பக்கங்கள்

வொய் திஸ் கொலைவெறி….

ஒரு அலுவலக நாளின் தினக் கூத்து முடிந்து, வீடு நோக்கி கார் ஓட ஆரம்பித்தது. இயற்கை காற்று நல்லது என ஃப்ரெஷ்னசுக்காக சன்னல் திறந்தேன், காற்று அடம் பிடித்து சன்னல் வழியாக உள் நுழைந்தது… அடித்து பிடித்து காற்று வந்ததால், வேகமும் கொஞ்சம் இரைச்சலும் ஜாஸ்தியாக இருந்தது.

அன்று அது எனக்கு அசௌகரியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசை… ஒவ்வொரு நினைப்பு, இன்று என்னவோ காதும் மனசும் கொஞ்சம் அமைதி தேடியது. சரி என பொத்தானை நிமிண்டி, சன்னலை மூடி விட்டு, குளிர்விப்பான் (ஏசியை) ஓட விட்டேன்…. 

அதுவரை ஆன் செய்திருந்தாலும்… சத்தம் குறைவாக இருந்த எப்.எம். மூடிய காருக்குள் தன் பிரசன்னம் காட்டி, ஒலியை பரவ விட்டது.

தனுஷ், ஒரு ரெண்டு மூணு பாட்டில் (தத்துவம் உண்டாக்குபவனை -சாராயத்தை) கவுத்திவிட்டு, லவ் பெயிலியர் மூடில், தனக்குள்ளே புலம்பி புலம்பி பாட ஆரம்பித்தார்.

வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி டி….

பாடல் கேட்ட உடனேயே, விருவிருவென காட்சிகள் விரிகிறது. இந்த பாட்டுக்கு முந்தின சீன் என்னது. இதுக்கு முந்தினதுக்கு முந்தின சீன்ல…. ஒரு பொண்ணு இவன தொங்க விட்டுட்டு போயிருச்சு, இதுக்கும் முந்தின சீன்ல இவன் சுருதி ஏத்திட்டான், கடகடவென கப்பு கப்புன்னு செப்பியது இந்த பாடலின் வலிமை. கப்பை கப்புன்னு கைல பிடிச்சு, பீலீங்கை உணர்ந்தது தான் இந்த பாட்டின் முதல் வெற்றி. அந்த தள்ளாட்டமும், வாத்திய ஒலியும், சோகமும் விரக்தியும் ஒரேயடியாய் இணைந்து ஒலிக்கிறது.

இந்த தமிழ்..!!!???? திரைப்பட பாடல் ‘கொலைவெறி’ யா இருக்குது. வெளியான கொஞ்ச நாள்ல கோடி சனம் வலையில கேட்டுட்டு ரசிக்கிறாங்க. யூ டுயூப்பு கூட அவார்டு கொடுக்குறாங்க…  தேசிய முண்ணனி செய்தி சேனல்ல கூட இத ஒரு செய்தியா சொல்றாங்க.. ஜப்பான்ல ஒரு குரூப்பு, ஐரோப்பா ஒரு அலம்பு என சலம்பு சலம்புகிறார்கள். சல்மான் ரூஷ்டி, அமிதாப்பு, புது அப்பா அபிஷேக்கு எல்லாம் சிலாகிக்குறாங்க… ஜாவத் அக்தார் நா காமராசன், அப்துல் ரகுமான் எல்லாம் கோபப்படுறார், இங்கனக்குள்ளே கூட ‘சே இதென்ன’ கூத்து என ஒரு கும்பல். ஆக கூடி, குறுகிய காலத்தில் கும்மியடிச்சு குலவைய கூட்டின ஸ்கூப் ஸாங் இது….

வாழ்த்துக்கள்… இப்படி ஒரு வெகு ஜன ரசனையை உண்டாக்கின பாடலுக்கு சொந்தக்காரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த பாடல் ரசிகர்கள் கோடி சனம் ஸ்டடிஸ்டிக்ஸ்ல ஆந்திரா, கர் நாடகம், அதுக்கு பின்னால தான் தமிழ் நாடு… அதே மாதிரி, நகரங்களின் வரிசையில் கூட, சென்னை பின்னால தான் இருக்குது…. அப்ப இந்த பாடல் ரசிச்சவுங்க யாருன்னு ஆராய்ஞ்சா அல்லது பீராய்ஞ்சா தலையெல்லாம் கிருகுருன்னு வருது…..

