பக்கங்கள்

நம்பினார் கெடுவதில்லை...

பர்மா பஜாரின் அந்த கடையில் லேசான பதட்டத்துடன் நின்றிருந்தேன். விஷயம் வேறொன்றுமில்லை, இரு வாரங்களுக்கு முன் வாங்கிப் போன சிடி வேலை செய்யாததால் ரிடர்ன் செய்ய வந்திருக்கிறேன். உடனே வந்திருக்க வேண்டும், வேலைப் பளு, என்ன செய்வது.

இருந்தாலும் கடைக்காரர் என்னை அடையாளம் கண்டு கொண்டு..... சொல்லுங்க சார்.... !!! என்றதும் நிம்மதிப் பெருமூச்சு. சிடி வாங்கிப் பார்த்துவிட்டு, வேலை செய்யலயா…. சாரி சார் இந்த படம் ஸ்டாக் இல்லையே, வேறு ஏதாவது வாங்கிக்கிறீங்களா என்றார். மேலோட்டமாய் கண்ணை மேய விட்டு, அகப்பட்ட எதுவுமே மனசுக்கு பிடிக்காததால், கொஞ்சம் தயக்கமாய் நின்று கொண்டிருந்தேன்.

பரவாயில்ல சார், கேஷ் கொடுத்துறவா என அவர் கேட்க சந்தோசமாய் தலையசைத்தேன். கடைக்காரர் என்னிடம், எவ்வளவு சார் என்றதற்கு 40 என்று நான் பதில் தர, கடையில் வேலை செய்த பையன்.... இல்ல சார் 35 தான் என்றான். எனக்கு டவுட், 35 ஆ அல்லது 40ஆ. தீர்மானமாய் தெரியவில்லை, என்றாலும் கடையின் உரிமையாளர், சார் சொல்றாருல்ல… சரியாத்தான் இருக்கும் என எந்த தயக்கமும் இல்லாமல், சிரிப்புடன், 40 ரூபாய் கொடுத்து விட்டார்.

35 ஆ 40 ஆ என கேள்வி கேட்டுக் கொண்டே, கார் வரை வந்து விட்டேன். காரும் ஸ்டார்ட் செய்து கிளம்ப தயாரான போது, தயக்கம்… ஒரு வேளை 35 தானோ, சட்டென காரை நிறுத்திவிட்டு, குதித்து இறங்கினேன். விரு விரு வென வேகமாய் அவரிடமே திரும்பி வந்து, சரியா தெரியல சார், ஒரு வேளை பையன் சொன்னது சரியாயிருக்கும்… இந்தாங்க என ஒரு ஐந்து ரூபாய் காகிதத்தை....... அவர் மறுத்தும் !!!! ..... திணித்து விட்டு வந்து விட்டேன்.

மீண்டும் காரில் அமர்ந்த போது, மகிழ்ச்சி மற்றும் நிறைவு. ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு வந்ததா, இந்த மகிழ்ச்சி. இதயம் விம்மி பூரித்து இருந்ததை நான் உணர்ந்தேன். தலை உயர்ந்திருந்தது. மூச்சு சுகமான தாள லயத்தில் மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது. உலகமே நல்லதாய், மனித நேயம் மின்னுவதாய் தோன்றியது.

நான் நினைப்பதை, உணர்வதை.... சில கேள்விகள் கேட்டு இன்னும் ஆழமாய் புரிந்து கொள்ள விரும்பினேன். என் எண்ணங்களை எடை போட்டு, பகுத்தறிவு வேலையை தொடங்கியது.

நம் எதிரில் இருப்பவர் நம்மை நம்புகிறார் என்பது, நமக்கு தரப்படும் மிகப் பெரிய அங்கீகாரம்... அவர் தரும் உச்சகட்ட மதிப்பு.

அந்த நம்பிக்கை தரும் உணர்வு .... எவரையும் கமிட் செய்து விடும். ஏமாற்ற சான்ஸே இல்லை. இல்லாமலா பின்னே… பாருங்களேன்…. வேலை மெனக்கெட்டா மறுபடி 5 ரூபாய திரும்பி கொடுக்க….. செல்ல சொல்லும்.

