பக்கங்கள்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி....

‘கோணக்கால்’ - பகுதி 2

காந்தி மெல்ல நடந்து வந்து, சாப்ளின் அருகில் இருந்த தரையில் அமர்ந்து கொண்டார்.

சாப்ளின் தலை நிமிர்ந்து, காந்தியை பார்த்தார். அவரது தோற்றம் பற்றியும் கொள்கை பற்றியும் நிறைய கேட்டிருந்ததால் அதிர்ச்சி இல்லை. ஒற்றை, துணியில் அதுவும் வெள்ளை துணியில் தன்னை போர்த்திய மனிதன் இயல்பாய், தரையில் அமர்ந்து இருக்கும் தன்மை அவருக்கு புதுசு. இதுவரை பழகாதது.
என்றாலும் காந்தியின் அந்த பார்வையும், மனதை ஊடுருவும் கண்களும், உள்ளுக்குள் யோசிக்கும் ஆழமும் சாப்ளினை அசைத்தது. 

சாப்ளின் தொடங்கினார், என்னை தேடி கண்டு கொள்வதில் கடினம் இருந்ததோ…..

மெல்லிய குரலில் காந்தியும்… ஆம்…. இல்லை….. என பதிலுரைத்து விட்டு கைகள் மடக்கி வாயை பொத்தி கொண்டார். உங்கள் திரைப்படங்கள் பார்த்ததில்லை, புகைப்படம் பார்த்தேன், மூக்குக்கு கீழே, மண்டிய குட்டி மீசையும், யூ வடிவ தொப்பியும்… பின்னர் கோணக்காலும்…. ஆனால் நிஜத்தில் ….

நான் ஒரு மனிதன்…. சட்டென சொன்னார் சாப்ளின். நிஜத்தில் நான் ஒரு சராசரியானவன், சாமான்யன், நிலையிலும், நினைப்பிலும் ஏன்….. உயரத்திலும். பாருங்களேன்… என்னை மிலிட்டரியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.  பட்டாளத்தில் சேர நான் தயாரானாலும் என் உடல் என்னை டிஸ்குவாலிபை செய்து விடுகிறது. என் உயரம் 5 அடி 5 அங்குலமே… இந்த நாட்டை பொறுத்த மட்டில் நான் குள்ளமானவன். சராசரி என் நாட்டு பிரஜைகளின் கணக்கில் நான் பலவீனன்…… இது எப்படி இருக்கிறது… என்றாலும் நிஜத்தில்… வாழ்வில் போர் புரிந்து கொண்டுதான் இருக்கிறேன்….. துப்பாக்கி இல்லாமல்…

சற்று இடைவெளி விட்டு… உங்களைப்போல…..

மௌனம் சிறிது நேரம் அங்கு நிலைத்தது. நீங்களோ, லெனினோ போரட்டம் செய்ய வேண்டும் என் துடிப்பதில்லை. மாறாக  நீங்கள் சார்ந்த சமூகமும், சூழ்நிலையும் போராட்டம் செய்ய தூண்டுகிறது… என்னைப் போல…..

வெந்ததை திங்கலாம், விதி வந்தால் சாகலாம் என வெட்டி கதை பேசும் சாமான்ய வாழ்க்கை நமக்கு விதிக்கப்படவில்லை…

சரி, என்ன போராட்டம், எதற்காக போராடுகிறீர்கள்… காந்தி அறிந்து கொள்ளும் ஆவல் குரலில் குழைந்து இருக்க கேட்டார்.

வேதனைகளும் வலியும் நிறைந்த இந்த உலகை நான் வெல்லுவேன்…. என் துன்பத்துக்கப்பால், நான் ஆசைப்படுகிற….. சிரிப்பையும் கும்மாளத்தையும் என் பார்வையாளருக்கு பரிசளிப்பேன்… அந்த முயற்ச்சியிலேயே… என்னை இனம் கொள்வேன்.. இதுவே என் இலக்கு….

காந்தி திகைத்தார், இவ்வளவு எளிமையாய் தெளிவாய் வாழும் சாப்ளினின் வாழ்வு அவருக்கு ஆச்சரியம் தந்தது…. மிக நேர்த்தியாய் பேசுகிறீர்கள்….