சரி, அப்படி என்னதான் இருக்குது இந்த பாட்டிலன்னு கேக்க இணைத்த போது, (இப்படித்தான் எல்லோரும் கேட்டிருப்பாங்களோ) பாடல்ல, ஒரு சுண்டி இழுக்கக் கூடிய ஒரு கொக்கி இருக்குது…. அது Poetical என சொல்ல முடியாவிட்டாலும் Phonetical…. அந்த கொலை வெறி…. கொலைவெறி….  எனும் வார்த்தை பதம் தான் மேஜிக். இந்த வார்த்தை ஒலிக்கும் போது உண்டாகும் ஓசை சுவாரசியமானது.

தில்லிக்கு முதல் முறையாய் போயிருந்த போது, சாலையில் ஒரு ஜரூரான வியாபாரம் பார்த்தேன். மக்கள் எல்லாம் விரும்பி வாங்கி கொண்டிருந்தனர். ‘குலகுறி…குலகுறி…’ என கூவிக் கூவி விற்றவர் தோளில் தாம்பாளம் வைத்து கொண்டு என்ன விற்கிறார் என ஆவல் உந்தியது. அருகில் பார்த்த போது, தேங்காய் சில் அல்லது பத்தை…. துண்டுகளாக்கிய தேங்காய்க்கா இந்த கிராக்கி… அட நம்மூர்ல ரோட்டுல கிடக்குற, சிதறு காய்க்கா இவ்வளவு மவுசு என தோன்றியது.

அன்றைக்கு.. குலகுறி… என அந்த ரோட்டில் கேட்ட போதே இந்த குலகுறி எனும் வார்த்தை மனதை கவர்ந்தது. அத்தனை ரோட்டு ஓசை சந்தடியிலும் காதுக்கு இனித்தது.

ஒரு பாடல் பிரபலமாக எத்தனையோ சங்கதிகள் உண்டு. இசை, ஓசை, ஒலி, உருவகம், உணர்வு என எத்தனை எத்தனையோ எலிமெண்டுகள்.

எது எப்படியோ, மொழிகளை கடந்து இந்த பாடல் பிரபலமாகி இருக்கிறது. தமிழ் தெரிந்த நல்லோர் தாண்டி, ஹார்ட்டு, மூனு, வொயிட்டு என ஆங்கில பதங்கள் புண்ணியத்தில் எல்லா மொழி மக்களையும் அடைந்திருக்கிறது. காசு எல்லாம் வேண்டாம், சொம்மாவே கேளுங்க என சந்தைப்படுத்திய வைரல் மார்க்கெட்டிங் பாதையில்…. போதையில் மொதந்து, தள்ளாடி தடுமாறி, ஏக்கத்துடன் பாடும் போது ஒரு கிக் நமக்கே வருகிறது. காதலும் போதையும் எப்பவும் விக்க கூடிய சரக்கு என்பது நிருபணமாகிறது.

என்றாலும், இந்த அங்கிகாரமும் பிரபலமும் பெற்ற பாட்டில்(Bottle) பாட்டில் மரியாதை இல்லையே, கலாச்சாரம் இல்லியே, ஆக்கபூர்வம் இல்லியே எனும் போது லேசாய் வலிக்கிறது…

திருவளர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ, பண்பாடும் குலமகளோ… 

என காதலியை அழைக்கும் போது காதலின் மீதும், காதலியின் மீதும், காதலன் மீதும் மரியாதை வருகிறது. உறவில் மரியாதை தானே நம்பிக்கை வளர்க்கும் முதல் படி.

யே.. வாடி …வாடி என் கியூட் பொண்டாட்டி 

என கூப்பிடும்போது அன்போடு, அன்னியோன்யத்தோடு சேர்ந்து கொஞ்சம் வக்கிரம் வந்து விடுகிறது. எல்லா வெரைட்டியும் இருக்கணும்ங்க என சொன்னாலும், அல்லது சிலது சைவம் சிலது அசைவம் என பகுத்தாலும், எப்பவும் இல்லாம எப்பவாவது இப்படி இருக்கணும்ங்க எனும் வாதம் சொத்தையானது. மரியாதை எனும் பரிமாணம் தொக்கித்தானே நிற்கிறது.