சக மனித நம்பிக்கை என்பது வரம். நண்பர்களுக்கிடையில், அலுவலகத்தில், குடும்பத்தில் இது அமைந்தால் வரப்பிரசாதம்.

சந்தேகம் என்பது சாக்கடை, நம்பிக்கை என்பது நறுமணம் கமழும் மலர் கொத்து.

தங்கத்தட்டாகவே இருந்தால் கூட, மண்ணை வைத்திருந்தால், அதையென்ன சாப்பிடவா முடியும்.

நம் மனம் எனும் தங்கத்தட்டை எதைக் கொண்டு நிரப்புவது எனும் முடிவு நம் கையில் உள்ளது.

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு

மேஜிக்…!!! இப்ப ஸ்டார்ட்… (சிறுகதை)

பகுதி -1

ஒரு சாயா …. பாய்லரின் திசையில்!!! சொல்லிவிட்டு அந்த டீக்கடையின் மரப் பலகையில் அமர்ந்தான் மாணிக்கம். அவனையும் சேர்த்து இன்னும் சில பேர் அங்கு தற்காலிக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர், குடிச்சுப்புட்டு அப்புறம் வீட்டுக்கு போவோம் என்பதாய்...

மிகவும் அசிரத்தையாக தினப் பத்திரிக்கையின் குருவியார் கேள்வி பதில் படித்து கொண்டிருந்தார் ஒரு வாடிக்கையாளர். டியர் குருவியாரே, நடிகைகளில் யார் அழகு, அசினா, தமன்னாவா, அமலா பாலா, நமிதாவா என சர்வதேச பிரச்சனையை கேள்வியிருக்க, அதற்கும் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதியிருந்தார் குருவியார்.!!! படித்து கொண்டிருந்த நம் பிரண்ட், மனத்திரையில் அக்கேள்விக்கான விடையை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கென போட்ட டீ அவர் பக்கத்திலேயே இருந்தது. எப்ப சார் குடிப்பீங்க என முதலில் புகையும் மணமும் பரப்பிய தேனீர் இப்போது ஆறிப் போய், ஏழிப் போய், எட்டிப் போயிருந்தது.

கோவையின் புற நகர் பகுதி சில்லென்ற காற்றுடன் அழகாக இருந்தது. அங்கு அமைந்திருந்த அந்த அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, புண்ணியத்தில், அந்த வட்டாரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. கருப்பு ஸ்பீக்கரின் வழி வந்த இசையில் இரைச்சல் அதிகமிருந்தது. விழா உற்சாகம் எங்கும் பரவியிருந்தது, காற்றில் கூட கலந்திருந்தது. உரத்த குரலில் கூச்சலிட்டு, சிறுவர் கூட்டம் சுற்றி சுற்றி ஓடி வெளாண்டு கொண்டிருந்தது. பளிச்சென்ற வண்ண உடையில் இளம் பெண்களும்,அதனாலேயே கூட்டம் கூட்டமாய் சில இளவட்டங்களும் சிரிப்புடன் இருந்தன. இருக்க கிடைத்த இடமெல்லாம் அமர்ந்து பெருசுகளும் கால் நீட்டி, இளைப்பாறி சிரித்து கொண்டிருந்தனர். மனிதர்கள் அப்பகுதியை நிறைத்து இருந்தனர்.

மாணிக்கம் உட்கார்ந்த நிலையில், டீக்கடையில் வருவோர், மற்றும் சாலையில் கடந்து செல்வோர் என எல்லோரையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நடை உடை பாவனைகள், பேச்சுக்கள் என உற்று துளாவி கொண்டிருந்தான். அவர்கள் காசு கொடுக்கும் போது எவ்வளவு வைத்திருக்கிறார்கள், எப்படி தருகிறார்கள் எனவும் சூசகமாய் பார்த்து கொண்டிருந்தான்.

