பக்கங்கள்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கடந்த 1569 வருடங்களாய் உலகெங்கும் கிறிஸ்துமஸ் கோலாகலமாய் கொண்டாடப் படுகிறது.

அதெல்லாம் இல்ல, மேசப டொமியா காலத்தில இருந்தே என 4000 வருட பாரம்பரியம் காட்டினாலும் ஒகே. கொண்டாட்டம் தான முக்கியம், சந்தோசம் தான முக்கியம்.

இந்த கொண்டாட்டங்களின் சிறப்பு அம்சம் கிறிஸ்துமஸ் அடையாளங்களே. மெனக்கெட்டு செய்யப்படும் கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் சில பேருக்கும் ஒரு மாத உற்சாகம். கிறிஸ்மஸ் டிரி, குடில், ஸ்டார், வண்ண விளக்கு, சாண்டா கிளாஸ், நள்ளிரவு செபம், அன்பளிப்பு, இப்படி ஏகப்பட்ட சமாச்சாரங்கள். ஏன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ணம் கூட ஒரு முக்கிய அடையாளம்.

மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான டாடி ம்ம்மிக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன். வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம் எனவும் சொல்ல்லாம்.

இது நம்பிக்கையின் நாள்.
நம்மை வழி நட்த்த, நெறி படுத்த மனு உரு எடுத்த இறையின் உதயம் இன்று. இருள் விலகட்டும்,
இனிமை பிறக்கட்டும்,
நம் நெஞ்சங்களில் மகிழ்ச்சி குடியேறட்டும்.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புரிகிறது. அது என்ன பாக்ஸிங் டே. இத சொல்லி லண்டன்ல லீவெல்லாம் விடுறாங்களே, நாமளும் கிளவுஸ் போட்டு போய் குத்தணுமா. யாரன்னு சொல்லுங்க செஞ்சுருவோம் என கேட்கும் சில வாசகருக்காக இந்த பத்தி.

கப்பல் செய்து, திரை கடல் ஓடி திரவியம் தேடும் படகு தொழிலாளர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி. அதுவும் தகவல் தொடர்பில் முன்னேறாத கால கட்ட்த்தில், தொடர்ந்தால் தொடரும், முடிந்தால் முடியும் இதுதான் எங்கள் வாழ்க்கை என சோர்வாய் இருக்கும் மனித்னை தட்டி எழுப்பி,

இங்க பாரு இது களிமண்ணால் செய்த பாக்ஸ், இதில் காசு போட்டு வைத்து இருக்கிறேன், இந்த பெட்டியும் நீயும் பத்திரமாய் திரும்பி வருவீர்கள். வந்த பின் இதை திறந்து ஏழை எளியவருக்கு கொடுப்போம், என பாதிரி கொடுப்பார்.

இவன் கடல் பயணத்தில் நம்பிக்கை இந்த களிமண் பெட்டிதான். நல்ல படியாய் கரை திரும்ப வேண்டும் என இவனும் இதில் காசு போடுவான். வெற்றிகரமாய் திரும்பி வந்த பின் சந்தோசமாய் அந்த பெட்டியை உடைத்து பங்களிப்பதே இந்த பாக்ஸிங் டே.

கிறிஸ்துமஸின் அடுத்த தினம் நம்ம பாக்ஸிங் டே..... அதுக்கும் வாழ்த்துக்கள்.

கடைத் தெரு..... மிக்க நன்றி

கடைத் தெரு.....

தரமான பொருட்களை நேர்த்தியாக பொட்டணம் இடும் வலையுலக தளம். சமூக பொறுப்புடன் விசாலமான பார்வையில் தரம் மிகுந்த தமிழ் படைப்புக்களை நாம் படிக்கலாம். நண்பர் இன்பாவுக்கு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
’டாடி ஐ லவ் யூ’ எனும் பதிவு, மரணத்தை பற்றி ஆழமாய் உணர்த்துகிறது என பாராட்டிச் சொல்லி அவர் சில மாற்றங்கள் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
கீதையில் தொடங்கி வேதாகமத்தில் முடித்த, பாங்கில் மதம் கடந்து மனதை நெகிழ்கிக்கிறது. வாசகருக்கு உடன் ஏதாவது செய்யுங்கள் எனும் கோரிக்கையுமாய் புது பரிமாணத்தில் மின்னுகிறது.
http://kadaitheru.blogspot.com/
மிக்க நன்றி.