வாடி வாடி என அழைக்கும் புருஷனை பொண்டாட்டி என்ன செய்வாள், பழகும் தமிழே, பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா….. என்றா அழைக்க முடியும்…. அவளும் அவன் லெவலுக்கு இறங்கி வந்து வாடா…வாடா…. வந்து கடிச்சுட்டு போடா ……. எனத்தானே சொல்ல முடியும்…. இது எங்கே கொண்டு செல்கிறது. ஒரு சமூகம் தரம் தாழ்ந்து தரை வரை சென்று…. டகர டகர…. என ஓசை எழுப்பும் தரைடிக்கெட் தகர டப்பா போலத்தான் இருக்கிறது.

விற்கிறது என்பதற்க்காக இதை செய்யலாமா, இந்த பாடலின் வெற்றி நமக்கு தரப் போவது என்ன. நாங்க இத விட பீல் பண்ற பாட்டு எழுதுறோம் என ஒரு குரூப்பு கோடம்பாக்கத்துல கிளம்புமோ என நினைக்கும் போதே…. பீதியாய் இருக்கிறது…..

உய்ய என் உள்ளத்துள் , ஓங்காரமாய் ----(ஓம்காரமாய்) உள்ள மெய்யே… (உடலே / உண்மையே)

என ஒலிக்கும் ஒலியில் ஆழம் உண்டு பயன் உண்டு, சமூகமாற்றமுண்டு, அந்த ஒலியில், அதிர்வில் ஆன்மீகமுண்டு. 


பண்டைய திரைப்பாடல்கள் சில பாடங்கள் போலல்லவா நமக்கு உதவியது….

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
ஒன்றும் தெளியாமல் போனாலே வேதாந்தம்

என நச்சுன்னு இரண்டே வரியில் பாடம் நடத்திய பாட்டு எப்படி இருக்குது. தமிழின் பயன்பாடு அன்னிய ஆக்கிரமிப்பால் கொஞ்சம் மூச்சு முட்டி முழிக்கத்தான் செய்கிறது.

மலர் மிசை ஏகினான், மானடி சேர்ந்தார் 
நிலமிசை நீடு வாழ்வார்

என சுத்த தமிழில் இன்று சொன்னால், இன்றைய தலைமுறை அன்னிய மொழி போல் பார்க்கும் அவலம் அல்லவா நிகழ்ந்து விடும்….. நம் தாய் மொழியே பயன்பாட்டில் பாடாய் பட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் மொழி வளர்ப்பதும் அவசியமே. கலைத்துறை அதை தன் கடமையாய் கொள்ளுதல் நலம். 



வெற்றி பெறாலும் கூட இந்த மாதிரி கொலைவெறி வார்த்தைகளினால் பாதிப்பே மிஞ்சும். இந்த நவ நாகரீக நச்சுக்கள்…. கழிசடைகள் எல்லாம் இக்கால இலக்கியம் ஆகி விடுமோ என எண்ணும் போது பதறுகிறது…. அதிலும் கூட,

தமிழ் இனம் எத்தனை தொன்புடையது. தமிழ் மொழி உலகிற்கு அல்லது ஏன் இந்தியாவுக்கே கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது… ஆனால் இன்று…????? இந்த சில்லறை சில்வண்டுகள் நம் அடையாளம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

பெண்ணை போற்றுவோம், காதலை மதிப்போம், இன்னும் பொறுப்பாவோம்,

உன்னை வேண்டாம் என ஒரு பெண் சொன்னாள் என்றால், என்ன அர்த்தம். 



ஆணுக்குத்தான் இந்த தொல்லை…. ஒரு பெண்ணை பார்ப்பதும் உடன் காதல் வயப்படுவதும், பார்த்ததும் பரவச நிலை அடைவதும், பொருந்தாத உறவை போற்றி பொங்குதலும். பின்னர், இயலாமை இமயமாகி என்ன செய்வது என அறியாமல் திகைப்பதும்….. பாட்டில் கவுத்திவிட்டு அவளை குறை சொல்வதும்….

பெண், இங்கனம் மனம் கவர்ந்தவன் கிடைக்காத தருணத்தில் என்ன செய்வாள். ஆண்டாளாகும் ஆகிருதி இங்கே சராசரியாய் இல்லை…



உன்னை வேண்டாம் என ஒரு பெண் சொன்னாள் என்றால், என்ன அர்த்தம். நம்மை உதறி விட்டால் என்ன அர்த்தம். உன்னுள் குறை என்று அர்த்தம். அந்த பெண்ணினுள்.. கொலைவெறி என நாம் ஏன் உணரவேண்டும், நம்முள் உள்ள குறையை அவள் குறை என சொல்லுவது பொறுப்பில்லாத தனம் அல்லவா.