கசங்கிய நோட்டுக்கள் என்பது தனி மனித விசயம் அல்ல, அது ஒரு ஊரின் கலாச்சாரமே என மாணிக்கம் நம்புகிறான். குடுக்கல் வாங்குதல் ஜாஸ்தி என்பதால் ரூபாய் கசங்குவதாகவும் அந்த ஊரில் பணப்புழக்கம் ஜாஸ்தி என்பான். மாற்றுக் கருத்து ஏதுமிருந்தால் நீங்கள் மாணிக்கத்திடம் தான் கேட்க வேண்டும். கூட்டம் திருவிழா அங்கு வரும் மனிதர்கள் அவர்கள் பணப்புழக்கம் என பார்த்து மனதில் இறுத்துவது மாணிக்கத்திற்கு மிக மிக முக்கியம், அவசியம். என்ன செய்வது அவன் தொழில் அப்படி….. ஜேப்படி, திருட்டு என குயிக்காக கெஸ் செய்திருந்தால்….. சாரிங்க, அப்படி இல்லை, நம் மாணிக்கம் நல்லவன், அவன் திருவிழா நடக்கும் இடங்களில் டெண்ட் அமைத்து, மேஜிக் தொழில் செய்து வருபவன். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வயிறு கழுவி வண்டியை ஓட்டும் ஒரு நாடோடி.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாக, சதுரமாய், நான்கு முனைகளில் அளந்து புள்ளி வைத்தான். பின் நடு மையத்தில் இன்னொரு புள்ளி. மூன்றடி ஆழத்தில் கடப்பாரையின் உதவி கொண்டு ஐந்து குழி தோண்டி, மூங்கில் கழி நான்கும், உயரம் கூடிய மூங்கில் நடுவிலும் அமைத்து ஒரு கொட்டகை தயார் செய்தான். மாயாஜாலம் மேஜிக் எனும் பெயிண்ட் அடித்த துணியை முன்னால் கட்டினான். உதவியாளனை பாதுகாப்புக்கு வைத்து விட்டு, டீ குடிக்கும் சாக்கில் இந்த ஊரைப் பற்றி தெரிய வந்து விட்டான்.

வாருங்கோ… என்னாங்கோ…. கேட்டுப் போட்டு போங்கோ…. என்பதை இன்றைய நிகழ்ச்சியில் சேர்த்து விடுவான். கஸ்டமைஸ்ட்டு காம்பேயரிங்க் என்பதுதான் அவன் ட்ரேட் சீக்ரெட்.

அவன் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. மாசம் பிறந்தால் சம்பளம் வரும் சௌகரியம் இல்லை. இதுதான் ஆபிஸ் என செல்லும் இடமும் இல்லை. புதிய ஊர்களும், புதிய உணவும் என வாழ்வு பரந்து விரிந்த மேகத்தின் கீழ். வீடோ, உறவோ எதுவும் இல்லை. அமையவும் இல்லை, அமைக்கும் எண்ணமும் திட்டமும் இல்லை… ஏன் என அவனுக்கும் தெரியவில்லை.

இன்று எப்படி என திட்டவட்டமாய் தெரியாது, நாளைய திட்டமிடுதலும் அத்தனை வலுவானதல்ல. என்றாலும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. தென் இந்தியாவின் கிராமப் புறங்களும் அதன் வாழ்க்கை முறைகளும் அவனை விட அறிந்தவர் யாருமில்லை எனலாம்.

ம்…. இங்க ஓட்டம் அவ்வளவில்லீங்க, புத்தூர் மாரியம்மன் கோவில்ல நல்ல கலெக்‌ஷன், அங்கேயே திரும்பி போயிறலாம்ன்னு இருக்கேன் என பலூன் காரன் சொன்னதை நம்பி இவனும் தன் ஜாகையுடன் இடம் மாறிவிடுவான். இன்னொரு சமயத்தில் வேர் விட்டான் கிராமம் வந்து, இங்க நாலு நாள் டெண்ட்டு என வந்த இடத்தில் அடை மழை இவன் திட்டத்தை மாற்றியது. அன்றே கிளம்பி விட்டான்.

வருத்தங்களோ, சந்தோசங்களோ பெரிய அளவில் அவனை பாதிப்பதில்லை. எதிர்பாராமல் கடைய நல்லூரில் கிடைத்த 10,000 ரூபாய் கலெக்‌ஷன் அவன் எதிர்பாராதது. ஒரு வாரம் தனக்குத்தானே லீவு கொடுத்து கொண்டான். அடுக்கிய ரூபாய் நோட்டுக்களை விசிறி விசிறி கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் முகர்ந்து பார்த்தான் பின் பஜார் சென்று பள பள வெல்வெட்டில் ஒரு கோர்ட் சிவப்பு கலரில் வாங்கினான். இன்றும் அதை அணிகிறான், துவைக்காமலேயே !!! முழங்கால் வரை நீண்ட கோல்ட் மின்னும் ரெக்சின் ஷூஸ் என வியாபாரத்தின் மூலதனங்கள் சில வாங்கினான்.

