பக்கங்கள்

மூளையின் வடிவிலே ஒரு பூ

கைகள் நகர்ந்து மெலிதாய் வருடியது. வருடிய இடம் வழவழப்பு, லேசான வியர்வை. தாகம் உட்சத்தில். தொண்டை சூட்டில் கண்கள் மூடியது.

நகர்ந்த கைகள் தொட்ட இடத்தில சூடு .... கைகள் உணர்ந்தது. விலக்கி கொண்டு மறு பக்கம் நகர்ந்தது. சில்லென்று ஒரு குளுமை. ஆ... இது தான் தேடியது என்பதாய் மூடி விலக்கி தண்ணிர் குவளையில் சேந்தி குடித்தேன். வெயில் காலத்திற்கு குளிர்ந்த நீர் தான் சூடு நீர் யார் குடிப்பார்.

என்ன இது சப்புன்னு முடிச்சிட்டியே என்பவருக்கு, இன்னொரு கதை.
இதுவும் ஒரு சப்பு தான். நாம் கேள்விப்பட்ட கதை தான்.

ஆர்தர் தன் மகனுடன் வேகமாய் காரில் சென்றார். கார் விபத்து. ஆர்தர் அந்த இடத்திலே இறந்து போனார். மகன் பலமான காயங்களோடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டான். வந்து பார்த்த டாக்டர் சொன்னார் 'இவரை நான் அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன், ஏனெனில் இவர் என் மகன்"

அதான் செத்து போயிட்டாரே....

அவர் எப்படி...

ஆவியா...
இல்லை ஆர்தர் பிள்ளைக்கு இரண்டு அப்பனா என்று பாமர மனம் விடை தேடும் போது, உண்மை விடை நம்மை சிந்திக்க வைக்கும்.

'அந்த டாக்டர் அவர் அம்மா" .... யம்மா....

எளிமையான விடை ஏன் ஒளிந்து கொண்டது.
டாக்டர் என்றவுடன் அனாவசியமாய் ஆண் பால் என்று கருத்து மேலாக்கம் செய்து கொண்டு முன்னேரி சிந்திப்போம்

நம் மூளையின் பலவீனம் அது.
1. எளிமையாய் சிந்திக்க தெரியாது. அல்லது அடிப்படையாய் சிந்திக்க மறுக்கும்
2. நம் நினைவுகளை எப்போதும் அலசி இடு குறி காரணம் விளக்கம் செய்ய துடிக்கும்.


இந்த மூளையின் அடிப்படை ஊனம் தெரிந்து விட்டால் நம் சிந்தனை சீர் பெரும்.

தேருதல் என்ற ஒரு நாறுதல்

மாறுதல் வேண்டுவதால் ஒரு தேருதல் என்ற ஒரு நாறுதல். அரசியல் ஒரு சாக்கடை என்று பல பேர் சொல்லிய வாசகம் வருத்தத்தோடு ஒத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. ஜனநாயகம் ஜரூராய் ராஜ பாட்டையில். அவசரம் அவசரமாய் கொள்கைகளை காற்றில் பரக்க விட்டு கட்சிகள் கச்சை கட்டும். கட்சிகள் வெக்கமே இல்லாமல் வியாபாரம் நடத்தும் ஒரு விபரீத விளையாட்டு இங்கே வினயமாய் அரங்கேறும். சேவை என்ற பெயரில் வெட்கம் கெட்டு கட்சி நடத்தும் 4 வகை கட்சிகள் நம் நாட்டிலே உண்டு. அக்கடா, துக்கடா, விக்கடா, விட்டுருடா.

அக்கடா - பெரிய கட்சிகள்: முதுகெலும்பு இல்லாமல் தனியாய் நின்று வெற்றி பெற முடியாததால் கூட்டணி என்று கும்மி அடிக்கும்

துக்கடா - வெற்றி பெற முக்கியமான குட்டி கட்சி இது, தன்னால் ஆகாது தமையனை துணைக்களைக்கும் கையாலாகத கட்சி

விக்கடா - கட்சி ஆரம்பித்து பின்னர் எப்படி நடத்துவது என்று தெரியாமல் விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாத முக்கும் கட்சி

விட்டுருடா - பருப்பு வேகததால் கடையை இழுத்து மூடிய பாவம் கட்சி


வாக்காளனுக்கு உள்ள முடிவு என்ன.