தன்னிகரில்லா தலைவர்களை நம் காவியங்களில் கொள்வோம். மரியாதையை நம் ஆயுதமாக்குவோம்…. இன்னும் பொறுப்பாய் நம் பிரதி நிதிகள் கலைத்து’றையில் செயலாற்ற மன்றாடுவோம்….

புதினமும் புதிருமே…. இந்த பூவுலகம்….

கல்லில் செதுக்கிய சிலையை விட………..

டேங்கர் லாரி, பாம் எனும் நீண்ட சத்தத்துடன் இடது பக்கமாய் கடந்து சென்றது. நவீன் அந்த திடிர் முந்துதலில் லேசாக திணறினான். என்ன அவசரம்… அதுவும் இல்லாமல் ஓவர் டேக் செய்யும் போது ஏன் இப்படி பப்பரப்பேன்னு ஹார்ன் அடித்து செல்ல வேண்டும். அமைதியாய் செல்ல முடியாதா….

ம்… என்ன செய்து கொண்டிருந்தோம்… எதையோ வாசித்து கொண்டிருந்தோம்…. ஆங்… ஆட்டோவின் முதுகில் ஏதோ எழுதியிருந்தது, 

அதை வாசித்து கொண்டிருந்தோம்…. அது சரி, அம்மாவிடம் சொன்னால் அடிப்பாள், ரோட்டுல பைக் ஓட்டும் போது, கவனம் எங்கேயும் போகக் கூடாது, பார்த்து ஓட்டணும் என்பாள். ம்… அவளுக்கு என்ன தெரியும். கவனம் சிதைப்பதுதானே இங்கே சக பயணிகள் வேலை. என்னவோ எதுவோ…. ம்…. சே, ஒரு விசயத்தை கோர்வையா சிந்திக்க முடியுதா….. சரி ஏதோ வாசித்து கொண்டிருந்தேனே…. அது என்ன..


பார்வையால் அந்த ஆட்டோவை துளாவி, மீண்டும் பிடித்து... படித்தபோது

கல்லில் செதுக்கிய சிலையை விட
கருவில் சுமந்த தாயை வணங்கு….

களுக்கென உணர்வு ஒரு பந்தாய் சுருண்டு, அழுகையும் இளகிய மனமுமாய் உணர்வு வெளிப்பட்டது. உடல் தளர்ந்து, கண்கள் நீரை சுரக்க தயாரானது. மீண்டும், அம்மாவை மனம் நினைத்தது. ம்… அம்மாவை நினைத்தாலே சுகம்.

அம்மா நம் உயிரினத்தில் அனேகமாய் எல்லாருக்கும் பிடிக்கிறது. தாய் என்பது பாதுகாப்பு, நிம்மதி, அன்பு, அரவணைப்பு….. இன்னும் மேலாய்… 

என்னை உண்டாக்கியவள் எனும் உபரித்தகவல் உயிரை உரசுகிறது. என்னையே படைத்தவள், என்னை அழிக்க மாட்டாள், என்னை விரும்புவாள் அன்பு செய்வாள் என்னும் நம்பிக்கை....., பின்னர், படைக்கும் வல்லமை உடையவளானதால், என் இயலாமையை விரட்டுவாளோ... எனக்கும் உதவுவாளோ…. எனும் நப்பாசை.

அம்மா… அல்லது தாய் என சொல்லும் அந்த கணமே புனிதமாகவும், அமைதியாகவும் அன்பாகவும் தோன்றும் விந்தை இன்னும் வியப்பாகவே இருக்கிறது… 


உடலின் அரசன் இந்த உருண்டை மண்டை மாதிரி, நம் உணர்வுகளின் அரசன் இந்த தாய்ப்பாசம் எனவும் தோன்றுகிறது.

அது சரி, அங்கே என்ன வாசித்தோம்… கல்லில் செய்த சிலையை விட…….
ஓஹோ…. எழுதியவன் என்ன சொல்கிறான். ஹாங்…. தெய்வம் பற்றி சொல்கிறோனோ… தெய்வத்தை வணங்காதே என சொல்லுகிறான். அது சரி பகுத்தறிவு பேசுகிறான்….

