுவரைக்கும் நான் எழுதிக் கொடுத்த மாத்திரைய சாப்பிட வேண்டாம்.

அலர்ஜி டெஸ்ட் முடிந்து, ரிசல்ட் கொடுத்த போது, ஆத்மாவுக்கு புரியவில்லை. டாக்டர் அதை படித்து, பின்னர் ஒரு தாளில் எதையோ எழுத ஆரம்பித்தார். முடித்து, பின்னர் ஆத்மாவை நோக்கி சொன்னார்.

உங்களுக்கு சல்ஃபா அலர்ஜி. அதான் வாயில கொப்பளம் வருது. அதனால வேற மாத்திரை எழுதியிருக்கேன்… உங்க கையில இருக்கிற மாத்திரைய போடாதீங்க… ரிட்டர்ன் பண்ணிருங்க….

ஆத்மா… டாக்டரை பார்த்து… சல்ஃபா அலர்ஜி… அப்படின்னா…

ஒரு சில கெமிக்கல்ஸ், நம்ம உடம்புக்கு ஒத்துக்காது. கெமிக்கல்ஸ் மட்டுமில்ல சில விநோத அலர்ஜிகள் கூட உண்டு… இவ்வளவு ஏன் சிலருக்கு எள் கூட அலர்ஜி.

தெரியாம சாப்பிட்டாங்கன்னா, உடம்பெல்லாம், வீங்கி, தடுப்பு தடுப்பா வரும்… இந்த அலர்ஜி பற்றி நமக்கு ஒரு விழிப்புணர்வு அவசியம். இது பற்றி, தெரியாம, சில விபரீதங்களும் நடந்ததுண்டு…. இப்படி வைச்சுக்கோங்களேன்… வாய்ல புண்ணு வந்து அத குணமாக்க கொடுக்கிற ஆண்டி பயாட்டிக்கில சல்ஃபா இருந்துச்சுன்னா…. ம்… மருந்தே…. நோயாகிடும்….  

ஆத்மா வெளி வந்தான்… எட்டு வருசத்துக்கு முன், வாய்ப்புண் வந்ததும் அடுத்து நிகழ்ந்ததும் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வில் அவன் பயப்பட்டதும், அழுததும்… என்ன செய்யலாம் என வேதனைப்பட்டதும் மனதில் ஓடியது.

சூனியம் செய்வினை என குழம்பியதும், பிரார்த்தனை, ஆக்கபூர்வமான மனவெழுச்சி என தீர்வாக அவன் கொண்டதும்…. மருந்துகளை தூக்கி வீசியதும்… அதுதான் அவனை குணமாக்கியது என நம்பியதும்… நினைவில் ஆடியது.

வாய்ப்புண் குறைந்து, சரியான போது, தன் மேலும், பிரார்த்தனை மேலும் நம்பிக்கை கூடியதை நினைத்தான். இதுதான் சரி என தீர்மானம் போட்டது மனது… அது அன்று…

ஆனால், இன்று கேட்ட ஒரு தகவலில், மொத்தமும் வேறு திசையில் ஆகிறது. எது சரி, ஒரு வேளை இறைவன் என்பது இல்லையோ, அது நம் மனம் தரும் ஒரு மாயைதானோ என ஒரு சிந்தனை.

தீர்மானம் கிடைக்காது, அதே சிந்தனையோடு ஆத்மா வீட்டுக்குள் நுழையும் முன் பக்கத்து வீட்டு பாட்டி யாரோடோ உரத்த குரலில் சொல்லி கொண்டிருந்தாள்..

பனை மரத்துல தேள் கொட்டினா, தென்னை மரத்துலயா நெறி கட்டும்…

அடப் போடா… நீ புடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு …. ஏம்ல ஒத்தை கால்ல நிக்குற…

ஆத்மா சிரித்தான்…




அந்த சிரிப்பின் அர்த்தம் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு காரணமாகவும் இருக்கும்…. 

ஒலியொழி – வழிவலி

உஷ்….
எனும் ஒலியின் அர்த்தம்
அமைதி

சத்தத்தின் மரணம்
அமைதி
அமைதியில்
பூக்கும் கூர்மை

இரு எதிர் துருவங்கள்
ஒலியும் அமைதியும்
எது சிறந்தது
என இருவருக்கும் போட்டி… நமக்குள்ளே !!!