இருப்பதில் நல்லவன் எவன் என்று பார்க்கலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. வெற்றி வேண்டியே கூட்டணி என்ற கூத்து அரங்கேறும். தன்னலம் தவிர்த்து நாட்டு நலன் கருதி கூட்டணி என்று எந்த கட்சியாவது முடிவு செய்யுமா.

கூட்டணி கூடியதும் பழைய பகை மறந்து தோளில் கை போட்டு போட்டோ போஸ் கொடுக்கும். நாயே பேயே என்று ஏசியவனை இன்று கூடப் பிறந்ததாய் கொண்ட்டாடும். அப்பாடி உண்மை உரக்கச் சொல்லப் படுகிறதே.

இனி சிரித்த முகத்தோடு நம் ஓட்டுக்கள் வேண்டி ஒரு கூட்டம் வரும். உஷாரையா உஷார், பாவம் நம் பாமரத்தனம். வெளுத்த தோல்களும், ஓங்கிய ஆளுமையும், நாவின் வன்மையும் நம் மனதை வெல்லும்.

ஒட்டு போட காசு கேட்கும் கேவலம் இங்கே சாதாரணம். வருமையை காரணம் சொன்னாலும் உன் தன் மானம் எங்கே மலம் தின்னப் போனதா என்று மனம் வெதும்பும். வன்முறையில் விருப்பம் இல்லை என்றாலும், ஒட்டுக்கு காசு கொடுப்பவனை ஒட ஒட அடிக்கத் தோன்றும். காது கிழிய கிழிய பிரச்சார பாடல் கேட்கும். தேர்தல் திருவிழா போலே நடக்கும். கள்ள ஒட்டு எனும் கயமை தனம் நடக்கும்,உணர்ச்சிகள் எல்லை மீறியதால் பகை மிகும். ரௌடி தன் புஜ பல பராக்கிரமம் காட்டுவார். அவர் ஆழ் மன விகாரக்களை மது, ஆயுதத்தின் துனை கொண்டு நடதுவார். வெட்டுவார், வெட்டப்படுவார்

தேர்தல் முடிவு சொல்லுவேன் என்று நருவீசாய் உடை உடுத்தி வெள்ளை காரன் போலே ஊடகங்கள் கல்லா கட்டும், நாள் பூராய் முளித்திருக்கும், நடு நடுவே விளம்பரம் காட்டும். வெட்டியாய் ஒரு கூட்டம் அதை வாய் பிழந்து பார்த்து நிற்கும். தேர்தல் முடிந்த பின்னும், குதிரை பேரம் நடக்கும்.

பரபரபுக்கு ஏங்கும் மனதோடு சராசரி வாசகன், எனக்கும் இதர்க்கும் சம்மந்தமில்லை என்பதாய் சில அரை வேக்காடு மேதாவிகள், என்னையும் சேர்த்துத்தான்.

பாரதத்தாய் பாவமாய் பார்க்கிறாள்..

எழுத்தை பதிவாய் பொறித்து விட்டேன்

பிரியத்திற்குரிய நண்பனே !!!!
உயர்ந்த உள்ளமும், உன்னத எண்ணமும் கொண்டவனே !!!!
என்ன தவம் செய்தேன் உன்னை நண்பனாய் அடைய.

படுக்காளி வலைப்பதிவின் எண்ணமும் எழுத்தும் நான் அல்லவே.

தன்னடக்கம் என்ற ததிடு தத்தம் இல்லை.
நட்பின் உந்துதலும், ஊக்கமும் என்று உறுதியாய் சொல்ல முடியும்.