மரியாதை

நம்ம இடக்கு மடக்கு காரர் அடிக்கடி சொல்லுவாரே .... மரியாதையா ’மரியாதய’ ஆஸ்கருக்கு !!! அனுப்புங்கப்பா, அம்புட்டு ஆஸ்கரயும் அள்ளிக்கிட்டு வந்துரும்னு... அது கிடையாது. இது வேற மேட்டர்.

டேய் அவசரமா தேங்கா சில்லு வேணும்.

போய் மேட்டுக்கடையில் வாங்கிட்டு வா. பஸ்ஸ்டாப்பு அண்ணாச்சிகிட்ட போறேன்னு நேரத்த சுணக்காத, என அம்மா உச்சஸ்தாயியில் சொல்ல, நம்ம பொடியன் யோசிக்கிறான்.

அது ஏன் நமக்கு பஸ் ஸ்டாப்பு பக்கத்தில இருக்கிற அண்ணாச்சிய பிடிச்சுது. தூரம் அதிகந்தானே. மேட்டுக்கடை இங்கனக்குள்ள இருக்கு, அத விட்டுபுட்டு நடையா நடந்து அங்க ஏன் போகணும்.

ம்... அங்க போனா மரியாதயா வாங்க என்ன வேணும் என்பார். பார்வையிலும், நட்த்தையிலும், பேச்சிலும், வார்த்தையிலும் மரியாதை இருக்கும். இதுவே மேட்டுக் கடையில் என்னல வேணும் என ஒருமையில் பேச்சு, அசிரத்தையாய் பொதியும் பேப்பர் பொட்டணம், என வாங்கும் அனுபவம் சங்கடமே.

என்ன இது மரியாதை வேண்டி தான், என் மனம் அலைகிறதோ....

எப்படி தொடங்கியது. நினைவுகள் கிண்டி இந்த நிகழ்வை சொன்னது.

ஒரு நாள் குளிக்கிற சோப்பு வாங்க சென்ற போது, எள் போட்டா எண்ணையாகும் கூட்டம். அண்ணாச்சியும் பாவம் வேர்த்து விறுவிறுத்து தளர்ந்து இருந்தார். என்னவோ தோணுச்சு. அங்கன இருந்த பானைத் தண்ணீருல ஒரு டம்ளர் மோந்து அண்ணாச்சி குடிங்க என்றேன்.

எதிர் பார்க்க வில்லை போலும். சிரித்த முகமாய் வாங்கி மொடக் மொடக் என குடித்தார். என்ன வேணும் ரகசிய குரலில் கேட்டார். பரவாயில்ல அண்ணாச்சி, கூட்ட்த்த பாருங்க. மீண்டும் அதே ரகசிய குரலில் பதில்.

பரவாயில்ல என்பதாய் சொல்லு என்றார். நான் வாங்க வேண்டிய சோப்பை கை காட்ட டக்கென எடுத்து கொடுத்தார். நானும் கையில் இருந்த காசை கொடுத்து விட்டு, சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன், என விறு விறுவென நடந்து விட்டேன். அன்று தொடங்கியது இந்த மரியாதை.

நம்பிக்கை,
உயர்வான அபிப்பிராயம்,
இந்த உறவு வேண்டும்
எனும் நினைப்புக்கள் நம்மை மரியாதையாக்கும்.

காந்தி தாத்தா சொன்னது போல், நம் மரியாதை நம்மிடம் உள்ளது, அது அடுத்தவர் இட்த்தில் இருப்பதாய் நினைப்பதே நம் பிரச்சனையின் ஆணி வேர்.