அமைதியை அழிக்க
ஒலியால் முடியும்
ஒலியை அழிக்க…. ????

சரி விடுங்கள்.... 
அமைதியை
படைக்கத்தான் முடியுமா


சத்தமின்றி இருத்தல்
.... அமைதி
அவ்வளவுதான்.....

ஒலி
என்னுடையது
என மார் தட்டலாம்
அமைதிக்கு காரணகர்த்தா யார்…

அமைதியை உருவாக்க முடியாது
அமைதியோடு
வேண்டுமானால் இணையலாம்….

பெரும் அமைதிதான் 
இறையோ ????
கூச்சல்களுக்கு கூடாரம் இல்லையோ...

அமைதியை அனுமதித்தால் நிம்மதி
புரிந்து கொண்டால் ஆன்மீகம்.

கண்ணுக்கு மை அழகு


அன்று….

அபாயம், ஆபத்தானது, ராசியில்லாதது என வர்ணிக்கப்படும் அந்த சாலை சந்திப்பை என் பைக் நெருங்கிக் கொண்டிருந்தது. பாத்துப் போம்மா…. வாரத்துக்கு ஒரு ஆக்சிடெண்ட் எப்படியும் நடந்துருது, கண் மண் தெரியாம லாரியும் பஸ்ஸூம் போகுது. ரோடு கிராஸ் பண்ணும் போது கவனம்… நீ ரொம்ப ஜாக்கிரதையா போகணும்மா என அம்மாவின் அன்புக் குரல் மனதில் கேட்டது. அது எப்போதுமே என்னை சுதாரிக்க செய்யும் ஒரு நினைவு சிப்பி.

இன்றும் கவனத்தோடும், கவலையோடும் நான் அதை அடைந்தேன். சிக்னலின் பச்சைக்காக, நான் நிற்க வேண்டியதாயிற்று. கண்ணையும் தலையையும் சுற்றி, அங்கிருக்கும் சூழலை பார்க்க துவங்கினேன். 

பரவசம் முகத்தில் கொப்பளிக்க, வாயெல்லாம் பல்லாய் ஒரு இளைஞன் என்னருகில் பைக்கில் நின்றிருந்தான். 

இவன் சந்தோசத்துக்கு எது காரணமாக இருக்கும். ம். ஒன்றுதான் இருக்க முடியும். வேறென்ன சாத்தியம், ஏதெனும் காதல் சார்ந்த உணர்வாகத்தான் இருக்க வேண்டும். இல்லாமல் வேறு எது இத்தகைய சந்தோசம் கொடுக்க போகிறது. என சிந்தித்து கொண்டே, மீதமுள்ளவர்களை பார்த்தேன்.

பட்ஜெட்டில் துண்டு விழந்ததை பற்றி கவலைப்படும் நடுத்தர வர்க்கம். தன் வழுக்கையை மறைக்க, காதோர கிருதா முடியை, தலையின் குறுக்கே படர விட்டு, மறைத்திருந்தார். காற்றுக்கு என்ன பொறாமையோ. அம்முடியின் காதை பிடித்து திருகி, மறுபடியும் காது பக்கமே கொண்டு வைத்தது. நம்மவர் சட்டென, அதை மீண்டும் தலையின் குறுக்கே வைத்தார்.

இப்படி ஒரு சாமான்ய கூட்டத்தில் அவர், என் கருத்தை கவர்ந்தார்.

கையில் நெடிய குச்சியுடன் அதை உயர்த்தி பிடித்தவாறு, காதை அங்குமிங்கும் திருப்பி வரும் சத்தங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். அவருக்கு பார்வையில்லை. நான் அதிர்ந்தேன். அவரருகில் துணைக்கு யாரும் இருப்பார்களா என ஆராய்ந்தேன். இல்லை எவருமில்லை. அவர் தனியாகத்தான் இருந்தார்.

இப்போதும், கையை ஆட்டிய வண்ணம், தலையை அங்குமிங்கும் அசைத்து கொண்டு ஒலியின் மீதே கவனம் கொண்டிருந்தார்.