இதை எழுது இன்னும் எழுது என்ற பரிவு தானே பதிவாய் ஆனது.

மேலும் தங்கள் எழுத்தின் நையாண்டி, கவித்துவம், ஆளுமை யாருக்கு வரும். தங்கள் எழுத்தை பதிவாய் பொறித்து விட்டேன்.

இதெல்லாம் அரசியல் விளையாட்டு
நீ ஆம் என்று மட்டும் தலையாட்டு

எங்கெங்கு காணினும் அயோக்கியர்கள்
தேடியும், காணவில்லை யோக்கியர்கள்


தேனில் தோய்த்த வாக்குறுதி
பின், ஆனது நமக்கு வாக்கரிசி

நீட்டிய நோட்டை வாங்கினோம்
காட்டிய சீட்டில் குத்தினோம்


அவர்கள் சின்னத்தில் முத்திரை விழுந்தது
பின், அந்த சின்ன புத்தி எட்டி பார்த்தது


வாக்கை குத்திய மை காயும்முன்
அவர்கள் நம்மை குத்திய கதை கேளு

அவர்கள் கேட்ட ஓட்டை போட்டு விடு
பின், ஒட்டிய வயிறோடு இருந்து விடு

இது அரசியல் சூது விளையாட்டு
நீ வெறுமே பார்த்து தலையாட்டு



நன்றி : நண்பர் கோபி - http://edakumadaku.blogspot.com/

http://www.jokkiri.blogspot.com/

வரவு 8 அண்ணா செலவு 10 அண்ணா

வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடல் இன்றைய சூழலுக்கு புரியாது. காசின் மதிப்பு குறைந்து அணாக்கள் எல்லாம் மலை ஏறி போச்சு. என்பதால் வரவு 8 அண்ணா செலவு 10 அண்ணா.

இன்று சம்பள தினம். சராசரி அலுவலக ஊழியனின் திருவிழா நாள். சந்தோசம் கொப்பளிக்கும். அன்னைக்கும் அப்படித்தான்.

மாசம் பூரா மொக்கைய போட்டு, வெரும் கையில மொளத்த போட்டு, நெட்டைய போட்டு மட்டைய போட்டு, சம்பளத்த தேத்தியாச்சு. இனி என்ன. ஜாலியா செலவு செய்யலாமே எனும் போது, ஒரு சிந்தனை.

கூட வேலை செய்யும் வெள்ளைக்கார நண்பன் - ஏற்கனவே அறிமுகமான நம் லவ்வர் பார்ட்டி. சுருசுருப்பாய் தின வேலைகளை முடிக்கும் அவசரத்தில். தெரியாத்தனமாய் நான் போய் அவனிடம் கேட்டேன், ஊருக்கு பணம் அனுப்பும் இடம் எங்கே என்று. திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மாதிரி பேந்த பேந்த முழித்தான். 'தெரிஞ்ச்சா சொல்லு இல்லைன்னா விட்டுறு, ஏண்டா இப்படி முழிக்கற என்று சொல்ல நினைத்தாலும் முடியவில்லை.

ஏன் அவன் சேமிப்பது இல்லை!!!

அவன் சம்பளம் முழுவதும் அவனே செலவழிப்பான். உடுத்துவான், உண்ணுவான், குடிப்பான், பயணிப்பான். சேமிக்க வேண்டிய அவசியமே இல்லை. கல்யாணம் பண்ண அவன் வீட்டுக்காரியும் இது போலே சம்பாதிச்சு செலவளிப்பா. சரி பிள்ளை குட்டி பிறந்தா வளர்ற வரைக்கும் வளர்ப்பான். தோளுக்கு மிஞ்சினா துரத்தி விட்டுருவான் அல்லது அந்த பிள்ளையே ஓடி போயிரும்.