அது ஏன், அம்மாவையும் தெய்வத்தையும் இங்கு பேசுகிறான். அம்மாவை வணங்கு என அதை மட்டும் சொல்லலாம், அது  நேர்த்தியானது, வழக்காடல்களுக்கு அப்பாற்ப்பட்டது…. ம்… சாமியை கும்பிடாதே… அம்மாவை மட்டும் கும்பிடு என்றால்….

அது வாதம் தானே... வீண் வம்புதானே…. எப்படி எப்படி… தாய்குலங்களோடு கூட்டணி, தெய்வத்துக்கு டாட்டாவா….

இது ஒரு சேட்டை., அம்மாவை தாய்ப்பாசத்தை வைத்துக் கொண்டு, தன் கருத்தை திணிக்கும் தில்லாலங்கடி.

சரி, அம்மாவை வணங்கு என அறிவுரை சொன்னவன், வணங்குதலுக்கு வரவேற்ப்பு கொடுக்கிறான். கும்பிடு என குரல் கொடுக்கிறான். வணங்கு ஆனால் அம்மாவை மட்டும் என்கிறான், தெய்வத்தை அல்ல என்கிறான். 


உருவாக்கியவரை வணங்கு என ஒற்றை வரியில் சொல்லிவிட்டால் பொல்லாப்பில்லை.... உருவாக்கியவருக்கு ஒரு கோவில் கட்டி கும்பிடு என்பதிலும் தவறில்லை.


அவரவருக்கு ஒரு தாய், அத்தனை தாய்க்கும் ஒவ்வொரு கோவில் கட்டமுடியாதே… ம்… வேண்டாம் கோவில் கட்டாதே… கட்டாமல் மனசுக்குள் வணங்கு என்கிறானோ, இருக்கலாம்.

வணங்குவதில் தவறில்லை எனும் போது அது தாய் என்றால் என்ன, தெய்வம் என்றால் என்ன. அதுவும் போக, ஒருவரை அல்லது ஒன்றை மட்டும் வணங்கத்தான் வேண்டும் என என்ன சட்டம். தன்னை, மண்ணை, விண்ணை, அன்னையை, ஏன் அனைவரையுமே வணங்கலாமே….

வணங்குதலும் ஓகே, அம்மாவும் ஓகே என்றால், அப்புறம் ஏன் ஒன்றை வணங்கவேண்டும், அல்லது சாமி என்பதை மட்டும் வணங்காதே எனும் வியாக்கியானம்.

கல்லில் ஒரு உருவம் செதுக்கியதற்கு காரணம்....  மழை வெயிலுக்கு தப்பும் என நினைத்து தானே…  கல்லை வணங்குததால் தாழ்ச்சி என ஏன் கலர் கொடுக்க வேண்டும்... கல்லில் செய்ததால் அதன் குணத்தை மட்டும் எடுத்து கொண்டு, கல் மண் என ஏளனம் பேசுகிறீர்கள். அதில் நுண்ணரசியல் நுரையிரல் தெரிகிறதே...

வழிபாடே தவறு என்றால் அது ஒரு தர்க்கம். அறிவில் துளாவி, ஆழத்துக்கு செல்லும் ரீதியான வாதம்.

சரி, தாயை ஏன் வணங்க வேண்டும். மரியாதை நிமித்தம் மட்டுமா, 

வணங்கினால் மட்டும் போதுமா. ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் போகாத கடன் அல்லவா அது. எதைக் கொடுத்து அதை சரி செய்ய முடியும். 


தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் எல்லாம் சொல்லாது, தாயை போய் கும்பிடு கல்லை கும்பிடாதே என ஒரே ஒரு கண்டிஷன் போட்டால் அது எப்படி சரி….

ஆட்டோ கவிஞரிடம் ஆர்குயூமெண்ட் வலுத்தது.... அவருடன் மனசால் பேசிய டயலாக்கு, பதில் வாங்காமல் ஒருதலை ராகமாக இருந்தது. பதில் வாங்காமல், முடிவு எடுக்க முடியாமல் நிற்கும் போது, இன்னொரு கேள்வி உதித்தது… இப்படி தத்துவங்களை ஆட்டோவில் எழுதுவது சரியா….

சரிதான்….. தப்புதான்……

கவனம் சிதைத்தது தப்பு…. கப்புன்னு…  இவ்வளவு தூரம் இதை பற்றி யோசிக்க வைத்ததே…. அது அந்த வாசகத்தின் வெற்றி. 


எந்த ஒரு கருத்தும் எல்லோரிடமும் எஸ்....!!! என ஏற்றுக் கொள்ளும் அந்தஸ்தை பெற்றதில்லை… பெறப் போவதுமில்லை... அத்தகைய அருகதை கருத்துக்களுக்கு இல்லை. மறுத்து சொல்லும் மரபு நமக்கும் நம் மனசுக்கும் உண்டு.

எனவே, இரு நிலை இயல்பையும், இருப்பையும் இனியாவது புரிந்து கொள்வோம். 


கேள்விகள் தொடரட்டும், பதில் தேடும் பயணம் சிறக்கட்டும். 


இங்கே எதிலும் எதுவும் நின்று விடுவதில்லை. 


நிற்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் புதினமும் புதிருமே…. இந்த பூவுலகம்….

கடிதம் எழுதி காக்காவுக்கு கொடுப்பேன் – (சிறுகதை)

லோகு, கடிதத்தை எழுதி முடித்து…. கையெழுத்திட்டான். அப்பாடா என இருந்தது. இரண்டு மூன்று நாட்களாய் அழுந்தியிருந்த மனச்சுமையை, மனதின் பாரத்தை… எழுதி முடித்ததும் ஒரு தளர்ச்சி. மனம் இலகுவாய் இருந்தது.

கடிதத்தை மடித்த போது, விலாசம் எழுதும் இடம் வெறுமையாய் இருந்தது. அதில் என்ன எழுதலாம், எதுவேணா எழுதலாம்… எது எழுதுனாலும் எல்லாரும் சிரிப்பாங்க…. என நினைத்த போது சிரிப்பு வந்தது. எழுதினால்… அவன் நினைத்ததை எழுதினால்….. தபால் நிலையத்தில் படித்தால் என்ன நினைப்பார்கள் என எண்ணிய போது அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வாய் விட்டு சிரித்தான்.

புருசன் சிரிப்பு சத்தம் கேட்டு கமலி, எட்டிப் பார்த்தாள். ‘என்னதுங்க… லெட்டரா’ கடிதத்தை பார்த்து விட்டு ‘யாருக்கு….’ என தொடர்ந்தாள்.

‘சீனு சாருக்கு…. எப்படி அனுப்புறது. என்னன்னு அட்ரஸ் எழுதுறது என யோசிச்சேன், அதான் சிரிச்சேன்’ என சொல்லிக் கொண்டே டவலை எடுத்து தோளில் விசிறி போட்டு விட்டு, ஆனந்தமாய் பாத்ரூமின் உள் நுழைந்தான். வாய் முழுக்க பாட்டு அடைத்து கொண்டிருக்க, குதூகலத்தில் உடல் பறக்க நேர்த்தியாய் உள்ளே நுழைந்தான். போகும் முன் மனைவியை கிட்ட நெருங்கி கண்ணடித்து விட்டு உள்ளே சென்றான்.

கமலியின் முகம் வெளிறியது. கண்கள் விரிந்தன, வாய் சற்றே பிளந்து ‘ஆண்டவா’ என்றது. கை அனிச்சையாய் நகர்ந்து தாலிச்சரடை வருடி, கண்கள் அருகே கொண்டு சென்றது. அவன் தலை மறைந்ததும், மெல்ல அந்த கடிதத்தை பிரித்தாள்… வாசிக்க துவங்கினாள்.

டியர் சீனு சார்,

நேத்திக்கு ஆபிஸ்ல பெரிய சண்டை, நான் ஏதோ சொல்ல, அவங்க ஏதோ நினைச்சுக்கிட்ட்டாங்க. அதில் என் தப்பு ஒண்ணும் இல்லை,

ஏன் சார் இப்படி. ஒரு வார்த்தைக்கு இவங்களா ஒரு அர்த்தம் பிடிச்சிட்டா நாம என்ன பண்ண முடியும். அதே டென்ஷன்ல வீட்டுக்கு வந்தா கமலி, காப்பி பொடி காலின்னு சொல்லிட்டு டீ போட்டு தர்றா…

சொல்லுங்க சார், சரியா இது…. காப்பி குடிச்சே கல்லா காலியான குரூப்பு நம்மது…. வெத்து டீயில நம்ம தாகம் அடங்குமா. சரிதான் போ, நீயும் உன் டீயும்ன்னு…. கொடி மரத்து கோக்கோ கோலாவே பெட்டருன்னு அங்க போனேன்..