சிவப்பு விளக்கு மறைந்து, பச்சை ஒளிர்விட்டது. வண்டிகள் எல்லாம் அவசரம் அவசரமாக கியர் மாற்றி, இன்ஜினை உறும விட்டு, லேசாக நகரத் துவங்கின. அந்த சத்தங்களின் சங்கீதத்தில் நம்மவர் உஷாரானார். அவசரம் அவசரமாக, கையை உயர்த்தி, அவரது குச்சி தெரியும் வண்ணம், ஆட்டிக் கொண்டு, விரைவாக நடக்க துவங்கினார். நான் பதறினேன். இரு விழி இருந்தும் கூட,, நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. இங்கு விபத்தில் சிக்கியவர்கள் கூட, கொஞ்சம் அசட்டையாக இருந்ததால் தானே அவர்களுக்கு விபத்து நடந்தது.

அப்படி இருக்கும் போது, பார்வை இல்லாத இவர் எப்படி இங்கனம் செய்கிறார். இவர் சாலையை கடந்து விடுவாரா என்ற பதைபதைப்புடன், என்னால் மேற்கொண்டு வண்டியை செலுத்த முடியாமல் சாலையை கடந்து, ஓரமாய் நிறுத்தினேன்.

நான் நினைத்த அதே தவறு நடந்தது. 

அச்சாலையிலே மொத்தம் 3 டிராக்குகள். ஆனால், அவரோ, ஒரு இரண்டரை டிராக்குகள் கடந்ததுமே, கோணத்தை மாற்றி, நடக்க துவங்கினார். அதாவது அவரது கணக்கிலே சாலையை கடந்தாயிற்று, இனி சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டு நடந்து கொண்டிருந்தார். ஆனால் உண்மை என்னவோ அவர் இன்னும் சாலையை கடக்காமலேயே, வாகனங்கள் போகும் திசையில் நடக்க துவங்கினார். என்ன சிக்னலின் புண்ணியத்தில், இப்போது அச்சாலையில் வாகனங்கள் இல்லை.

பச்சை விளக்கு மறைந்து, ஆம்பர் ஒளிர் விட்டது. இதயம் படபடவென துடித்தது, இரத்தம் தாறுமாறாக ஓடி, எனக்குள் பதறியது. அடடா, இப்போ சிக்னல் விழுந்தால், அடுத்த திசையின் வண்டிகள் வரத்துவங்குமே….. அந்த நினைப்பு சுர்ரென குத்தியதும், வண்டியை விட்டு குதித்து, அவரை நோக்கி ஓடினேன். அவர் கையை பற்றி, ’இங்க…இங்க… ரோடு இங்க இருக்கு’ என சொல்லி விட்டு..... அவரையும் இழுத்துக் கொண்டு விரைவாக சாலையின் ஓரத்தில் வந்து விட்டேன்.

நல்ல வேளை அடுத்த திசை வண்டிகள் வரும் முன்னே, நாங்கள் இருவரும் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம்.

எனக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. ’என்ன சார் இது, யாரும் துணைக்கு வரலியா..’ 

குரல் கேட்ட திசை நோக்கி திரும்பி பார்த்து, அமைதியாக ஒரு சிரிப்புடன், ’இல்ல சார், நான் எப்பவுமே தனியாத்தான் வருவேன்.’ அதில் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. என் கோபம் இன்னும் துளிர் விட்டது. ’என்னத்த தனியா, பாதி ரோடு கிராஸ் பண்ணி, ரோட்டுக்கு குறுக்க நடந்தீங்க… ’ என்றேன்.

என் கோபம் அவருக்கு புதியதாய் இருந்தது,. ஒரு வேளை புதிராக கூட இருக்கலாம். என்னை பார்த்து…!!!! சிரித்து விட்டு, கைகளை நீட்டி துளாவினார்.

என்ன தேடுகிறார்…….. ஓ… அவர் என்னை தேடுகிறார் என தெரிந்து என் கைகளை அவரின் குறுக்காக நீட்டினேன். என் முழங்கை அவர் கையில் பட்டது. அதை தொட்டு, பின்னர் தொடர்ந்து, என் உள்ளங்கையை அடைந்தார். அவரது கையை என் கை மேல் வைத்து, கை குலுக்கினார்.