வயிறு முட்ட உணவருந்தினான். உதவியாளன் குமாருக்கு 3000 ரூபாய் கொடுத்தான். காலில் விழுந்து வணங்கியவனை நினைத்து பெருமையாய் கட்டிப் பிடித்தான். ஆனாலும் இவன் கொடுத்த பணம் தந்த தெம்பில் உதவியாளன் வேலைக்கு வராமல் காணாமல் போனான். தேடி வீட்டுக்கு போயும் பிரயோஜனமில்லை. என்ன செய்வது, வேறு உதவியாளரை பிடித்து, அவனுக்கு பயிற்சி தந்து தொழில் கெடாமல் பார்த்துக் கொண்டான். நல்ல வேளை சில நாட்கள் செலவிலும், கையிருப்பின் புண்ணியத்திலும் சேதாரம் அதிகமில்லை. என்றாலும் அன்று ஒரு முடிவெடுத்தான் கவனமாய் காய் நகர்த்த வேண்டும். அதிகம் லாபம் வந்தால், வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும், என வர்க்க பேதத்தின் முதலாளியாய் சிந்தித்தான்.

மது பழக்கமில்லை, சில நாட்கள் குடித்திருக்கிறான், குடித்தவுடன் உணர்ந்த மிதக்கும் உணர்வு பிடித்திருந்தாலும், அடுத்த நாள் உடல் வாதையும் வாய் நாற்றமும் அவனுக்கு பிடிக்கவில்லை. குடிக்கவே கூடாது என்ற தீர்மானம் எல்லாம் இல்லை என்றாலும், இன்று குடிக்கணும் எனும் தூண்டுதலும் இல்லை. அதனால் குடிக்காமலேயே இருக்கிறான்.

அப்பா அம்மா யார், தெளிவாய் தெரியாது. விவரம் புரிய ஆரம்பித்த 4 வயதில் ஒரு வயதான தாத்தாவுடன்தான் சுற்றித் திரிந்தான். அவரது சுருங்கிய கருத்த கையை பிடித்து கொண்டு உலகை வலம் வந்த போது மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பும் தெரிந்தது. அவர் மடியில் அமர்ந்து, ரோட்டோரம் பார்த்த வாகனம் இன்னும் நினைவிலிருக்கிறது. அதிகம் பேசாத, அவரை அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு சாலை விபத்தில் அவரை பலி கொடுத்து விட்டு, அரசு மருத்துவமனை பிணவறையின் வாசலில் உட்கார்ந்திருந்த போது பயமே மிஞ்சியிருந்தது. பசியும் அதிகமிருந்தது. அவன் பசியறிந்து, உணவிட்டவன் பிணமாகி உள்ளே படுத்த தினம் தான் மாணிக்கத்தின் வாழ்வு திசை மாறியது.

நீ யாருடா, அவருக்கு என்ன உறவு என கான்ஸ்டபிள் கேட்ட கேள்விக்கு வாய் விட்டு அழவே தெரிந்திருந்தது. பயம் அலைக்களிக்க, போலீஸ் இல்லாத சமயத்தில் ஒரே ஓட்டமாய் ஓடி, ரயிலேறி எங்கோ இறங்கி, ஊர் பேரெல்லாம் தெரியாத ஒரு குளக்கரையில் விழுந்து கிடந்து, சாலையோர குப்பை தொட்டியில் கிடந்த உணவுப் பொட்டலத்தில் பசியாறி, அடுத்து என்ன செய்யணும் என யோசிக்க தெரியாத போது, விதி குருவி தலையில் பனம் பழம் தான் வைத்திருந்தது.

அந்த தாத்தாவுடன் மறைந்து போன தன் பிறப்பு தகவல்களை இவன் தோண்டி துருவி பார்க்கவும் இல்லை. மாணிக்கம் கவலைப்படுபவன் இல்லை. உறவு சமைக்கும் எண்ணமே இல்லாததால் யாரிடமும் ஒட்டு இல்லை. ஊர் ஊரான சுற்றுதல், விதவிதமான மனிதர்கள் என அவனுக்கு அவனது வாழ்க்கை பிடித்தே இருக்கிறது.

தேனீர் கோப்பையை சுவைத்து கொண்டிருந்த மாணிக்கம், தன் உதவியாளர் ஓடி வருவதை பார்த்தான். மூச்சிரைக்க, ஓடி வந்தவன் சொல்லத்துவக்கினான். அருகில் இருந்த மரத்தில் இருந்த காகம் இவர்கள் சம்பாஷனையை கேட்டது…..

தொடரும்……………..

காணும் பொங்கல்...

உழவுத் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் என பெருமையுடன் கொண்டாடும் நம் கொண்டாட்டங்களின் வாழ்த்துக்கள். இக்கொண்டாட்டங்களின் சில பழைய நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன். இன்றைய அதிவேக கலாச்சாரத்தில் தொலைந்து போன சில தகவல்களின் வாயிலாய் சில நினைவுகளை சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

பொங்கலின் அடுத்த தினத்துக்குத்தான்… அடேயப்பா!!! எத்தனை பெயர்கள். மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரி நாள். இதில் இந்த கரிநாள்…. !!! ஏன் இந்த பெயர் வந்தது... எனத் தெரியவில்லைதெரிந்தால் சொல்லுங்களேன். (ஆட்டுக் / கோழிக் கறி சாப்பிடும் நாள் என குறிப்பிடுவதாய் இருந்தால்….. சூப்பர்…. சப்புக் கொட்டிக்கொண்டு அங்கீகரித்து விடலாம்..)

பொங்கல் கொண்டாடிய எல்லோரும் நிச்சயம் எடுக்க வேண்டிய அடுத்த முடிவு கொண்டாட்டத்திற்கான அடுத்தகட்டம். அதுவே இந்த காணும் பொங்கலுக்கான ஏற்பாடு. திட்டமிட்டு அருகாமையில் ஒரு பயணம் செல்வது குடும்பமாக. பண்டை தமிழரின் நிலாச்சோரு நிகர்த்த நிகழ்வு எனவும் கொள்ளலாம்.


வீட்டின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை. கடமைக்காய் குடும்பத் தலைவர்… ஒரு நாள் வெளியில் செல்லும் ஆசையோடு - சுதந்திரக் காற்றுக்காய் குடும்பத் தலைவி…., அடுத்த வீட்டு மல்லிகா புதுப் புடவையின் நிறமும் பவுசும் தெரிந்து விடும் எனும் நப்பாசையோடு. பருவத்தின் வாயிலில் உள்ளோர்கள்…. நாங்க இருக்கோம்…. எங்களையும் கவனிங்கப்பா…. என தங்களை விளம்பரப் படுத்தும் குதூகூலத்துடன்.

என் சொந்த ஊர் தூத்துக்குடி என்பதால் அது சார்ந்த நினைவுகளே இங்கு பதிக்கப்பட்டிருக்கிறது. முயல் தீவு, சிங்காரத் தோப்பு, கோரம் பள்ளம், ரோச் பூங்கா, கட்டபொம்மன் கோட்டை என மற்ற நாட்களில் மறந்திருந்த கேளிக்கையின் இடங்கள் எல்லாவற்றிற்கும் இன்னிக்கு மவுசு அதிகமாச்சு. மாநகராட்சி புண்ணியத்தில் சுத்தம் செய்யப்பட்டு இந்த விழாக்களுக்கென ஒப்பனை செய்து... ரெடியாக இருக்கும் இந்த இடங்கள்.

இவ்விடங்களுக்கு போய் வர என இன்று என பிரத்யேகமாக வாகனங்கள் தயாராகும். வருடம் பூரா மீன் பிடித்த படகுகள் எல்லாம் இன்று மீன் பிடி, வேலை நிறுத்தி பயணிகள் வாகனம் ஆகும். ஸ்பெஷல் பஸ்கள் என உபரி பேருந்துகள் - பேருந்து நிலையத்தை நிறைக்கும். என்ன ஒரு விசேஷம், ஸ்பெஷல் சர்வீஸ் என்பதால் சேருமிடத்தை கையால் எழுதி, கோணல் மாணலாய் சில சமயம் தப்பும் தவறுமாய் பெயர்ப் பலகை இருக்கும். என்றாலும் நம் முகத்தில் மகிழ்ச்சி வந்து சிரிக்க தூண்டும் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்த்தான் மகிழ்வின் ஸ்டாம்ப் எனவும் கொள்ளலாம்.

பயணிகள் அனைவரும், கை நிறைய பொதிகளுடன் குடும்பத்துடன் குஷாலாய் கிளம்பி விடுவார்கள். உட்கார விரிப்புக்கள், உணவு, கொறிக்க ஸ்னாக்ஸ் மற்றும் விளையாட இண்டோர் கேம்ஸ் – தாயக் கட்டைகள், பாம்பு கட்டம், செஸ் முதலியன.


சோத்து பொதியில் முதலாக, முந்தைய நாள் வெண் பொங்கல் இன்று புதியது போல சூடு பண்ணி பாத்திரத்தில் இடம் பிடிக்கும். புலால் உண்ணும் கூட்டத்தின் சாப்பாட்டு பொதியில், வருத்த கறி சிவந்த மேனியில் எண்ணை குளித்து மூக்கை துளைக்கும். அது என்னவோ தெரியவில்லை, நம்ம வீட்ட விட அடுத்த வீட்டு கறிக் குழம்புக்கு மணம் ஜாஸ்தி.

குடும்பத்தினருக்கிடையில் எப்போதும் சண்டை உண்டு - யார் சோத்து மூட்டை தூக்க என்று. பொதியிடும்போதே அக்கரையாய் நாம் ஒரு ஆலோசனை சொல்வோம். தூக்கி வீச ஏதுவாய் இலைகளிலும், காகிதத்திலும் பொதி தயார் செய்ய சொன்னாலும், அம்மா ஏனோ… எப்போதும் பாத்திரத்திலே அடைத்திடுவார், அவருக்கு அது ஈசியாய் இருப்பதால். நமக்குத்தான் ஆத்திரமாய் வார்த்தை வரும். தூக்கிச் செல்வது ஒரு சுமை என்றால், எச்சில் பாத்திரத்தை மறுபடியும் அல்லவா தூக்கி சுமக்க வேண்டியிருக்கும்…. காலிப் பாத்திரமே ஆனாலும் கூட…


நல்லதாய் இடம் பிடிக்க எப்போதும் ஆசை உண்டு, அதற்கென, ஒவ்வொரு முறையும் சீக்கிரமாய் கிளம்ப வேண்டும்..... சூரிய உதயத்துக்கு பக்கமாக என திட்டம் ஜகஜோதியாய் இருந்தாலும், ஏனோ தெரியவில்லை, எப்போதும் தாமதமே ஆகும். என்றாலும் பரவாயில்லை. போகின்ற வழி எல்லாம் சந்தோசமாய் தெரியும் மனிதர்கள் நம் உற்சாகம் கூட்டுவர்.

சிலர் நம்மை திகைக்க வைப்பர். நாம் செல்லலாம் என தீர்மானித்த இலக்கு அடுத்தவர் ஆலோசனையில் கேள்வியாய் நிற்கும். முயல் தீவில குடிக்கத் தண்ணியே இல்லீங்களே…. கட்டபொம்மன் கோட்டையில நல்ல தண்ணி, இதமா நிறைய மரம். அதுதாங்க பெட்டர். என கேட்டவுடன்… ஐய்யய்யா… தப்பா யோசிச்சுட்டமோ…. என தயங்கி நிற்கும்.

பேருந்து நிலையத்தில் மீண்டும் நமக்கு தயக்கம், மறுபடியும் சோதனை. நாம் செல்ல வேண்டிய இலக்கில் பேருந்து குறைவாய் இருக்கும் அல்லது மிகுந்த கூட்டத்தோடு இருக்கும். அது ஏங்க இப்படி இருக்குது என இன்று வரை விடை இல்லை. நம்ம போறதுக்கு எதிர் திசையில போக நிறைய பஸ்சு…. அது மட்டுமா… உக்கார்றதுக்கு இடம் வேற.

எப்படியோ ஒரு முடிவெடுக்காமல் நாம் நின்று கொண்டிருக்கும் போதே தொலைவில் நம் கண்ணில் தெரியும் நமக்கான பேருந்து. உடனே பரபரப்பு உடம்பில் தொற்றும். கீழ் வைத்திருந்த பொதிகளை பத்திரப்படுத்தி விட்டு, உட்கார இடம் தேடி, உதிரம் உச்சத்தில் ஓடும். ஓடி, சாடி, தேடி இடம் கிடைத்து பெருமூச்சு வரும் போது , மனம் உலகையே வென்றதாய் இருக்கும்.

இடம் கிடைக்காது நிற்கின்ற சக பிரயாணிகளை பாவமாய் பார்க்க தோன்றும். என்றாலும் சில சமயம் சிக்கல் வரும். அங்கு நிற்பவர், தெரிந்தவராய் இருந்து, நிற்கும் தகுதியை கடந்து இருந்தால் என்ன செய்வது. பள்ளியின் வாத்தியாராய் இருக்கலாம், உறவில் மூத்தவராய் இருக்கலாம், உடலில் முதிர்ந்தோ அல்லது குழந்தையை தூக்கி கொண்டோ நிற்கலாம். அப்படி என்றால் நம் சீட் பறி போகும்.

சன்னலோர இருக்கையும் கிடைத்து, அமர்ந்திருந்தால் ஓடாத பஸ்சில் - தூசியான காலடியில், உணவை வைக்க மனம் இல்லாது மடியிலே வைக்க நேரிடும் கொடுமை சில சமயம் உண்டு. என்ன செய்வது சில சமயம்… அவை சுடும் வாய்ப்பு உண்டு. அது நம்மிடம் வந்த உணவுப் பொதியை பொறுத்தது. பேருந்து கிளம்பாமல் காத்திருத்தல் மிகக் கொடுமை, என்றாலும் அந்த பேருந்தின் வயிறு பிளந்து காக்கி சட்டை ஓட்டுனராய் அமர சந்தோசமாய் ஒரு பெருமூச்சு வரும். உடம்பெல்லாம் விரைப்பாகும். வண்டி நகர துவங்க, அடித்து வீசும் முரட்டு காற்று வியர்த்த தேகத்தில் இன்பமாய் படரும்.


இன்று கூட்டம் அதிகமானதால், பயணசீட்டு வழங்க வேண்டி ஊர் எல்லையில் பஸ் நிற்கும்போது சுத்த காற்று உத்வேகம் தரும். இனிமையாக இருக்கும். என்றாலும் கூட்டத்தோடு மல்லுக் கட்டி, டிக்கெட் டிக்கெட்டு என கத்தி தொண்டை கட்டிய கண்டெக்டர்…. பாவம்!!! என தோன்றும். அதோடு கூட, விடுமுறை நாளிலும் வேலை செய்யும் ஓட்டுனர் நடத்துனர் அவர் தம் குடும்பம் என இறக்கம் லேசாய் எட்டி பார்க்கும். நம் நிலமைக்கு ஆண்டவனை நோக்கி... நெஞ்சார நன்றி சொல்லும்.

இலக்கை அடைந்ததும் நல்ல இடம் தேடி கண்கள் அலையும். தேர்வு செய்த இடத்தில் அரை மனதாய் போர்வை விரிக்க படும். இன்னும் நல்ல இடம் இருந்திருக்கலாம், இருந்தாலும் பரவாயில்லை என்பதாகவே என்றும் விரிக்கப்படும். நாம் வீசி விரிக்க, துவைக்கும் கடினம் தோன்ற அக்கரையாய் அம்மா மட்டும் பார்ப்பார். பார்த்து விரியேண்டா என சில சமயம் சொல்வார். அந்த ‘பார்த்து….’ எனபதின் அழுத்தம் இன்றுதானே புரிகிறது. விரித்து வைத்த போர்வையிலே, மர நிழலிலே நம் இருப்பு நிச்சயம ஆகும். வேறு ஆட்களுக்கில்லை, இனி இது நம் இடம், நாம் எழுந்து செல்லும் வரை. சக மனிதர் சுற்றி இருப்பார் என்றாலும் நாம் விரித்த போர்வையே நம் எல்லையாகி விடும்.

