பக்கங்கள்

மழை என் தாய்...! (கவிதை)


அகன்ற வானத்திலா!
உன் அன்பிலா…
சிலு சிலு காற்றிலா!
உன் இனிமையிலா…

உள்ளிருக்கும் உயிர்ப்பிலா!
உன் உயிர் தந்த உதிரத்திலா….
செருமும் இடியிலா!
உன் கண்டிப்பிலா…

ஊடறுத்து உள் செல்லும் சிலிர்ப்பிலா…

எதில் அம்மா
உன்னைக் கண்டேன்….

நின் குளிர்வித்தலிலும்
நின் நீர் தருதலிலும்
நின் இனிமையிலிலும்
நீ தரும் மகிழ்ச்சியிலும்

எதுவென சொல்லத் தெரியவில்லை

ஆனால் மழையில் ….
நான்
என் அன்னையை கண்டேன்….

மழையை 
என் அன்னையாகக் கண்டேன்….

-----

என் ’தாய் மாமன்’ - தொலைபேசினார்.

“பிரபா…! ’வாழ்க்கை புக்’ வாசிச்சேன்.... நல்லாயிருக்கும்மா…. 'சமர்ப்பணம்’ன்னு - அப்பா அம்மாவ ஏன் போடல…?”

சட்டென உதடு கடித்தேன். கை விரல் உதறினேன்.

“ஐய்யோ… மாமா…! விட்டுருச்சு… அடுத்த பதிப்புல சேர்த்துருவோம்..”

“சரிம்மா…."

தொலைபேசியை கீழ் வைத்துவிட்டு – வானத்தை பார்த்தேன். கருமேகங்கள் மழையை பிரசவிக்க தயாராய் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.

”சாரிம்மா… சாரி டாடி! விட்டுருச்சு”

வானத்தில் மேகங்களுக்கு இடையில் சிறிய செருமல்…..

செருமலின் வழியே ஒரு சிந்தனை - ’பளிச்’ மின்னலென...! ”முதல் அத்தியாயம் பெற்றோர்களையும், அவர்கள் குணங்களையும் - நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், சொல்லுதில்லியா…! ஒரு அத்தியாயமே இருக்குதே…!”

நினைத்தது நானா…? அல்லது….! என் அன்னையும் தந்தையும் இதைச் சொல்கிறார்களா….? அல்கெமிஸ்ட் PAULO CAELHO சொல்வது போல….

ஒரு மழைத்துளி - சட்டென இறங்கி என் தேகம் தொட்டது. குளிர்ந்த நீர் காற்றோடு இணைந்திருந்ததில்… மேனி சட்டென சிலிர்த்தது. என் உடல் மொத்தமும் புல்லரித்தது. கண்கள் வெப்பமாய் ஒரு துளி நீரை பிரசவித்தது. 

மனதினுள் சட்டென ஒரு வாக்கியம் ஓடியது.

மழை என் தாய்….

அது கவிதையாய் என்னுள் உணரப்பட்டது. இதோ உங்களின் பார்வைக்கு பதிவிடப்பட்டது..

(என் அன்பிற்குரியவரும் – ஆசிரியருமான என் தாய் மாமன் ‘திரு.மோகன்’ அவர்களுக்கு நன்றி.

தொலைபேசி வழியாய்... இந்தக் கவிதை எழுத வைத்த அன்புக்கு நன்றி.

உலகம் இனிமையானது
உறவுகள் இனிமையானது
இயற்கை இனிமையானது)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக