பக்கங்கள்

உலகம் சுற்றுவோம் வாருங்கள் - பஹ்ரைன்

கடல்களால் சூழப்பட்டு ஒரு ஊரை ஒரு நாடாய் சொன்ன வினோதம் தான் பஹ்ரைன். வண்டியில் ஏறி அழுத்தி மிதித்தால் நாட்டின் ஒரு எல்லை விட்டு அடுத்த எல்லை தொட்டு விடலாம், ஒரு மணி நேரத்திற்கு உள்ளே.
சிறியது என்றாலே அழகு தானே. மத்திய கிழக்கு நாடுகளுக்கே உரிய நவின வசதிகளும், நச்சு பிச்சு தொந்தரவுகளும் உண்டு. குளுமையான காற்றிலே பண வாடை துக்கலாய் இருக்கும். ஓரிரு கிலோமீட்டர் தூரத்திலே கடல் சூழ்ந்து இருந்தால் காற்று சுகமாய் தானே இருக்கும். சிரமப்பட்டு மரம் வளர்த்து அதையும் மெனக்கெட்டு தண்ணிர் ஊற்றி கொண்டு இருப்பார்கள். சொல்லாமல் கொள்ளாமல் தானே வளரும் ரோட்டோர கேரளா மரங்கள் கேட்டால் பொறாமை படும்.
மத்திய கிழக்கு சரித்திரங்களின் மிக பழைய பக்கங்கள் பக்ரைனில் தென் படும். இங்கு புதைத்தால் நல்லது என்று நம்பி - பிணங்களைத்தான், வெளி நாட்டில் இருந்து வந்தெல்லாம் புதைத்தார்கள் என்று ஒரு கதை உண்டு. மத்திய கிழக்கின் சுடுகாடு என்று சொன்னால் மிகை அல்ல. எது எப்படியோ ஒரு மிக பெரிய நிலப் பரப்பு இன்று வரை அகழ்வாராய்சிக்கு சோறு போட்டு கொண்டு இருக்கிறது. தோண்டுவதும் துடைப்பதுமாய் இன்றும் சில வெள்ளைகார மேதாவிகள் அரை நிஜார் போட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
முது மக்கள் தாழி போலே உள்ள மண் பானையில் இவர்கள் கலையும், கலாச்சாரமும் கும்மி அடிக்கும். அத்தனை பெரிய பணக்காரர்கள் இல்லை இவர்கள். எல்லாருமே 'புது பணக்காரர்தானே'. எண்ணை எடுக்கப்பட்டு , வாகனத்தில் ஓடும் என்று தெரிந்த பின் தானே இவர்கள் சீமான்கள்.
இவர்கள் வரலாறே பாவம் தானே. அரசரின் மாளிகை கூட இங்கே மண் குடிசை தானே. வரலாறு இல்லாது வளமையான எதிர்காலம் மட்டுமே இங்கு சாஸ்வதம்.
இந்தியாவோடு நெருங்கிய நட்புறவு வைத்தது தெரிகிறது.
ஒரு தேனிர் விலை 50 காசு, புத்தம் புது சொகுசு கார் 5000 ரூபாய். உள்ளூர் காசு ஒரு தினார் இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய். இது என்ன கலாட்டா… ஒரு ரூபாய்க்கு நூறு பைசா என்றால் ஓகே. ஆயிரம் பைசா என்றால், அழுவினி ஆட்டம்…. அதனாலே தான் ஒரு பக்ரைனி தினார், துபாய் மதிப்பில் பத்து திர்ஹம். எது எப்படியோ அரை ரூபா நோட்டு காகிதமா இருக்க, 50/100/250/500 காசு நாணயமா இருக்கு.
சுறுசுறுப்பான துபாய் மாதிரி இல்லாது, சோம்பேறித்தனமான ஊர் என்று சொன்னால் அவர்களே கோபப் பட மாட்டார்கள். ஆனால் துபாயின் வளர்ச்சி பிடிக்காது. வளைகூடாவின் வாசல் என்று துபாய் ஆகி போனது. பஹ்ரைன் தொடங்கிய விளையாட்டை வேகமாய் விளையாடி வெற்றி பெற்றவர் துபாய் காரர்.
இந்த ஊர் உயர முக்கிய காரணம் அருகாமையில் உள்ள ஒரு நாடு. சவுதி அரேபியா. அந்த ஊரில் கிடைக்காத மதுவுக்கும், மாதுவுக்கும் ஆலாய் பறந்து ஒரு கூட்டம் வரும். வார விடுமுறையிலே இங்கு கூட்டம் நெரிக்கும். முரட்டு தனமாய் வண்டி ஓட்டி சாலை விதிகளை மீறும். புன்முருவலோடே பஹ்ரைன் நாடு அதை ஏற்று கொள்ளும்.

2 கருத்துகள்:

  1. ஒரு ரூவாய்க்கு 1,000 காசா??? ஐயோ, ஐயோ, சொக்கா, அந்த காசு பூரா எனக்கே எனக்கு வேணும். வெறும் 1,000 காசு மட்டும் இல்ல. அத போல பல ஆயிரம் காசுகள் வேணும், சொக்கா சொக்கா.....

    இப்படி பொலம்ப கூடாது, பொலம்ப கூடாது...... ஏன்னா, கெடைக்குன்மு இருக்கறது கெடைக்காம இருக்காது. கெடைக்காதுன்னு இருக்கறது, கெடைக்கவே கெடைக்காது. இது நான் சொல்லல சொக்கா, சொன்னது யாருன்னு தெரியலியே மக்கா.... மக்கா...

    சவுதில இருந்து, ஜல்சா பண்றதுக்கு பக்ரைனுக்கு வராங்களா?? ஒண்ணு வாங்கினா, ஒண்ணு இலவசமா?? நல்லா இருக்குடா உங்க நியாயம், அவனவன், ஒரு வேள சோத்துக்கு ஆலா பறக்கறான். நீங்க, ஜல்சா பண்றதுக்கு அடுத்த நாட்டுக்கு, கார்ல போறீகளா?? நடக்கட்டும்டா நடக்கட்டும்.

    எப்படியோ, எல்லாரும் நல்லா இருந்தா சரிடா ........... நான் வேற என்னத்த சொல்றது.

    படுக்காளி, அங்க எல்லாம், பெட்ரோல் வெல ரொம்ப கொறச்சலாமே... அதப்பத்தியும் ஏதாவது எழுதறது......

    இன்னும் நெறைய ஊர், ஒலகம் எல்லாம் சுத்தி பாத்துட்டு அதைப்பத்தியும் எழுதுங்க, என்ன மாதிரி ஏழை, பாழைங்க படிச்சு தெரிஞ்சுக்கறோம். நாங்க படிச்சு தான் தெரிஞ்சுக்க முடியும். பின்ன, உங்கள மாதிரி உலகம் சுற்றும் வாலிபனா நாங்க ??........ சுத்தி பாத்து தெரிஞ்சுக்கரத்துக்கு?

    பதிலளிநீக்கு
  2. தற்போதைய பொருளாதார நிலை வங்கிக்காரர்களுக்கு சிரமமான நேரம் தான். விரைவில் தேக்கம் நீங்குமென நம்புவோம்

    பதிலளிநீக்கு