அப்படியா…. மிக்க நன்றி. நான் அதிகம் பேசுவதில்லை… பேச்சை குறை, செயலை பெருக்கு என்பதை ஆதரிக்கிறேன்…. ஏன் என் படங்களை பாருங்களேன்… என் படங்கள் உணர்வுகளை பேசும்… வசனம் பேசாது. என்னை என் திரைப்படங்கள் அடையாளம் காட்டும், ஏனெனில் என் படத்துக்கான எண்ணமும் வடிவமும் என்னால் உருவாக்கப்படுவதே.

ஆம். ஆச்சரியம்… இன்றைய திரை உலகம் ஒரு குழுவாய் இயங்கும் போது, நீங்கள் மட்டும் எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்கிறீர்களாமே…. அதனாலேயே நிறைய நேரமும் பண விரயமும் செய்வதாய் சொல்கிறார்கள்…. திரை ஆக்கம், இயக்கம், நடிப்பு என்பது மட்டுமல்லாமல்….. உங்கள் ஆடை வடிவமைத்தது நீங்களாமே… உங்களுக்கென ஒரு அடையாளம் தர, கால் விரிந்த பேண்டும், இறுகிய சட்டையும், தொப்பியும் பின் ஒரு கைத்தடியும்.

ஆம், உணர்வுகள் வெளிப்பட ஒரு உடல், உடல் மொழி வேண்டும், அந்த உடல் உணர்வுகளை உந்திச் செல்லும் உக்திக்கென நானே வடிவமைத்து கொண்ட வடிவம் இது ….

ஆம்… சார்லி… ஒத்துக் கொள்கிறேன்… கைத்தடி நல்ல ஒரு துணை. இப்போது எனக்கு அவசியமில்லை, எனக்கு வயதாகும் போது உபயோகிப்பேன்….. சிரித்தபடி சொன்ன காந்தி முகத்தில் சிரிப்பு கரைய… மேலும் சொன்னார்….  அதை நானும் என் அடையாளமாக கொள்கிறேன்…

ஹா….ஹா….. அப்படியென்றால் ஏழ்மையும் …கைத்தடியும் நம்மை இணைக்கும் சங்கிலிகளா..

இருவரும் சிரிப்பில் கரைந்தனர்.  உங்களையும், என்னையும் இணைக்க முடியுமா என்ன… நீங்கள் வேறு.. நான் வேறு.. நம் திசைகள் வேறு… பயணம் வேறு… சாப்ளின் சொல்ல இடைமறித்து காந்தி சொன்னார்….

எனக்கு அங்கனம் தோன்றவில்லை… என் ஆன்மீக சிந்தை உங்களையும் என்னையும் வெகு அருகில் காண்கிறது… மேலும் காந்தி தொடர்ந்தார், நீங்களும் எங்கள் நாட்டில் தயாராகும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். சாப்ளின் சற்று பின்னோக்கி நகர்ந்து, எங்கே இருக்கிறது உங்கள் உடை….. உடையே இல்லையே…. பாதி உடல் தெரிகிறதே…

இப்போது இன்னும் பலமாக சிரித்தார்… பின் சிரிப்பு அடங்கி… நீங்கள் அணியாத ஆடை எதை சொல்கிறது. எளிமையையா அல்லது இயந்திர எதிர்ப்பையா… சரியாக சொல்லுங்கள்… இயந்திரத்துக்கு நீங்கள் எதிரியா.

காந்தி இந்த கேள்வியில் கொஞ்சம் யோசித்தார். நிதானமாய் சொல்ல துவங்கினார்,… இல்லை, நிச்சயமாய் இல்லை…. ஆனால் இயற்கையை காதலிக்கிறேன். நூல் நூற்பதும், பருத்தி உடைகளும் இயற்கையானவை. பாலியஸ்டர் இழைகள் இந்த சூழலை பாழாக்கும். இன்னும் போக, பிரிட்டிஷ் அரசு என்ன செய்கிறது, பளபளப்பான உருவாக்கத்தால் பாசாங்கு காட்டி, ஒரு நாட்டை அடிமை படுத்த அல்லவா முயல்கிறது., அதை எதிர்க்கிறேன்… அரசியல் காரணத்துக்காகவும் பின்னர் இயற்கைக்கு எதிரானதாலும்….

சாப்ளின் அமைதியானார். காந்தி தொடர்ந்தார்…. நீங்கள் யார், சினிமா கதா நாயகனா, இல்லை போர் வீரரா---- சாப்ளின் கையை தூக்கி தலையை வகிடில் தடவியபடி சொன்னார், உலகப் போர் என்னை சிதைத்து விட்டது. முதல் உலகப் போரின் தாக்கம் என்னை இரண்டாம் உலகப் போருக்கு ஒப்புதல் தரவில்லை.. போராட்டங்களும், போர்களும் ஒரு தீர்வு என என்னால் கொள்ள முடியவில்லை. .
இந்திய நாட்டு சூழலே…. போராட்டத்திற்குள் உங்களை தள்ளி விட்டது, இல்லையென்றால் 

உங்களின் பாரிஸ்டர் படிப்பும், கூரிய அறிவும், வாதத் திறமையும் உங்களை இன்னொரு ஊருக்கு கூட்டிச் சேர்த்து இருக்குமல்லவா.  நீங்கள் மட்டும் இல்லை, லெனின் பற்றியும் நான் இவ்விதமே கருதுகிறேன். உங்களை இப்படி ஒரு நிலைக்கு கொணர்ந்தது சூழலே…
குடும்பச் சூழலும் வயிற்றுப் பசிக்காக பொழைப்பு தேடவும் எனக்கும் ஒரு இக்கட்டு வந்ததல்லவா. அது போல…

காந்தி கேட்டார், வாழ்வு ஏன் நமக்கென ஒரு வகிடு எடுக்கிறது. ஒரு பரிபூரண சமுதாயம் உருவாகிட வழி உண்டா….  சாப்ளின்…!!!! அப்படி யென்றால் வாழ்வின் கொடுமை எது. எதை எதிர்த்து நாம் போரிட வேண்டும்.

சாப்ளின் அமைதியானார்…

இருக்கலாம்… புன் முறுவல் முகத்தை அலங்கரிக்க தொடர்ந்தார்… ஒருவேளை நாம் இறைவனோ… அதனால் தான் உலகின் இன்னொரு வடிவம் உருவாக்க முயலுகிறோமோ…

காந்தி அமைதியானார்…. சாப்ளின் அந்த மௌனத்தை கலைத்து… நாம் போராடும் எதிரி, நாமே… ஏற்ற தாழ்வு இல்லாத சமதர்ம சமூகம் அமைக்க எது தடையாய் இருக்கிறதோ அதை…
அது மதமா…. பொருளாதாரமா….. அல்லது பூகோளமா… எல்லைக் கோடா… எதுவாயினும்… அதை உடைக்க வேண்டும். பசி இங்கு இல்லாத நிலை வேண்டும்.

காந்தி, அமைதியாய் இருந்த போது சாப்ளின் தொடர்ந்தார்…. சரி, நம் போராட்டம் என்னவாகும். சமமான சமுதாயம், ஏற்ற தாழ்வுகள் இல்லாத நிலை உருவாகுமா.

காந்தி இன்னும் அமைதியாகவே இருந்தார்… அவரது பார்வை சுழன்று சன்னலுக்கும் அதற்கப்பாலும் சென்றது… சன்னலுக்கு அப்பாலே…. மித மிஞ்சிய போதையில் ஒருவன் தரையில் விழுந்தான். தரையில் விழுந்தவனை பார்த்து, இன்னொருவன் சிரித்தான். ஒரு குழவாய் சில பேர் கூடி நின்று விழுந்தவனை பார்த்து சிரித்தார்கள்.

காந்தி, திரும்பி சாப்ளினை பார்த்தார்…

சிரிப்பு ஒரு வரப்பிரசாதம். சிரிக்க வைப்பது கடினம் என்றாலும் அது ஒரு கலை. சிரிப்பில் இறைவன் இருப்பதாய் எனக்கு படுகிறது என்றார்..

சாப்ளின், காந்தியின் பதிலில் இருந்த உணர்வை புரிந்தார்… பிரியும் கட்டம் வந்தது என உணர்ந்தார். தன் கையை நீட்டி…. சிரித்து… என் படங்களை பாருங்கள் என்றார்.

காந்தி விழித்து, சாப்ளினை பார்த்து விட்டு, வெளியிலும் பார்த்து விட்டு….ம்… என்ற போது, மூரியல் உள் நுழைந்தார். காந்தி அவசரமாய் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பினார்.

அவர்கள் சம்பாஷணைகள், கேள்விகள் விடை காணப்படவில்லை… முடிவுகள் எடுக்கப்படாமல், சில செயல்களின் ஒப்புதல் பெறாமல் சிந்தனை அனாதையானது…. காந்தி தன் தாய் நாட்டு சுதந்திரம் வாங்கி, அரசியல் புள்ளிகள் வரைந்த கோலத்தின், வடிவம் வரும் போது இறந்து போனார்…. கனவுகள்… சமதர்ம சமுதாயம் எனும் திட்டங்கள்… முற்றுப் பெறாமலேயே நின்றது…

 முற்றும்…




நண்பருக்கு நன்றி.

நண்பர் … செல்வா அவர்கள் ‘காந்தியும் சாப்ளினும் ஒரு முறை சந்தித்து கொண்டார்கள்… தெரியுமா’ என கேட்டார்… தெரியாது என்ற என் பதிலுரையை தொடர்ந்து, ‘இந்த நிகழ்வு வரலாற்றில் நடந்திருந்தாலும், அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதற்க்கான குறிப்பு எங்குமே இல்லை. உங்கள் கற்பனை கொண்டு யோசியுங்களேன்… ‘ என சொன்னார்.

நண்பர் சொல்மிக்க மந்திரமில்லை என சொன்னதை செய்து விட்டேன்… இந்த தகவலை பகிர்ந்து, என்னை எழுத தூண்டிய நண்பருக்கு மிக்க நன்றி…. தேங்க்ஸ் செல்வா…. 

கோணக்கால்…(சிறுகதை) பகுதி 1

(உண்மை தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனை சிறுகதை)

காந்தி தன் கையில் இருந்த டெலிகிராமை பார்த்து கொண்டிருந்தார்.  இன்னொரு கையில் சார்லி சாப்ளினின் புகைப்படம்… குனிந்த படி கொஞ்சம் குழப்பமான ஆனால்…. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சுற்றியிருந்தவர்கள் அமைதியுடன் அவர் பதிலுக்கு காத்திருக்க, தன் தலையை உயர்த்தி தெளிவான குரலில் சொன்னார்…  ‘தேவையில்லை. அவரில் பார்க்க என்ன இருக்கிறது. அவசியமில்லை’, அவரை பார்க்க நான் விரும்பவில்லை, அவர் ஒரு கூத்தாடிதானே’

மூரியல் லெஸ்டர் அப்போது தான் உள்ளே வந்தார். காந்தி சொன்னதை இவரும் கேட்டார்… ஆழமான ஒரு பார்வையோடு .. பாபு, என்ன இது… இவரை பார்க்க சம்மதம் இல்லை என யாராவது சொல்வார்களா.. திரையரங்கத்துக்கு சென்று அவரை பார்க்க வரிசை கட்டி நிற்கும் போது… ஒரு முறை பார்க்க மாட்டேனா என உலகே ஏங்கும் போது…. நீங்கள் இப்படி சொல்லலாமா…. இன்றைய தேதியில் இந்த உலகத்தின் ஹீரோ இவர்தான்.

அப்படியா…. என குழந்தையின் லாவகத்தில் சொன்னார் காந்தி. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு இன்னும் ஆழமாய் கேட்டார், அதில் இருந்த அழகு மூரியலை கவர்ந்தது.