புத்தியை சிறையில் அடை !!!

என்னடா படுக்காளி, ஆன்மிகம் பத்தி எழுதவே மாட்டேன்னு இருந்தியே.... தலைப்ப பாத்தா கொள்கையில கொப்பரை போல இருக்கே என அவசர தீர்மானம் வேண்டாம்.

இந்த அமெரிக்கா நகரத்திலே, அதிபருக்கு எதிராய் எழுதப்பட்ட ப்ளாக்ஸ்பாட்டின் தலைமை வலைஞர் அண்ணன் விக்ரம் புத்தியை சிறைப்படுத்தி விட்டார்கள்.

கர்நாடக மைந்தன், ஆந்திராவில் பயின்று, ஐஐடி யில் ஜல்லியடித்து விட்டு, இன்று அமெரிக்காவில் கம்பி எண்ணுகிறார். புஷ் அரசுக்கு எதிரான கொள்கைகளை தன் வலைப்பதிவில் சொன்னதால் என்றதும், லேசாய் கதிகலங்கித்தான் விட்ட்து. ப்ளாக்ல எழுதுனா கம்பி எண்ணனுமான்னு...

அப்புறம் பாத்தாத்தான் தெரியுது, வண்டவாளம் தண்டவாளம் ஏறின கதை. கருத்து சுதந்திரம் என்பது வளர்ந்த நாடுகளில் சாஸ்வதம். நம் சுதந்திரம் நாட்டுக்கு குந்தகம் விளைவித்தால் குற்றமே.

சமூக சிந்தனைக்கு ஒரு சல்யூட், சறுக்கிய சிந்தனையில் வன்முறைக்கு வித்திட்ட விவகாரத்துக்கு ஒரு எச்சரிக்கை.

முன் காலத்தில் சட்டம் ஒழுங்கு மீறியவர்கள், மனிதர்களே அல்ல, அவர்கள் மிருகமே என்றார். சில்வா மைண்ட் கண்ட்ரோலில் கூட சராசரி மனிதனால், 18 ஹெர்ட்ஸ்க்கு மேல் மூளை சிந்திக்கவே முடியாது. அதனால் தான் நம்மால் கொல்ல முடியாது என்பார். மனிதம் இல்லாதவரை விலங்கை போல் கூண்டில் அடைத்து வைத்த பழக்கமே சிறைச்சாலை.

மனம் ஒரு தங்கத்தட்டு. எல்லாம் நல்லது வைத்துவிட்டு ஒரு துணுக்கு மலமும் இருந்தால் நமக்கும் நாட்டுக்கும் எந்த பிரயோசனமும் இல்லை.

பேரையும் வைச்சுட்டு அது இல்லைன்னா எப்படி சார்.....

உங்க பொழைப்புக்கு ஊர உபத்திரவிக்கலாமா.

கோமாளாக்கா !!! கேட்டீகளா சேதிய....

வாங்க கோமதியக்கா, தண்ணி பிடிக்கும் போது ஊர் வம்பு இல்லயேன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். தவிச்ச
வாய்க்கு தண்ணி கிடைச்சுது.

நம்ம கோடிவீட்டு குப்பம்மா வீட்டுல குடித்தனத்துல குத்து வெட்டு.

ரோடே மறிச்சு பந்தல் போட்டு கல்யாணம் பண்ணாளே... பகுசு பரங்கிக்காய், பத்தலேன்னா பப்பரக்காய்!

ஆமாக்கா, மூணாம் மாசத்திலயே தலையண மந்திரம் ஒதி, வீட்ட பிரிச்சுட்டா அந்த மாராசி. !!!!
யாரு ?? ...
வேறாரு.... அவ மருமவதேன்.... ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்திருச்சாம்.

யேக்கா.... சின்ன புள்ளயா, வெக்கப் படக் கூட தெரியாம இருந்த பிள்ளையா இந்த போடு போடுது.

ஆள பாத்து கணக்கு போடாதக்கா, இந்த ஊரிலேயே வெள்ளந்தியா இருக்கது நீயும் நானும்தேன்....

நாலு பிள்ளைகள வைச்சு கூட்டு குடித்தனம் செஞ்சவளாச்சேடி குப்பம்மா, இத பாத்துக்கிட்டு ஒவ்வொண்ணும் பிச்சிக்குமே....

வீடு கலைந்த கவலை குப்பம்மாக்காவுக்கு, மாநிலம் பிரிந்த கவலை படுக்காளிக்கு.

அறவழியில் உண்ணாவிரதம் என தலைவன் முடிவெடுக்க, அடிச்சு உதைச்சு ஊரேயே ஸ்தம்பிக்க வைக்கணும்னு தொண்டர்கள் தடியெடுக்க, ஆந்திரா கொஞ்சம் ஆடித்தான் போனது.

ஆட்டம் இன்னும் நின்ற பாடில்லை,

அதற்குள் எங்களையும் பிரிச்சு விட்டுருங்க என வெட்டி வீரர்கள் கிளம்பிவிட்டார்கள். தமிழகத்தையும் சேர்த்து ஒன்பது மருமக்கள் தனி குடித்தனம் வேண்டி மாமியிடம் முறையிடுகின்றனர்.

நல்ல வேளை கலகத்தில் குதித்த கழகங்களில் திராவிடர் இல்லாமல் உழைக்கும்களிடம் இந்த கோரிக்கை இருப்பதால் பரவாயில்லை.

வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சு விளையாண்டாங்கிற கதையா, இந்த பிரிவினை போராட்டம் எல்லாம் அலார்ட்டா வெளாடுறது அவசியம்.

எல்லை கோட்டின் வரைவே இன்னும் பஞ்சாயத்துல இருக்கும் போது, வீட்டுக்குள்ள சண்டை நம்மைத்தான் பலவீனப் படுத்தும்.

மக்களே!!
மக்களின் மக்களே!!! குடி மக்களே,
அரசியல் பெருங்குடி மக்களே
உங்க பொழைப்புக்கு ஊர உபத்திரவிக்கலாமா.

தந்தை தவறிய போது

நண்பா!!!!
சொன்னதை செய்து விட்டேன்.

நான் உணர்ந்த்தை உரை நடையில் சொல்ல, கவி நடையில் சொல்லேன் என னிய நண்பர் சொன்னார்.

தந்தை தவறிய போது ....

சொல்லத் தவறினேனே,
சொல்லாய் சொல்லியிருக்க வேண்டுமே,
நடு வீட்டில் உடல் கிடத்தியபோது,
உணராத உடலிடம்,
எறும்பு உலாவிய கைகளில்,
ரோஜா மலருக்கிடையில் மரணமடைந்தவரிடம்
டாடி ஐ லவ் யூ என திரும்ப திரும்ப சொன்னேன்....

இன்னும் நான் பார்த்திருக்கணுமோ.... தவறி விட்டேனோ,
காலனிடம் நீங்கள் கால அவகாசம் வாங்கியிருக்கணுமோ.
கேள்வி க(ள்)ல் சிந்தையில் எறிகிறது.
வேள்வித்தீயில் உணர்வு எரிகிறது.

என் எல்லாமே தங்கள் பிச்சைதானே, உடல், படிப்பு, எண்ணம்
நான் உங்கள் மறுபிம்பம் தானே....
நன்றி அவசியமில்லையோ.
வார்த்தை வன்முறையோ.

ஏன் இந்த அழுகை, புலம்பல்.
யோசித்த்தில் புரிகிறது.
எனக்கு பிடித்த கவித்துவத்தை சிந்தையில் கலந்த்தும்,
தத்துவ தர்க்கத்தை தனதாக்கிக் கொண்ட்தும்.
கண்ணீரை பிரசவிக்கின்றன.
ஏக்கத்தை மூச்சில் கலப்படம் செய்கின்றன.
இல்லையேல் எண்பது வயசு தகப்பன் சாவு சமனம் தானே.

போன விடுப்பில் உங்களை பார்த்தேன்.
ஆள் பாதியாய்.
ஆடையில் பாதியாய்,
இடுப்புப் பட்டி இல்லாவிடில் கால் சட்டை தரை தவளும்.
கன்னத்து சதை காற்றில் கரைந்திருக்க,
கண்களிடத்தில் கருங்குழி கவிதை வாசித்திருந்ததே....
கோர்வை இல்லா பேச்சு,
நிச்சயமில்லா நினைவு
என காலம் தங்களை கலைத்திருந்தனவே

சொன்னா கேக்குறதில்ல, சுகரெல்லாம் இருக்கு,
பிஸ்கட் சாப்பிடலாமா என அக்கம்
அக்கரையாய் சொன்ன போது
பொக்கை வாய் காட்டி பதிலேதும் சொல்லாமல்,
அலங்க மலங்க பார்த்த்துமே புரிந்த்து.
நான் அறிந்த தந்தை காணாமல் போயாச்சு..

மலர்ந்த சிரிப்பு, நிமிர்த்திய தோள்,
வீசிய கை என நீங்கள் நடந்தால்
நாங்கள் பெறுமையுருவோமே,
இதெல்லாம் ஒண்ணுமில்ல, போனாப் போகுது
என பிரச்சனை சுனாமி குடும்பத்தை
பதம் பார்க்க வந்தபோது உரமாய் உரைத்தீரே
நான் இருக்கிறேன் குடும்பத்துக்கு என நம்பிக்கை விதைத்தீரே.
எங்கே அந்த தந்தை....

இப்போது பார்த்தேன், அடுத்த முறை பார்ப்பேனா,
தெரியாது என பதில் சொல்லி,
விதைத்த நினைவினால் அருகமர்ந்தேனே...
வெற்றுப் பார்வையில் அலறும் மெளனத்தில்
பூங்காவில் இருந்தோமே... பூப்போல
- பூவுக்கு மத்தியில்
கடமையெல்லாம் முடிஞ்சுச்சு, கடவுள் கூப்பிட்டா போ வேண்டியதுதான்,
என மரணத்துக்கு புது விளக்கம்.

விநோதமாய் பார்த்தேன்,
கடமை முடிக்கும் தளமாய்த்தான் வாழ்வை கொண்டீர்களா,
அவசரக்குடுக்கையாய் அறிவுரை சொல்லாது,
வேறு என்ன ஆசை,
உடுக்கணுமா, உண்ணனுமா, சினிமா போகணுமா,
அரைகுறையாய் ஜோக் சொல்லி சிரிக்க வைக்க நான்,
கிடந்தால் தேவல, பையன் பேசிக்கிட்டே போறானே
என உள்ளுக்குள் என உள்ளுக்குள் நினைத்திருப்பீர்களோ....

புரியாத மரணத்தில் பயமே பிரதானம்,
வெல்ல முடியா இயற்கையில் இயலாமையே பல் இளிக்கும்.
அன்பாய் அலட்டாமல்... தெரியுமப்பா என சாவ முடியுமா.
இல்லை, உறக்கத்தில் மறைந்த்தும்,
மடிப்பு கலையாத போர்வையிலும்
மரணத்தை நீங்கள் வென்று விட்டீர்கள்.

ஆன்மாவெல்லாம் கிடையாது,
அடம் பிடிக்கும் அறிவியல்.
உடம்பு தான் மனிதன் அதை தாண்டி ஒன்றும் இல்லை,
செத்துப் போன காரணம்... இதயம் நின்று போனது
என மூர்க்கமாய் முழங்கும்.
ஏன் நின்றது...
அது அப்படித்தான் என
அறிந்த்தை மட்டும் அறிவியல் சொல்லும்

தெரிந்ததில் தொடங்கி தெரியாது என முடிப்பது ஆன்மீகம்
தெரியாததில் தொடங்கி தெரியும் என முடிப்பது அறிவியல்