என்னய்யா புளிப்பு இது
சாகப் போகும் இறுதி நாளில் நடு ரோட்டில் நிறைய இந்திய தகப்பன். சரி இத்தனை நாள் நீ சம்பாதித்தது எங்கே என்றால் மனைவியை காட்டுவான், மகனை மகளை காட்டுவான். சரி மனைவியிடம் போய் உன் வாழ்க்கை யாருக்காய் வாழ்ந்தாய் என்றால் புருசனை காட்டுவாள். மகனிடத்தில் போனால் அங்கேயும் அதே கதி தான்.

இதனோடு தொடர்புடைய இன்னொரு நிகழ்வும் மனதில் ஆடுகிறது. ஒரு விமான பயணத்தில் என்னருகில் ஒரு வெள்ளை காரி. வயது சுமார் 75 இருக்கும். முகத்தில் தான் வயது தெரிகிறதே இல்லாமல் அவள் நினைப்பிலோ செயலிலோ இல்லை. எங்கே செல்கிறாய் என்ற போது உல்லாச பயணம் என்றாள். இன்னும் உழைக்கிராளாம், சம்பாதித்து கொஞ்சம் பணம் சேர்ந்தால் கூட எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டுவேன் என்கிறாள். மேலும் துளைத்து கேட்டேன். பிள்ளை குட்டி இருக்கா என்று. ஒரு பெண்ணும் இரண்டு மகன்களும், பெண் அடிக்கடி தொலைபேசியில் உறவாடுவதாகவும் மகன் எப்போவாவது பேசுவானாம். இன்னொருதன்ன் எங்கே இருக்கான் தெரியலே என்றாள்.


சம்பாதிக்கற மொத்த பணத்தயும், உங்களுக்கே செலவழித்தால் என்னவாகும். என் காசு எனக்கு. நான் சம்பாதிப்பது எனக்கு என்ற வெள்ளை கார வாழ்வும் நம் இந்திய வாழ்வின் வித்தியாசம் யோசிக்கத் தோன்றுகிறது.

எனக்குனு நான் ஒன்னுமே செய்யல என்ற இந்திய தகப்பன், இறுதி நாட்களில் சொல்வது சற்று பரிதாபப் பட வைக்கிறது

வயது முதிர்ந்தாலும் என் வாழ்கை என் கையில் என்று கிளம்பிவிடும் அவர்கள் சார்பற்ற வாழ்வின் நல்லதும்,

ஒன்று பிள்ளைகளோடவே அல்லது முதியோர் இல்லத்தில் முடக்கி போகும் நம் சார்பு வாழ்கையின் கெட்டதும் தெரிகிறது.

நம் கலாச்சாரத்தின் நல்லதை எடுத்து கெட்டதை / கேட்டதை மாற்றி யோசித்து வெள்ளை காரனை போலே இறுதி நாட்களை வாழ ஆசை வருகிறது

உயிர்த்த தினம் வாழ்த்துக்கள்

உயிர்த்த தினம் வாழ்த்துக்கள்.

மனிதனாய் பிறந்தால் மரணம் நிச்சயம், அது இறை குமாரன் என்றாலும். அவர் வாழ்க்கை சொன்ன அடிப்படை அரிச்சுவடி இது.

யேசு மட்டும் சிலுவையில் உறங்காமல், உதிராமல், உதித்தார்.

நம் மனித இனப் பாவங்களுக்காக இறை மகன் சிலுவை மரணம் கொண்டார் என்ற வார்த்தையின் முழு பரிமாணம் புரியவில்லை.

இன்றைய மதம் சொல்லும் தத்துவம் புரியவில்லை.

சில யூத மத குருக்களின் மூர்க்கத்தனம் தானே என்றும், சரி 33 வயதில் சாகாமல் வயதாகியோ அல்லது நோய் வாய் பட்டு இறந்து இருந்தால், இறை மகன் நோக்கம் நிறை வேரி இருக்காதா என்றும் கேள்வி வருகிறது.

அவர் இறந்தது சரித்திரமாக சாத்தியமில்லை. ஆனால் உயிர்த்த போது, மரணத்தை வென்ற போது சாதனையானது சத்தியம்.