பின் அதே சிரிப்புடன் ‘ரொம்ப கோபப்படுவீங்களோ….’ நான் அமைதியாக நின்றிருந்தேன். அவரே தொடர்ந்தார் ‘இல்ல, கை கெட்டியா இருக்கு, ஆனா அமுக்கினா சாப்ட்டா இருக்குது. உங்களுக்கு இளகின மனசு ஆனா சுருக் சுருக்குன்னு கோபம் வந்துரும் இல்லியா.

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. ஆனால் என் இறுக்கம் குறைந்திருந்தது. இன்னும் சிரிக்க முடியவில்லை என்றாலும் இதயம் என்னவோ, கோபத்தை தொலைத்து இருந்தது. நான் அவரது கையை மெதுவாக அழுத்தி, ஹூம்… பாத்து சார்… கவனம்… என சொல்லி என் கையை விடுவித்து கொண்டேன்.

எங்க போகணும், நான் வேணும்ன்னா டிராப் பண்றேன் என்றேன். பாங்க் போகணும், பஸ் ஸ்டாப்பு பக்கத்துல ஒரு சப்வே வரும் அது பக்கத்துல விட்டுறுங்க என்றார். சரி ஏறிக்கோங்க என என் இரு சக்கர வாகனத்தின் அருகில் கூட்டி கொண்டு வந்து, அதை தொட்டு காட்டினேன். பின் இருக்கையை தொட்டதுமே, ம்… புல்லட்டா, நல்ல வண்டி என்றார். நான் கொஞ்சம் வியந்தேன். அமர்ந்ததும் வண்டியை இயக்கி மெதுவாக ஓட்டினேன். கொஞ்சம் உயரம் குறைவா இருக்கே என்றார். 

நான் ”இது தண்டர் பேர்டு புதிய வண்டி, பழைய புல்லட் போல இல்லாமல் இது கொஞ்சம் உயரம் குறைவு” என்றேன். ஓஹோ… ஆனா இன் ஜின் சத்தம் பாக்கும் போது, பழசாயிருந்ததே என்றார்.

நான் துணுக்குற்றேன். பழைய புல்லட் சத்தம் தரும் அந்த சைலன்சரை நான் விரும்பி மாட்டிக் கொண்டேன், அல்லது புதிய பைக்கில் பழைய மாடல் சைலன்சராக மாற்றி இருந்தேன். அவரது கணிப்பும் கணக்கும்…. எனக்கு ஆச்சரியம். இத்தனை நுண்ணிய புலனும், நினைவுமா……

பேச்சின் ஊடே..... தான் ஒரு இசைக்கலைஞன் என்றும், கீ போர்ட்டு வாசிக்கிறேன். வாங்கிய சம்பளத்தை வங்கியில் போடவே போகிறேன் என்றார். தனியா போறீங்களே… நான் மறுபடியும் முதலில் இருந்து தொடங்கினேன்.

”இருவந்தைஞ்சு வருசமா போறேன். ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல” என்றார். என் விழிகள் வியப்பில் விரிந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வர வேண்டிய இடம் வந்ததும் வண்டியை மெதுவாக்கி, சரி பாக்கலாம் என்றேன்.

அவர் இறங்கி கொண்டு, சொன்னார்……….. ரொம்ப தேங்க்ஸ்…

நடக்க துவங்கியவர், சின்ன தயக்கத்துடன் நின்று, பின் திரும்பி, என்னை நெருங்கி நின்றார். நான் … சொல்லுங்க என்றதும்… பேசாமல் இருந்து விட்டு, அமைதியான சில நொடிகளுக்குப் பின் சொன்னார்…. ரொம்ப கவலைப்படாதீங்க, நீங்க நினைக்கிற அளவுல இது கஷ்டம் இல்ல. இந்த உலகத்தில நிறைய நல்லவங்க இருக்காங்க…. எனக்கு ஒண்ணுமே ஆகாது. கை குச்சியை மேலே ஆட்டி நான் நடந்தா, யாராயிருந்தாலும் மெதுவா போயிடுவாங்க…. நான் வர்றேன்…

அவர் சென்றார். நான் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். அவரது செல்லும் பாதையில் சற்று தூரத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. நான் கொஞ்சம் பதறினேன். அவரோ சாதாரணமாக நடந்து, அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அடைந்தார். தண்ணீர் மேலே மிதித்து, நடந்து சென்றார். அளவான பதட்டம் இல்லாத நடையிலேயே அவர் நடந்ததால், பாதிப்பு ஒன்றுமே இல்லை….

