பக்கங்கள்

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்...

எண்ணை குடித்த வடை, என்பது நாம் பழக்கப்படுத்திக் கொண்ட ஒரு உணவு. ஆயில் ஜாஸ்தியா போச்சுன்னா, ஒரு நியூஸ் பேப்பர எடுத்து பொத்தி, ஒத்தி, சுத்தி போட்டுட்டு வடைய சாப்பிட்டுறலாம். எண்ணையே இல்லாத வடை என்பதை நாம் யோசிப்பதே இல்லை. அதே போல் ஒரு தமிழக கட்சியின் அரசியல் வாதி சொன்னாராம். தேன் பானையில கை விடுறோம், கையில ஓட்டின தேனை துடைச்சு போடணுமா, சரி வேண்டாம்ன்னு சாப்பிடுறோம் என்றாராம்.. லஞ்சத்த பத்தி லஜ்ஜையே இல்லாம சொன்ன பொறுப்பற்ற ஒரு ஸ்டேட்மெண்ட்.

தமிழக தேர்தல் களம் அனல் பறக்கும் இந்த சூழ் நிலையில் பரபரப்பாக பேசப்படுவது இந்த கையூட்டு தான். ஒரு குடும்பமே குத்தகைக்கு எடுத்து ஆட்டைய போட்ட கதை தெரியுமா என தெருவுக்கு தெரு முழங்கப்படுகிறது மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது நமக்கும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. என்றாலும் செய்வதறியாது நிற்கிறோம். சரி இவர் ஊழல் என அகற்றி விட்டு என்ன செய்யலாம். எதிரணிக்கு செல்ல முடியுமா. அங்கே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊழலற்ற ராஜ ராஜ்யம் நடக்கும் என எதிர்பார்க்க முடியுமா. சந்தேகம் தான்.
சில இடர்களை களைய முடியாத போது, அதை பழக்கப்படுத்தி கொள்வதும், அதிலே நகைச்சுவை தேடுவதும் நம் இயல்பாகி விட்டது. புலம்புவதிலேயே நம் புகலிடம் என புரிந்து கொண்டது நம் துரதிருஷ்டம்.

என்றாலும் சிங்கமென எழுந்து நின்று, 71 வயதில் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் தொடங்கிய அந்த மகானை நினைக்கும் போது, உணர்ச்சி பொங்குகிறது. ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து வறுமைக்கு உறவாகி, ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்து, காந்தி, வினோபாவே, விவேகானந்தரின் கொள்கைகளுக்கு நெருக்கமாகி தன்னை பண்படுத்தியவர் அன்னா ஹஸ்ரே. உடன் பிறந்தவர்கள் இருந்தாலும், திடமாய் உறவுகளை உதறிவிட்டு சார்புகள் வேண்டாம், எனக்கு குடியிருக்க வீடு வேண்டாம் என தன் தேவைகளை சுருக்கி கொண்டு, எல்லைகளை விரிவு படுத்திய மாவீரன்.
எனக்கு மரணம் குறித்த பயம் இல்லை, என்னை சார்ந்த குடும்பம் இல்லை, சத்தியம் என் பக்கத்தில் நிற்கும் என நிமிர்ந்து நிற்கும் இந்த மாமனிதனுக்கு நாம் சொல்ல வேண்டும். பிரதமரோ முதல்வரோ எவரும் எனக்கு பொருட்டில்லை என மரியாதையுடன் அதே நேரத்தில் மறுமொழி கேட்கும் பண்பாகட்டும், அவர் பரிமளிக்கிறார்.

குடும்பம் இல்லை, நான் தனி என அவர் முழங்குகிறார். ஆனால் நாங்கள் இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் அங்கத்தினர். இந்த பாரத தாயின் பிள்ளைகள். கிரிக்கெட் போட்டியில் ஒரு தேச சிந்தனையில் ஒன்றிணைந்தோமே. உற்சாகப் படுத்தினோமே, அதே குடும்ப உணர்வில் இன்று நாம் இணைய வேண்டிய அவசியம் உள்ளது.

எங்களுக்காக குரல் கொடுக்கிறாயே தலைவா, என் தந்தையே, என் அன்பிற்குறிய அண்ணனே . உன் உண்ணா விரதம் வெற்றி பெறட்டும். உணவு இல்லாமல் ஒரு வேளை உடல் துவளலாம், உள்ளம் துவளாது. என்னை நினைந்து கொள், உனக்காக நான் இருக்கிறேன் என நாம் சொல்ல வேண்டும்.

நாடும் ஊடகமும் இன்று இணைந்து நிற்கும் தீரத்தில் திடத்தில் நல்ல முடிவு எட்டும் எனும் நம்பிக்கை பிறக்கிறது.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை கண்ணீர் விட்டு காப்போம்

என நாமும் முழங்குவோம். ஜெய் ஹிந்த்…

ஒரு கோப்பையிலே நம் குடியிருப்பு....!!!

ஒட்டு மொத்த தேசமுமே, பேட், பால் எடுத்துட்டு அதிரடியா நுழைஞ்சு, கிரிக்கெட் விளையாடி, 2011 உலக கோப்பைய செயிச்சுருச்சு. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு ஆர்வலர், திரை உலகத்தினர், பொது மக்கள் என எல்லோருமே…. அத்தனை இந்தியருமே… மொகாலியிலும், மும்பையிலும் டேரா போட்டு, டிவி/ ரேடியோ முன்னால பட்டரைய போட்டு, உற்சாகப்படுத்தி வெற்றி பெற்றனர்.