பிரச்சினை, சோதனை ஒரு மனிதனை உருவாக்குவதில்லை. சோதனை வெல்லும் போது சாதனை

சொல்லு டாயி....

குழல் இனிது இல்லை.
யாழ் இனிது இல்லை.
மக்கள் மழலையே இனிது என்று
வள்ளுவருக்கு ததாஸ்து சொல்லி விட்டேன்.

என் மகள் கேட்டாள்.

டாயி பேரு : பெப்பா
மம்மி பேரு : செர்னி
அண்ணா பேரு : சாண்
ஜுயியா பேரு : __________


எளிய கேள்வி, நான் திகைத்தேன். பதில் இல்லை.

பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக்குறைவு என்பது நம் கலாச்சாரம்.

இளையவர்களை உறவின் முறை சொல்லாது, பெயர் வைத்து அழைப்பது முறையா....

டேய் தகப்பா, டேய் மாமனாரே....
என்று அழைக்க நம் கவுண்டமணிக்கு மட்டும் அனுமதி.







கடலில் நடுவில் படகில் நிலவில் உறவில்


நிலா அது வானத்து மேலே
பலானது ஒடத்து மேலே
என்ற பாடல் வரி மனதில் ஒட இந்த பதிவு எழுதுகிரேன்.
என்னோடு வேலை செய்த வெள்ளைக்காரன். ஆறடி உயரத்தில் ஒங்கு தாங்காய் இருப்பான். வாயில் விளக்கெண்ணை வைத்து கொண்டது போலே அவன் தாய் மொழி பேசுவான். கொஞ்சம் நொர நாட்டியம். ஆள் தான் அய்யனார் மாதிரி இருப்பானே தவிர ரொம்ப பாவம்.

தெரியாதனமா கேட்டேன் நான். "என்னடா இன்னிக்கு உன் கண்ணுல நட்சத்திரம் தெரியுது. நடையில ஒரு குதியாட்டம், கை கால்ல ஒரு குத்தாட்டம்" அவ்வளவு தான் என் பக்கத்தில வந்து தோள்ல கை போட்டு.... 'டேய் நீ ரொம்ப கூண்டுடா தாங்கல’ என்று சொல்ல தோன்றினாலும், அவஸ்தையாய் சிரித்து கொண்டே கேட்டேன். அவன் சொல்ல சொல்ல என் கண்கள் விரிந்தன.

இது நம்ம லவ்ஸ் மேட்டேர். எத்தனை பேரு காலேஜ்ல கேட்டது.
'அந்த பிள்ளைய நான் டீப்பா லவ் பண்றேன். ஆனா ஒரு ரெஸ்பான்ஸ் இல்லேடா' என்றவுடன் கட்சை கட்டிக் கொண்டு களத்தில் குதித்து ப்ளான் போட்டு ஸ்கெட்ச் போட்டு சொன்னது தானே. சரி வெள்ளைக் காரன் காதலுக்கும் உதவுவோமே என்று தொபுக்கடீர் என்று குதித்தேன்.
"சரி அந்த பிள்ளை எங்க இருக்கு"
"எங்க வீட்டுல தான்"
கிரகசாரமே... உன் வீட்டுலயா.
"ஆமா அஞ்சு வருசமா ஒன்னு மண்ணா குப்பை கொட்டிக் கிட்டு இருக்கோம்"
என்ற போது 'என்னை பார்த்தா எனக்கே பாவமா இருந்திச்சு.
என் பருப்பு இங்கே வேகும்னு தோணலே, உன் வீகத்த நீயே சொல்லு, என்றதும் சொன்னான்.
இன்று இரவு வெளியில சாப்பிடலாம் என்று சொல்லியிருக்கிறேன்.
அவள் வருவாள். நான் அவளை அழைத்துக் கோண்டு நேரே கடற்கரைக்கு செல்வேன். அங்கு நாங்கள் இருவர் மட்டுமே செல்ல ஒரு படகு உண்டு. மொத்தம் 6 மணி நேர வாடகைக்கு எடுத்து உள்ளேன். அது எங்களை நடுக் கடலுக்கு கூட்டி செல்லும். குளிர் காற்று தென்றலாய் தழுவும் நேரத்தில், முழந்தாலிட்டு .... அவசரமாய் கால் சட்டை பையில் கை நுழைத்து அந்த மோதிரத்தை காண்பித்தான். இதை அவளுக்கு கொடுத்து, 'என்னை மணந்து கொள்வாயா' என்று கேட்பேன்.