ஆவியை இறைவனிடம் ஒப்புக் கொடுக்கிறேன்
எனும் எண்ணத்துக்கு,
என்னத்துக்கு !!!
என கேட்டு அறியாமை என அட்ரஸ் தரும்.
ஒதுக்கி வைக்கப்பட்ட மனஇயல் கூட
பிற்பாடு ஒட்டிக் கொண்ட்து.
இன்று ஆன்மீகம் ஆசிரமம் தாண்டி
ஆஸ்பத்திரியில் நுழைகிறது.
ரெய்க்கி, பிரானிக் ஹீலீங் எனும்
அப்பல்லோவின் புதிய முயற்சி
ஆச்சர்யதின் அஸ்திவாரம்.

அன்னைக்கு இலக்கிய புலமை,
ஏறக்குறைய எல்லாம் தெரியும் சங்கமோ சமகாலமோ....
தமிழும் கிடைக்காத போன கிரந்தமும் விரல்நுனியில்,
கல்வெட்டின் முனைவர் எனும் முயற்சியும் முற்றுப் பெறாமல்
காலன் வந்து உயிரைப் பறித்த போது,
கோபம் தீயாய் கழன்றது.
எங்கே புலமை, எங்கே உயிர்.
இதுதான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும்.

உங்கள் இன்றும் அதே மரணம் உங்கள் மரணம்,
வேறு திசையில் இழுத்து செல்கிறது.

கவலைப் படவோ அலட்டிக் கொள்ளவோ ஒன்றும் இல்லை,
என சமனமாக்குகிறது.

மறைமுகமாய் என் மரணத்திற்கு பறை அறைகிறது
அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது
என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள்
சுவடு தெரியாமல் காணாமல் போகிறது.
என் மரணம் பற்றிய தீர்மானத்தில்
வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது.

நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம்.
என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.

டாடி ... !!! ஐ லவ் யூ...

கை பற்றி, மெல்லமாய் அழுத்தி, கண்கள் நேருக்கு நேர் சந்தித்து டாடி ஐ லவ் யூ.... என சொல்லி இருக்க வேண்டும். அப்போது சொல்லாமல், என் தந்தை இறந்து அவர் உடல் நடு வீட்டில் கிட்த்தியபோது அழுது கொண்டே ... டாடி ஐ லவ் யூ
திரும்ப திரும்ப மனம் சொன்னது. கண்கள் என் கட்டுப்பாடின்றி கண்ணீர் சிந்தியது.

அந்த வெப்ப நீர் பார்வையை மறைத்தது.. வெளி உலக பிரஞ்கை இன்றி எனக்குள் பேசிக் கொண்டு இருந்தேன்.

சாரி டாடி... இன்னும் உங்களை பார்த்திருக்கணுமோ. தவறி விட்டேனோ. ஒரு மனுசனாய் இருக்க வைத்ததே நீங்கள் தானே. இந்த உடல், உள்ளம், படிப்பு, சோறு, வாழ்க்கை தரம் என எல்லாம் நீங்கள் தந்தது தானே. பிறந்த நிலையில் நான் இருந்திருந்தால் அன்றே இறந்திருப்பேனே... தங்கள் கருணைக்கு.... நன்றி என வாய் வார்த்தையாய் சொல்லவில்லையோ.

நன்றி என எப்படி சொல்வேன், நான் உங்களின் மறு பிம்பம் தானே.

ஏன் இந்த அழுகை. ஏன் இந்த புலம்பல். ஏன் துயரம். மரணம் தெரியும் தானே. ஓ புரிகிறது... மெல்லிய உணர்வான கவிதையை என்னுள் கலந்து விட்டதாலும், தத்துவ சிந்தனையை என்னுள் தக்க வைத்து கொண்டதனாலேயும் தான் இந்த துயரம். இரண்டும் இல்லை எண்பது வயசு தகப்பன் சாகும் போது சமனம் தானே .