மொத்த குடும்பமும் நெருங்கி அமர்ந்து, அனுசரணையாக இணைத்திடும் அந்த நேரம் இனிமையானது. அத்தனை மனங்களும் இன்பமாய் இணையும் குடும்ப அன்பிலே. நேற்று போட்ட சண்டை கூட இன்று மறந்திடும். இது நம் குடும்பம் என்று பெருமையாய் உணரும் தருணம்.

உணவுக்கு ஆசைப் பட்டு நாய்கள் கூட நம்மை சுற்றி குழைந்து வால் ஆட்டிக் கொண்டும் நிற்கும் வாய்ப்பு உண்டு. அது நம் உணவின் மணத்தை பொறுத்தே என்பது மறுக்க முடியாத உண்மை சோத்து பொட்டலம் பிரிக்கலாமா என்று பெரிசுகள் சொல்லும், உடனடியாய் மறுத்து இளம் சோட்டு உறுப்பினர் எல்லாம் ஒரு நடை செல்ல ஆசை படுவார் ..

புதிய சூழ்நிலையில் சாப்பாட்டின் சுவை கூடும். அரக்க பரக்க சாப்பிட்ட மற்றைய தினத்தின் முறை மறந்து ஆர அமர உண்பது ஒரு புதிய அனுபவம். பறந்து வரும் தூசிகூட எளிதாக மறந்து போகும், சிரமம் இல்லாமல் அவை நம் உணவோடும் கலக்கும்.

நண்பர்கள் சிலர் ஒரே உடையில், சீருடையாய் கூட்டமாய் திறிந்திடுவார், தனி மனித அடையாளமோ அங்கிகாரமோ வேண்டாத / விரும்பாத சில காளைகள். குழுமத்தில் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட மனது உடையவர் எடுக்கும் முடிவு அது. சுற்றுலாவே வந்தாலும் கடமையாய் காதில் ஈயர்போன் மாட்டி இசை கேட்கும் சிலர்…. என்றாலும் ஒரு கேள்வி உண்டு. அங்கு பாட்டு கேட்பது உண்மையிலேயே தங்களுக்காகவா அல்லது பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவா…

நெருங்கிய நண்பராக இருக்கலாம், வகுப்பறையில் அடுத்த இருக்கையிலும் இருக்கலாம், என்றாலும் அவனது குடும்பத்தை அறிய மாட்டோம் . ஆனாலும் இன்று அந்த அறிமுகம் கிடைக்கும். உறவு பலப்படலாம். இனிமேல் ராஜா வீட்டுக்கு போயி, புஸ்தகம் வாங்கிட்டு வர்றேம்மா எனும் போது நம் குடும்பத்திற்கும் விளக்கம் கிடைக்கும்.

இளம் வயதினருக்கு சில நேரம் லாட்டரி அடிக்கலாம். ஆம்… சிலருக்கு காதல் பூக்கும், பூத்த காதல் சிலருக்கு மலரும், சந்தோஷமான மனதில் நல்லதே நடக்கும் அல்லவா. கனவில் உள்ள தேவதையை சிலர் இங்கு தான்… இன்று தான்…. காணுவர், நாளையில் இருந்து அவன் நாற்பது நாட்களுக்கு காதல் கவிதையாக எழுதி திளைப்பான்.

காதல் சிலரை பதம் பார்ப்பதும் உண்டு, வெகு காலமாய் முயன்று வரும் தன் காதல் சிலருக்கு தோற்கும். தன் நாயகியை வேறு ஒருவரோடு காண்பார், நாளை முதல் தாடி வளர்ப்பார். அவரும் கவியாவார்.

சூரியன் மேற்கில் சாய மெதுவாய் கிளம்பி வீடு வந்து சேருவோம், அடுத்த முறை பயணம் எங்கே என்று அன்றே தீர்மானிப்போம், ஆனாலும் எப்படியும் நம் திட்டம் மாறும் என தெரியாமலேயே.
நாளை அலுவல் நோக்கி கொஞ்சம் அசதியுடன் காத்திருப்போம், அடுத்த முறை ஆயதங்கள் மறுபடி இனிமை சேர்க்கும். வாழ்வு ஒரு சுழற்ச்சி….