பெத்தவங்க பெரியவங்க இல்லை. அவனே போய் கல்யாணம் பேச வேண்டி இருக்கு. அந்த பிளையை நினைத்தேன். யார் பெத்த பிள்ளையோ, இவன் கூப்பிட்டு வந்து, சரி சோறு திங்கத்தானேன்னு நினைச்சா கடலுக்கு கூட்டி போறான், சரி கடல் தானேன்னு நினைச்சா தனியா ஒரு படகு, வைரத்தில் மோதிரம். மூட்டிக்கால் போட்டு விண்ணப்பம் வேற. உணர்ச்சி வசப்பட்டு சரின்னு சொல்லும் என்று தான் தோன்றுகிறது.

ஐந்து வருடம் ஒன்றாய் வாழ்ந்த பின் திருமணம் பற்றி யோசிக்கும் அவர்கள் வாழ்கை முறை எனக்கு புதுசு. நாம் பழகாதது. முக்காலே மூணு வீசம் வாழ்ந்து தொலைக்கும் அந்த வாழும் உறவு முறையில் திருமணம் தனித்து நிற்பது ஆச்சரியமாய் உள்ளது. இனக் கவர்ச்சியும், உடல் உறவும் தெரிந்த பின் முடிந்த பின் குடும்பம் சமைக்கும் அந்த கலாச்சாரம் இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது.

நெட்டையோ குட்டையோ இதுதான் விதித்தது என்று வாழும் நம் வாழ்வும் சிந்திக்க வைக்கிறது.

தீர்மானம் செய்யாமல் வாழ்ந்து விட்டு பின்னர் சரிபட்டால் மணம் செய்து கொள்வோம் என்ற வாழ்வு முறையில் உள்ள நிலையாமை தெரிகிறது. இறுதி வரை இதுதான் என்ற தீர்மானத்தை பயன்படுத்தி அடுத்தவரை நசுக்கும் நம் நாட்டின் நச்சு புரிகிறது.காதல் - உணர்ச்சி வசப்படுத்தி வென்று எடுப்பது முறையா ??? குடும்ப உறவு காதலால் சமைந்தாலும் அன்பும், விட்டு கொடுக்கும் மனப்பான்மையும், உள்ளதை சொல்லும் பண்பிலும் அமைய வேண்டிய அவசியம் உண்டல்லவா.