பாருங்க சார், நாயர் பொண்ணுக்கு உடம்பு சரியில்லியாம், கடைய சீக்கிரம் மூடிட்டு, அவன் போயிட்டான். வெறுமே நடந்து போயிட்டு காபியும் கிடைக்காம வயிறும் மனசும் காஞ்சு போச்சு… அப்பத்தான் தோணுச்சு, போன முறை காபி குடிக்க நீங்க காசு கொடுத்தீங்க, இந்த தடவ நான் கொடுத்துருக்கணும், ஏடிஎம்ல காசு எடுக்க மறந்துட்டேன், சட்… வாட் ஏ மிஸ்….. ஹூம்… நீங்க தான் கொடுத்தீங்க… கணக்குல பார்த்தா ரெண்டு தடவ நான் இன்னும் ரீப்பே பண்ணனும்….. (கடிதம் தொடர்ந்தது)

**********

லோகு அன்று அவசரம் அவசரமாக ஆபிஸ் கிளம்பினான். அவசரமாக… இதென்ன புதுசா, எப்பவும் போலத்தான… ஆனால் வீட்டின் வாசலில் மாமி பார்த்தான். பார்த்ததும் முகம் மலர்ந்தான். வாவரசி, மஞ்சள் தேய்த்து எதிரில் வருவது நல்ல சகுனமாச்சே… எதிர் வீட்டில் மாமி குளித்து முடிந்து மஞ்சள் தேய்த்து நின்றது நிறைவாய் இருந்தது.

கமலிகிட்ட சொல்லலாமா, சொன்னா கேட்பாளா, ம்….. டர்மெரிக் கிரிம்தான் தேய்க்கிறேனே அப்புறம் எதுக்கு மஞ்சள் என்பாள். இந்த மஞ்சள் தேய்த்த முகம் லோகுவின் அம்மாவை நினைவுபடுத்தியது. அம்மா இப்படித்தான். சீவக்காய் தேய்த்து, குளித்து, அள்ளி முடிந்த கூந்தலில் ஒரு இணுக்கு பூவும் சூடியிருப்பாள். சாமிக்கு நிறைய பூ வைக்கலேண்ணா ஆணியில நிக்காதே… அதுக்காக நிறைய கண்ணி விட்டு பூ வைக்கணும், அதுவும் போக, வீட்டுல நிறைய சாமி படம்… எது என்னவானாலும், அது ஒரு தனி ஸ்டைல். அழகும் மரியாதையும் அன்பும் அப்பி கொண்டு வரும்.

மாமி குட்மார்னிங் என்றான். மாமி சிரிப்புடன் ஆமோதித்து விட்டு பதில் வணக்கம் சொன்னாள்….  ‘என்ன மாமி கழுத்து பிடிச்சுருக்கா’ அத்தனை அவசரத்திலும் இப்படி கமெண்ட் அடிக்க இவனுக்கு முடிகிறது என வாசல் ஓரத்தில் கமலி புலம்பினாள்… மனசுக்குள்ளே…!!! ‘இல்லியேடா’ அப்படி ஒண்ணும் பிடிக்கலியேடா, காலையில உப்புமா சட்டியில பிடிச்சுருச்சு….’ சிரித்தபடி பதிலுரைத்தாள் 

மாமி….
‘மாமி, மாமா கூப்பிடுறாரு பாருங்க…. ‘ என்றதும் முதுகையும் கழுத்தையும் ஒரு சேர வைத்து கொண்டு, அப்படியே திரும்பினாள் மாமி. ‘பார்த்தீங்களா, மாட்டிக்கிட்டீங்களா…. கழுத்து பிடிச்சுருக்கு…. கழுத்த மட்டும் திருப்ப உங்களால முடியல’ , தான் மாட்டிக் கொண்டதை, மாமி உணர்ந்து, லேசான வெட்கத்தில் சிரித்தாள்.

சிரிப்பில் திண்ணையில் உட்கார்ந்திருந்த மாமாவும் கலந்து கொண்டார். ‘மாமா, இப்ப… இவ்வளவு வயசுல உங்கள பார்க்கும் போது கூட மாமி சிரிப்பில பாரதி தாசன் புத்தகம் இருக்குது. மாமி ஞே!  என விழித்தாள். மாமா புரிந்ததனால் சிரித்து கொண்டே…. அழகின் சிரிப்பு…. அதான் புஸ்தகத்து பேரு என்றார்.