ஆறு மாதம் முன்பு விடுப்பு எடுத்து வந்த போது நானாய் நினைத்து கொண்டேன். அடுத்த முறை உங்களை உயிருடன் பார்ப்பேனா...... மனதினுள் கேள்வி கேட்டு. தெரியாது, சரியாய் சொல்லவும் தெரியாது என பதிலும் யோசித்தேனே. அந்த நினைப்பு வந்த்தால், உங்கள் அருகில் அமர்ந்து நிறைய நேரம் பேசினேனே. மெல்ல தோள் அணைத்து உங்கள் மறுப்பையும் மீறி, அருகில் இருந்த பூங்கா சென்று அமர்ந்தோமே. நீண்ட நேரம் உங்களை பேச விட்டு கண்கள் மூடி கேட்டேனே.
சுகர் இருக்குது, பிஸ்கட் சாப்பிடலாமா, என அக்கம் அக்கரையாய் சொன்னபோது, மலங்க மலங்க விழித்து, பொக்கை வாய் காட்டி சிரித்தீர்களே.... அப்போது புரிந்தது. நான் அறிந்த தந்தை காணாமப் போயாச்சு. ஆள் பாதியாய், ஆடையில் பாதியாய், கன்னத்து சதைகளை காற்றுக்கு கொடுத்து விட்டு, கண்களில் கருங்குழி கவிதை வாசித்திருக்க..... காலம் தங்களை சிதைத்து தான் இருந்தது.

அவசரக் குடுக்கையாய் அறிவுரை எல்லாம் சொல்லாது, எல்லாம் தெரிந்ததாய் நான் நடிக்காது, மழலையின் மன நிலையில் உங்களிடம் நான் கேட்டேன்... வேறு என்ன ஆசை. எதுவும் சாப்பிடணுமா, எதுவும் வேணுமா, சினிமா போகணுமா, உடுப்பு எதுவும் வேணுமா.... இதமான புன்னகையில் மறுத்து சிரித்த போது.............. உலகில் அழகு நீங்கள் தான் என தோன்றியது.

மெல்லிய வார்த்தையில் உங்கள் வாழ்வு வெற்றிகரமானது. உழைப்பால் முன்னேறி, நல்ல ஒரு குடும்பம் சமைத்த்தை நினைவு கூர்ந்து எல்லாம் நல்லதே என நாம் இருவரும் கருத்தில் இணைந்தோமே. மெல்லிய அந்த உணர்வு நம்மை இணைத்ததே... புனிதம் இறையியம் என்பது எனக்கு புரிந்தது.

எல்லா கடமையும் நல்ல படியா முடிஞ்சுச்சு, மேல இருக்கிற ஐயா எப்போ கூப்பிட்டாலும் ரைட்டு என குண்டி மண்ண தட்டி விட்டு போக வேண்டியது தான் என நயம்பட சொன்னீர்களே. தூத்துக்குடி காரர் நீங்கள், கடல்கரை மண்ணில் உட்காருவதும், எழுந்து உடைகள் சரி செய்வதும் என் நினைவுக்கு வந்த்தே. வாழ்க்கை என்பது நம் கடமைகள் நிறைவேற்றும் .... அல்லது பொறுப்புக்கள் முடிக்கும் தளமாய்த்தான்.... யோசித்தீர்களா.

நீங்கள் வாழ்வை ரசித்தீர்களா, இன்பம் துய்த்தீர்களா. ஐயா கூப்பிட்டா போக வேண்டியது தான் எனும் வார்த்தை பிரயோகத்தில் இறை நம்பிக்கையும், அன்பு கலந்த வாஞ்சையும் தெரிகிறது. இறைவனை காதலனாகவும், வேலைக்காரனாகவும் பார்க்கும் பாரதியின் பக்குவம் இதை சொல்லிக் கொடுத்ததோ...

மரணம் மனிதனுக்கு முழுதும் புரியாதது.

ஓங்கி நிற்கும் குழப்பத்தில் பயமே பிரதானம். வெல்ல முடியாத மரணத்தில் இயலாமையே பல் இளிக்கும். சே !!!! என்னடா இது நாமளும் செத்துப் போவோமே என கோபம். ஏனோ தெரியவில்லை, அமைதியாய் அன்பாய்... ஆங்.... தெரியுமப்பா பிறந்தால் இறப்போம் என அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் மரணிக்க கடினம் உள்ளதே. எங்களுக்கெல்லாம்............ !!!!