படுக்காளி - அண்ணன் கூட்டு சதி


ஏழாம் வகுப்பு படிக்கும் போது அல்லது படிக்காமல் ஒப்பி அடித்த போது பொறி பரக்கும் காய்ச்சல்.
வாயெல்லாம் கசப்பு. உடம்பெல்லாம் தீ மற்றும் அசதி. வீட்டில் முடிவு செய்து மருத்துவமனை பயணம். மனசெல்லாம் பயம் காய்சலை மீறி. போடப் போகும் ஊசியை நினைத்து.
படுக்காளிக்கு துணை அண்ணன். வேலிக்கு ஒணான் சாட்சி.
அரசு மருத்துவமனை. பிரைவேட் எல்லாம் அவ்வளவு இல்லை. அவசியமும் இல்லை. வியாபாரம் இன்னும் வேர் விடாத வேளை. மூக்கை துளைத்து ஒரு மணம் இதயத் துடிப்பை இன்னும் அதிகம் ஆக்கும். பச்சை நிற காடா துணியில் ஒரு தட்டி. அதற்கு மறுபுறம் டாக்டர். அவஸ்தையாய் வரிசையில் நாங்கள். போடப் போகும் ஊசியை நினைத்து இப்போதே ஒலம் தொடங்கி விட்டான் என் பக்கத்து நோயாளி. நாலு வருடம் முந்தி பிறந்ததால் எனக்கு அந்த சௌகரியம் இல்லை. வாய் விட்டு அழக் கூட இந்த் வயது ஒரு தொல்லை. சொல்ல வேண்டிய வாக்கியங்களை உடல் உபாதைகளை மனதிலே ஒட விட்டு ஒரு ஒத்திகை.
பெரிய மேசையில் கண்டிப்பாய் கண்ணாடி அணிந்து கொண்டு மருத்துவர். நாங்கள் தான் வாய் ஒயாது பேசுவோமே அல்லாது, அவர் அமைதியாய் கேட்க மட்டுமே செய்வார். வெள்ளை காகிதங்கள் சதுர வடிவில் வெட்டி அவர் மேசை மீது இருக்கும். முதல் காகிததில் உருண்டை உருண்டையாய் கோழி கிண்டுவார். இன்னொரு காகிதம் எடுக்கக் கூடாது என்று ஊரில் உள்ள சாமியை எல்லாம் மனம் வேண்டும். அது என்ன கணக்கு. ஒன்று மாத்திரைக்கு, இன்னொண்று ஊசி.
மாதாவே... இரண்டும் எழுதி விட்டாரே இன்று.

தலை அனிச்சையாய் திரும்பி பார்க்கும். ஊசி போடும் இடம். செவிலியர் கொதிக்கும் தண்ணி அருகில் வெள்ளை உடையில். சமாதான வண்ணத்தில் வன்முறை நிற்கும். வலிக்காமல் ஊசி போடுவாரா என்று கேள்வி கோரிக்கையாய். மருந்து வாங்க நிற்கும் வேளையில் அண்ணா கேட்டான். "ஊசி போடாம ஒடிருவோமா" சட்டென ஒரு இன்ப அதிர்ச்சி. ஆஹா என்ன ஒரு ஐடியா.
கரும்பு தின்ன கூலியா. சந்தோசமாய் தலையசைத்து "சரி" சொன்னேன்.
ஒடி வந்து விட்டோம்.

வரும் வழியில் எல்லாம் அண்ணன் அன்பாய் தெரிந்தான். ஏன் இப்படி செய்தான். அவனுக்கும் இதே வலி இருந்திருக்கும். பாவம் அவன் முதலாய் பிறந்த துர்பாக்கியம் அந்த வலி போக வழி இல்லை. அவனுக்கு என்ன கைமாறு செய்யலாம் என்று எண்ணம் தான் மனதிலே. நன்று நன்றி என்று வார்த்தையாய் சொல்ல வில்லை.

சும்மா இரு...

நேற்று வாசித்து முடித்த நாவல் . அனிதாவின் காதல் - சுஜாதா.



சுமாரான கதை. அவருக்கே உரிய நடையினால் பரவாயில்லை. படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடிய வில்லை.



சுஜாதாவின் பலம் தகவல்கள். தாறு மாறாய் படித்து தொலைத்து இருப்பார். ஆழ்வார் படிப்பார், அறிவியலும் படிப்பார். ஆழ்வாரில் அறிவியலை, அறிவியலில் ஆழ்வாரையும் தேடுவார்.



படுக்காளியின் காலா நூலா பதிவின் கேள்வி இந்த கதையின் அடிப்படை என்றவுடன் சுருசுருப்பாய் பதிவு எழுதி விட்டேன்..


புயலாய் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் புகுகிறான் அவன். உருகி உருகி காதலிக்கிறான். அனிதா காதல் பற்றி யோசிக்க கூட இல்லை, அதற்குள் அவள் மூச்சு விடக் கூட நேரம் தராமல் அவளை பல கோணத்திலிருந்தும் தாக்கி அவளை மணம் புரிகிறான். அவசர அவசரமாய் கல்யாணம் கூட பரவாயில்லை, அதே வேகத்தில் ம்ண முறிவு என்றால்,



இவள் தனக்குள் கேள்வி கேட்கிறாள். இது வரை என் வாழ்க்கை என் முடிவில் இல்லாமல் என்னை சார்ந்தவர்களே முடிவு செய்கிறார்களே, என்று வருந்தி ஒரு குருவை சந்திக்கிறார்.