மாமா, வர்றீங்களா, முக்கு கடைக்கு, லோகு அழைத்தான். இல்லடா சாயந்திரமா பார்ப்போம். ப்ரதர் இன் லா வர்றேன்னார், பஞ்சாயத்து ஆபிஸ் வரைக்கும் போகணும்…

*******

கமலி, கண்ணீரை துடைத்தாள், கடிதத்தின் தாள் திருப்பி, மேலும் வாசிக்க துவங்கினாள்..
போன தலைமுறை நடைமுறை சரியில்ல என சொன்னீங்களே… அது தப்பா சரியா என இன்னும் எனக்குள் தீர்மானம் ஆகவில்லை. இருந்தாலும் இந்த போஸ்ட் மார்டனிசம் என்பதே ஒரு சப்பைக்கட்டு… எல்லாம் தெரிந்ததாய் தன்னையும் பிறத்தியானையும் ஏமாற்றும் சோம்பேறித்தனம்.

சரி இத்தனை சொல்கிறீர்களே… போன எலெக்‌ஷன்ல ஜெயிச்ச, நம்ம எம் எல் ஏ இப்ப எங்க இருக்கிறாரு… திகார் ஜெயில்ல… ஏன்யா உன்ன நம்பி, நீ சொன்னேன்னு கேட்டுத்தானே நாங்க ஓட்டு போட்டோம், என்ன ஆச்சு எங்க ஊரு ரோடுன்னு கேக்கணும்… அவர்கிட்டதான கேக்கணும்…  ஏன் மாமா திகார் ஜெயில் உள்ள நம்மள விடுவாங்களா…. இந்த கேள்வி கேக்குறதுக்கு…

அப்புறம் ரெண்டு நாள் ஆபிஸ் டூர், மழை தண்ணின்னு ஒரு நாள் தள்ளிப் போச்சு… வந்து கேட்டா, எனக்கு நம்பவே முடியல….. ரோட்டுல, எங்க வாசலுக்கு பக்கத்துல ஒரு பட்டு வேட்டி, ம்… இருக்கும் ஒரு சாண் ஜரிகையோட…. கீழே கிடந்துச்சு…. சேறும் சகதியுமா இருந்துச்சு… கமலி அதை காட்டி, இதுதான் கடைசியா போர்த்தியிருந்துச்சுங்கிறா… இதென்ன மாமா…. உலகம் பாஸ்ட்ன்னு தெரியும்… இவ்வளவு பாஸ்ட்டா….

சிம்பிளா சொல்றேனே…. இந்த லோகுவுக்கு ஒரு ஆபிஸ், ஒரு குடும்பம், ஒரு முக்கு கடை டீ கடை மாதிரி, நீங்களும் ரொம்ப அவசியம்… இதுல ஏதாவது ஒரு குறைவு வந்துச்சுன்னா வண்டி ஓடுறது ரொம்ப கஷ்டம். சரி, விடுங்க பழகிக்கிறேன், என்ன செய்யுறது.. எப்ப சுகர் வந்துச்சோ, அப்ப சக்கரை போடாதேன்னு சொன்னாங்க… சரின்னு முதல் ரெண்டு மூணு நாள் திகைப்பா இருந்துச்சு, அப்புறம் பழகிருச்சு…. அதே மாதிரிதான்…

அப்புறம் இன்னிக்கு காலைல பாக்குறேன், அந்த ஜரிகை வேஷ்டி பக்கமா குனிஞ்சு உங்க பிரதர் இன் லா ஒரு ப்ளாஸ்டிக் பைல போட்டுக்கிட்டு இருந்தாரு… என்ன சார்னேன்… ‘இல்ல விசேஷத்துக்கு உடுத்தினத புதைச்சிடணும்ங்கிறார்’
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சார்.

அன்புடன் லோகு

***

காலிங் பெல் அடிக்க கமலி அவசரம் அவசரமாய் கடிதத்தை அங்கேயே வைத்து விட்டு சென்றாள். லோகுவுக்குத்தான் ஏதோ ஒரு பாங்கின் கிரெடிட் கார்டு ஸ்டேட்டுமெண்ட்….. எதிர் வீட்டை பார்த்த போது, மாமி நின்றிருந்தாள், மஞ்சள் குங்குமம் பூ என எதுவும் இல்லாமல்…. அவள் அணியாத அவை மூன்றும் அங்கிருந்த மாமாவின் படத்தில் மாட்டப்பட்டிருந்தது….

 
முற்றும்….