உங்களுக்கு எப்படி....... ????

இல்லை. தூக்கத்தில் பிரிந்த தங்கள் உயிர், மூடிய போர்வை விலகாத விந்தை, எனக்கு தாங்கள் மனித இயலாமையை மீறியதாய் தோன்றுகிறது. முரண்டு பிடிக்காது, அன்புடன் மரணத்தை
முத்தமிட்டதாய் தோன்றுகிறது.

அறிவியல்,............. மனிதன் என்பவன் உடல் தான் அதைத்தாண்டி ஒன்றும் இல்லை... என அடம் பிடிக்கும். ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாத மன இயல் கூட பிற்பாடுதான் ஒட்டிக் கொண்டது. இன்றோ......... ஆன்மீகம் சில ஆஸ்ரமங்களை கடந்து ஆஸ்பத்திரியில் நுழைந்து இருக்கிறது.

புற்று நோயால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு பிராணிக் ஹீலீங், ரெய்க்கி என தனி பிரிவு அமைத்து அப்பல்லோ எனை ஆச்சர்யப்படுத்தியது.

மதங்கள் மனித குலத்துக்கு செய்தது என்ன........ நித்திய வாழ்வு, சொர்க்கத்தில் சுகம்........ என மதங்கள் எத்தனை மத்தளம் வாசித்தாலும் சராசரி மனிதன் சஞ்சலம் தீரவில்லை.

ஆமா... யில்ல!!! என சொல்லிவிட்டு ; இல்ல..... ஆமாம்!!! என சிந்திக்கிறான்.

என் அன்னை இறந்த போது, எனக்கு வாழ்க்கை மேல் ரெளத்திரம். கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

எனை பெற்றவளுக்கு தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமை. சங்க, சமகால இலக்கியத்தில் ஏறக்குறைய எல்லாம் தெரியும். எந்த கடின வார்த்தையாயினும் அர்த்தம் தெரியும்.
தமிழ் மொழி மட்டுமின்றி, நான் அறியாத........... அழிந்து போன கிரந்தம் எல்லாம் தெரியும். கல்வெட்டில் முனைவர் ஆக முயற்சி வேறு.

அரைகுறை தமிழ் தெரிந்த நான் வெட்கத்தில் தலை குனிந்து ... சே! எப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்குவேன் என ஏக்கப் பார்வை இட வைத்த அன்னை மறைந்த போது.

இவ்வளவுதானா. எங்கே அந்த ஞானம், எங்கே அந்த புலமை. என திரும்ப திரும்ப கேள்வி பிறந்து, போச்சா.... மூச்சோடு அதுவும் போச்சா... இது தான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும். எதுக்கு கஷ்டப்படணும் என சிறு குழந்தை போல் திகைத்து நின்றது என் பகுத்தறிவு.

எதுவுமே எதற்குமே அர்த்தம் இல்லை என்பதாய் அவசர தீர்மானம் செய்தது.
....குழப்பத்தில், முடிவு எடுக்காமல் முற்றிப் போயிற்று அந்த எண்ணம்.

ஆனால் தங்கள் மறைவு எனை சமனமாக்கியது. இவ்வளவு தாண்டா வாழ்க்கை, பெரிசா அலட்டிக்கிறதோ, கவலைப்படறதோ அவசியமில்லை. என எதிலும் சாராமல் உணர்வுகள் அனாதையாய் இருக்கின்றன.

தங்கள் மறைவு எனக்கு மறைமுகமாய் என் சாவு பற்றி பறை அறைகிறது. அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது. என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள் சுவடு தெரியாமல் காணாமல் போயிற்று. என் மரணம் பற்றிய தீர்மானத்தில் வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது.

நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம். என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.

ஐ லவ் யூ டாடி.....