பின்னே, சந்தேகமே இல்லாமல்… அவரை திரையில் பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை. எத்தனை கவலைகளை கொண்டு உள்ளே சென்றாலும் நம்மை சிரிக்க வைத்து சிலிர்க்க வைத்திடுவார்.

அப்படியா மெத்த மகிழ்ச்சி…. ஆனால், என் கவலைகளை போக்கி கொள்ள, நான் திரையரங்கத்தை 
நாடுவதில்லை. திரையில் தெரியும் மாயப் பிம்பங்களை உண்மை என நம்பும் எளிய மனது எனக்கு இல்லை. ஜோடிக்கப்பட்ட புனை ஆளுமையை உண்மை என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை, அதனால் தான் இவரை ஒரு முறை கூட பார்த்ததில்லை.

மூரியல்.. காந்தியின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்தார். சரி, என்ன சொன்னால் ஏற்றுக் கொள்வார் என அவசரமாய் யோசித்து, அடக்கமான குரலில் தொடர்ந்தார். இருக்கட்டும் பாபு, உங்கள் கருத்து புரிகிறது, ஆனால் ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி, வட்ட மேசை மா நாட்டுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெஸ்ட் எண்ட் ஹோட்டலுக்கு செல்லாமல் நீங்கள் ஏன் இந்த கிங்க்ஸி ஹாலை தேர்ந்தெடுத்தீர்கள்.

ம்…. காந்திக்கு புரிந்தது. எளிய கேள்விதான், என்றாலும் அது இட்டுச் செல்லும் பாதையும் இலக்கும் புரிந்தது. மூரியல் தன்னை வாதிட்டு வெல்ல கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது புரிந்ததும். தன் பொக்கை வாய் காட்டி …. பதில் சொல்லும் முன் ஆழமாய் பார்த்து விட்டு தொடர்ந்தார். தாங்கள் என்ன நினைத்து இங்கு வந்து தங்க முடிவு செய்தீர்களோ, எப்படி வெஸ்ட் எண்ட் வேண்டாம் கிங்க்ஸியே போதும் என நினைத்தீர்களோ அதே காரணத்துக்காகத்தான்.

ம்… அப்படியானால் உங்களைப் போல் என்னைப்போல் சாப்ளினும் ஒரு ஏழைகளின் பங்காளன். தேடிச் சென்று ஏழைகளிடமே தன் சுயம் தேடுகிறார். எளிமை விரும்பி, பகட்டுக்களும் பளபளப்புக்களையும் விட்டு விலகி செல்ல விருப்பம் உள்ளவர். அவர் ஒரு நடமாடும் சோகக் கழஞ்சியம் எனவும் சொல்லலாம். உலகத்தின் அத்தனை சாத்தான்களாலும் சபிக்கப்பட்டு, தோல்வியின் கனம் புரிந்தவர், ஏழையின் பசி புரிந்தவர் அதனால்தான் அவரால் அடுத்தவரை சிரிக்க வைக்க வேண்டியதன் அவசியமும் சூட்சமமும் புரிகிறது.

திரைத்துறை சார்ந்தவரானாலும் அவர் மேன்மையானவர். பளபளப்பும் படாபடமும் விரும்பாதவர். இந்த சந்திப்பு எங்கே நிகழ்கிறது என பாருங்கள். நம் நண்பர் டாக்டர் கட்டியால் வீட்டில் சந்திக்கிறோம். டாக்டர் கட்டியால் யார், ஒரு சமூக புரட்சியாளர் அல்லவா, கம்யூனிசத்தின் ரியல் தத்துவம் அவரிடம் அல்லவா இருக்கிறது. ஒரு சமூதாயத்தையே, குடும்பமாக மாற்ற முடியுமா, அதன் அங்கத்தினர் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியுமா…. பொது உணவிடம், உறங்குமிடம், இருப்பிடம் கழிப்பிடம் எல்லாம் செய்ய முடியுமா என எண்ணும் பரந்த நோக்குடைய அவரது வீட்டில்.