தண்ணீர் முடிந்ததும், நிலப்பரப்பில் கால்களை தரையில் பலம் கொண்டு உதைத்து பின்னர் நடக்க துவங்கினார்.

ஒரிறு அடிகள் அவர் நடந்த போது, இன்னொன்றை கவனித்தேன்…

அவரின் முன்னே, ஒரு பெண் யாரோடோ, செல்லுலாரில் பேசிய படி கவனக்குறைவாகவே நடந்து கொண்டிருந்தார். இங்கிருந்தபடி நான் லேசாய் பதறினேன்…. அவரோ, அந்த குரலை கணித்து ஒரு அரையடி இடைவெளி உண்டாக்கி, நகர்ந்து முன்னேறினார். பார்வையில்லாத அவரால் அந்த சாலையில் ஒரு பிரச்சனையும் இல்லை. சற்று தொலைவில் சப்வேயில் அவர் தலை மறைந்தது.

நான் அங்கேயே நின்றிருந்தேன். உலகம் அசைந்து கொண்டுதான் இருந்தது. எல்லோருக்கும் அவசரம். சிலர் நடந்தும், சிலர் விரைந்தும், சிலர் நின்றுமாக ஏதோ ஒரு வேலையிலேயே இருந்தார்கள். நான் மட்டும் எதுவும் செய்யாமல், ஒன்றும் நினைக்காமல் அப்படியே உறைந்து நின்றேன்.

இதில் பரிதாபம் இல்லை. வேண்டுமென்றால் என்னை பார்த்து கொஞ்சம் பரிதாபப்பட்டேன். அவர் கூறிய சில வார்த்தைகள் இன்னும் என்னுள் எதிரொலிக்க வண்டியை இயக்கி நகர்ந்தேன்….

கொஞ்சம் தொலைவிலே… சாலையோரத்தில் இளைஞர்களின் கூட்டம்….. காலை 10 மணிக்கே என்ன அப்படி கூட்டம் என கேள்வியோடு முன்னேறியபோது……….. நொளைய தளபதியின் ஒரு புதிய திரைப்படத்து போஸ்டர்கள் தெரிந்தது. எனக்கு புரிந்தது.

கூடியிருக்கும் கூட்டம், சந்தோசத்துடன் ஆர்வமாக நின்றிருந்தது. அவர்கள் ஆதர்சன படம் பார்க்க முன் பதிவு செய்ய இப்போழுதே வந்ததும் புரிந்தது. அந்த கும்பலில் இருந்த ஒருவன் ரசித்து அவன் நண்பனிடம் சொன்ன வார்த்தை என்னை இழுத்தது…..

‘பார்க்க கியூட்டா, சிக்குன்னு நம்ம தலைவண்டா… அங்க பாரு கீரோயினியை, மைதா மாவு உருண்டைடா, உடம்பு நழுவுற மாதிரியே ஒரு சூப்பர் டிரஸ்…….. ஆஹா, காண கண் கோடி வேண்டும்டா……..’’

எனக்குள் ஏதோ பிசைந்தது. ஒரு நிலை கொள்ளாமை. ஒரு ஆற்றாமை.

இறைவன் கொடுத்த இரு கண்களை கொண்டு நாம் என்ன செய்திருக்கிறோம்… என்ன செய்து கொண்டிருக்கிறோம்….. என ஒரு கேள்வி குடைந்தது.

கண் பார்த்து சொன்ன சேதிகளினால் நாம் பதட்டப்படத்தானே செய்கிறோம், சக மனிதரை நம்பும் அவர் எங்கே… கண் இருந்தும் அங்குமிங்கும் அலைபாயும் நம் கவனம் எங்கே… இந்த கண்களினால் ஆன பயன் குறைவோ… என மேலும் சில கேள்விகள் பாய………………….

என் டூவீலர் மிதமான வேகத்தில் நகர்ந்தது. நீங்க நினைக்கிற அளவுல இதுல கஷ்டம் இல்ல……. எனும் வார்த்தை என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அவர் சொன்னது சரிதானோ… ’