இந்த ரெண்டு நாட்களுமே நாட்டுல எந்த வேலையுமே பெரிசா நடக்கல. ஆபிஸுக்கு மட்டம் போட்டுட்டு, ஸ்கூலுக்கு ஸ்கூட்டடிச்சுட்டு, அரசியல்வாதி கூட ஆபிசுக்கு லீவு விட்டுட்டு ஒரு 9-10 மணி நேரம் இந்த விளையாட்டுக்கு வீரராயிட்டாங்க… ஒரு தேசமே… ஒரே உணர்வோட ஒன்றிணைந்து உணர்ச்சிகரமா நின்னது…. நினைக்கும் போது பெருமையா இருக்குது.


நாட்டையும் நாட்டு மக்களையும் ஒண்ணா சேர்த்த கிரிக்கெட்டுக்கு ஒரு சலாம்.


ஒவ்வொரு படியா கவனமா ஏறி, வெற்றியின் இலக்கை எட்டியது மிக நல்ல சாதனை. நம் நாட்டு விளையாட்டு அணியின் எல்லோருக்கும் ஒரு சபாஷ்.


தோசை சுட்டவன்… சாப்பிட்டதா சரித்திரம் இல்ல!!!. மேட்ச் நடத்துனவன் நாட்டுக்கு கப்பு கிடைச்சதில்லைன்னு ஒரு குருட்டு நம்பிக்கை ஸ்டாட்டிஸ்டிக்ஸாம்… அடப் போங்கடான்னு நம்ம செல்லக் குட்டிகள் பெற்ற வெற்றி பட்டைய கிளப்பிறுச்சு. இந்த வெற்றி, மூட நம்பிக்கைய மூடி விட்டு, சுடர் விட்டு ஒளிர்ந்த பகுத்தறிவின் பிரகாசம்.


வெற்றிக்கு முக்கிய காரணம் இத்தனை கோடி மக்களின் எண்ணமும் பிரார்த்தனையும் தான் என்றால் மிகையில்லை. எல்லைக் கோட்டுக்கு வெளியில் நின்று கொண்டு பிரார்த்தனை செய்த அந்த வயசு முதிர்ந்த பெண்ணையும், பந்து எல்லைக் கோட்டை கடந்ததும் உட்கார முடியாமல் எழுந்து கூக்குரலிட்ட சிறு குழந்தையையும்… கண்ணில் நீர் பனிக்கத்தான் நாம் பார்த்தோம்.


இது எப்படிங்க என கேட்க, கேப்டன் தோனி இதற்கு குழுவே முக்கிய காரணம் என்றார். உண்மைதான், ஒத்துக் கொள்வோம்…. என்றாலும் மலை அசைந்தாலும் கலங்காத மன உறுதியுடன் நின்ற தலைவனின் தோரணை… சூப்பர். தோனி, தோணி மாதிரி நின்னு செயிச்சாரு. இவர நினைக்கும் போது ஒரு பாட்டு மனசுல ஒடுது.


ஆளானாலும் ஆளு, இவரு அழுத்தமான ஆளு,


மிச்ச விவரம் வேணும்ன்னா …


மச்சான் தோனிய கேளு…. கேளு,,,


சேவாக்கும், சச்சினும் அவுட்டானதும், துருப்பு சீட்டான யுவராஜாவ இருக்க சொல்லிட்டு, நான் வர்றேண்டா என களம் இறங்கிய முடிவாகட்டும். எடுத்த முடிவில் அசையாது இருந்து, 91 ரன்களை குருவி சேர்த்த மாதிரி சேர்த்த பாங்காகட்டும்… தோனி… நீ நிச்சயமா ஞானிதான்…


இந்த வெற்றியை சச்சினுக்கு அர்பணிக்கிறோம் என தோளில் தூக்கி கொண்டு கண்ணில் நீருடன் வலம் வந்த குழுவின் அந்த எளிமைக்கு, வயசில் பெரியவங்களுக்கு நம் கலாச்சாரம் தரும் மரியாதை மின்னுகிறது. அதே லெவல்ல, வெளி நாட்ட சேர்ந்தாலும் கோச்சையும் தூக்கி சுத்துனது சூப்பர்டா. நன்றி மறக்காத அந்த குணம், மனித நேயம் மின்னிய அந்த செயல், நம்ம நாட்டுக்கே பெருமைடா சிங்கக் குட்டிங்களா….


சூப்பரா நினைச்சத முடிச்சுட்டீங்க. இனி நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நாடு கொஞ்சம் அதெது வேலைய பார்க்கட்டும். இப்ப ரிலீஸ் பண்ணா, படம் படுத்துறும்ன்னு, பயந்து போயி பம்முன திரையுலகம் அது பங்குக்கு … கலை????!!!! வளர்க்கட்டும். இதையே திருப்பி திருப்பி போட்டு நீயூஸ்ன்னு சொல்ற ஊடகங்கள், மிச்ச விசயத்த கவர் பண்ணட்டும். சராசரி மனுசன் தன் கடமைகள் செய்யட்டும்.