மேலும்…. கூத்தாடி தானே…. திரைத்துறை தானே, கோமாளிதானே என சொல்லி அவரை தீண்டத்தகாதவராக நாம் சொல்வது முறையா… பொருளாதாரத்திலோ… அல்லது செய்யும் தொழிலிலோ ஏற்ற தாழ்வு இல்லை என சொல்லி விட்டு, கோமாளிதானே என சொல்வது எந்த வகையில் சேர்த்தி….

காந்தி, தலை உயர்த்தி மூரியலின் கண்களை ஊடுருவி பார்த்தார். அதில் ஆழ்ந்த அர்த்தம் தெரிந்தது. அந்த சம்பாஷணையின் ஆழம் புரிந்தது,. காந்தி சிரிக்க,, அங்கே மனித நேயம் மிளிர்ந்தது.

22 செப்டம்பர் 1931

குளிர் இன்னும் பனியாகவில்லை… லண்டனின் தெருக்கள் அழகு கூட்டி, அந்த காலை வேளைக்கு இனிமை சேர்த்திருந்தது. மெல்லிய குலுக்கலுடன் அந்த சொகுசு கார் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. காந்தி தன் மேல் போர்த்தியிருந்த துண்டை இறுக்கமாய் மூடிக் கொண்டார். மெல்லிய குலுக்கலுடன் வாகனம் நின்ற இடம் மனிதர்களின் தலைகள் நிறைந்து இருந்தது. அது மூரியலின் வீடு.

அங்கங்கே, குழு குழுவாய் மக்கள் தரையில் சாய்ந்திருந்தனர். மது அப்படி அவர்களை சாய்த்திருந்தது, அவர்கள் உடுத்திய உடையில், ஏழ்மையும் குளிருக்கு பக்குவமான கம்பளியும் இருந்தது. சவரம் செய்யாத அவர்கள் முகங்களில், மொழி கொச்சையாகவும் பச்சையாகவும் இருந்தது. காந்தி அருகிலிருந்தவரை கேட்டார்…. இவர்கள் யார்…
மூரியலின் விருந்தினர்கள்.

ஓ… இவர்களை கொண்டுதான் சமதர்ம சமுதாயம் படைக்க முயல்கிறாரா… கேட்டவர் தலை குனிந்தார். காந்தி தொடர்ந்தார். சொல்லக் கூடாதா…. குடியின் தீமை பற்றி…. அருகிலிருந்த இன்னொருவர் சொன்னார், எவ்வளவோ சொல்லியாயிற்று… இங்கு தாங்க முடியாத குளிர், மேலும் மூரியலின் அமைப்பால், எல்லாம் பொது… அதனால் செலவுகள் குறைவு. அதனாலேயே தேவைகளும் குறைவாயிற்று. சம்பாதிக்கும் தேவையும் குறைந்து போனதால், செய்ய பெரிசாய் வேலை இல்லாததால் சோம்பி இப்படி ஆகிவிட்டார்கள்.

அந்த பதில் காந்தியை யோசிக்க வைத்தது. உழைக்க வேண்டாம் என சொன்னால், தேவைகளை இலவசமாக வாரி வழங்கினால்…. சமூகம் எங்கு சென்று விடும் எனும் நிதர்சனம் அவருக்கு சுட்டது… எண்ணங்களுடேனேயே… அவர் நடந்து மூரியலின் வீட்டினுள் பிரவேசித்தார்.
மூரியல் வீட்டினுள் சார்ளி சாப்ளினை தேடி காந்தியின் கண்கள் அலைந்தன. சரோஜினி நாயுடு தான் முதலில் காந்தியின் கண்ணில் தென்பட்டார். வணக்கம் தெரிவித்து விட்டு மேலும் பார்த்த போது, நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு கணவானை கண்டார். இவர்கள் காட்டிய சார்லி சாப்ளினின் அந்த புகைப்படத்துக்கும் நேரில் இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே.
புகைப்படத்தில் கோமாளி, இப்போதோ கணவான் அல்லது ஜெண்டில் மேன்…

இந்த எண்ணங்களுடனேயே, காந்தி மெல்ல நடந்து வந்து, சாப்ளின் அருகில் இருந்த தரையில் அமர்ந்து கொண்டார்.

                                                       அடுத்த பகுதியில் நிறைவு பெறும் .....