குரு சொல்கிறார் "இன்று நாம் சந்திப்போம் என்பதும், நாம் பேசும் வார்த்தைகள் கூட முன்னமே தீர்மானிக்கப் படுகிறது. உன் முயற்சியாய் நீ நினைப்பது கூட உனக்கு வழங்கப் படுகிறது. எனவே நீ சும்மா இரு"



தர்க்க ரீதியாய் ஒத்து கொள்ள மனம் மருத்தாலும், ஆழமாய் மேல் குறிய வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை வாசித்து அதன் அர்த்தம் புரிந்து சும்மா இரு என்று மனதிற்கு கட்டளை கொடுத்ததும், மனதில் குடி கொள்ளும் அமைதி உண்மையிலும் உண்மை.



"இன்று நாம் சந்திப்போம் என்பதும், நாம் பேசும் வார்த்தைகள் கூட முன்னமே தீர்மானிக்கப் படுகிறது. உன் முயற்சியாய் நீ நினைப்பது கூட உனக்கு வழங்கப் படுகிறது. எனவே நீ சும்மா இரு"




பதிவு எழுதி முடித்தாலும் ஒரு திரைக் கவியின் வரிகள் கிச்சு கிச்சு மூட்டுகிறது.

சும்மா உட்கார்ந்து சோம்பேறியா இருந்த போதும்

முன்னாலும் பின்னாலும் மூக்காலே மூச்சிழுக்க வேண்டும் !!!

மிகப் பெரிய பிராணயாமா தத்துவமோ !!!

வைச்சிக்கிட்டு ஏன்யா வஞ்சனை பண்ணுரே

சாமுத்திரிகா லட்சணப்படி அல்லது அவலட்சணப்படி அல்லது அவாஅவாலட்சணப்படி அல்லது டாவின்சி தியரி படி இரண்டு கையையும் சேர்த்து பிடித்தால் உள்ள சைசே மனித மூளை.

கேள்விப்பட்ட விசயம் தான்.

அவங்க சொன்ன தகவல் படி விரல் அளவு வைத்து மூக்கின் அளவும் மூஞ்சியின் அளவும் சரியா இருந்தது. இல்லாமல் மண்டைக்குள் கையை விட்டு எல்லாம் பார்க்க வில்லை.

அறிவியல் ஆய்வு படி 10% குறைவாகத்தான்... நம்ம மூளைய நாம் பயன்படுத்துகிறோம் என்று கேட்கிற போது ஆச்சரியமும் ஆத்திரமும் வருகிறது.

வைச்சிக்கிட்டு ஏன்யா வஞ்சனை பண்ணுரே என்று மண்டைக்குள் கேட்க தோன்ற்றுகிறது.

ஒரு சிந்தனை.

நமக்கு அறிமுகமான மனிதரை எடுத்துக் கொள்வோம். ஆணோ, பெண்ணோ எது வானலும் ஒகே. அவரை கண்களால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வளவு நேரம் வேண்டும்.

சரி அவர் தொப்பி போட்டாலோ, கண்ணை மறைத்து கண்ணாடி போட்டாலோ பிரச்சனை இல்லை. உடம்பை போர்வையால் போர்த்திக் கொண்டாலும் தப்பிக்க முடியாது. என்றால் எதை வைத்து நாம் மனித முகங்களை நினைவு கொள்கிறோம்.

மறுபடி கேட்கத் தோன்றுகிறது வைச்சிக்கிட்டு ஏன்யா வஞ்சனை பண்ணுரே, கொடுத்தா குறைஞ்சா போயிடுவ ?