பக்கங்கள்

ஆன்மிக அல்வா – புத்தம் புதிய தொடர்

இதோ உங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்க ஒரு புத்தம் புதிய தொடர்.
வேற ஆள பாரு, முடியாது, மாட்டேன் போ என ரொம்ப காலமாய் அடம் பிடித்து வந்தார் இத்தொடரின் ஆசிரியர். பெருமுயற்சியின் பேரின் ஒரு தொடர் எழுத ஒப்புதல் தந்துள்ளார் நம் அன்பிற்குறிய படுக்காளியானந்தா.

இவர் இருபது வருடத்துக்கு முன்னமே இமயமலையை புகைப்படத்தில் பார்த்து பழகியவர். மட்ச, மிச்ச, சொச்ச ஆசனங்கள் எல்லாம் இவருக்கு அத்துபடி. அதிலும் *சர்வாங்கஸானாவில் தினமும் 8 மணி நேரத்துக்கும் மேலாக ஆழ் நித்திரை தியானத்தில் இருக்கும் பெரிய டகால்டி சித்தர். (*சர்வாங்கஸானா என்பது தரையில் தலை, முதுகு, பிருஷ்டங்கள், பாத குதிகால், எல்லாம் தொட்டுக்கொண்டு மோட்டு வளையில் ஓடும் ஃபேன் பார்த்து கண் மூடும் கஷ்டமான தேக நிலை)

தொடரின் முன்னுரை :

முன்னுரைன்னும் சொல்ல்லாம் அல்லது ஏன் இந்த விபரீத யோசனை என யோசிக்கும் தங்கள் சிந்தனைக்கு ஒரு தன்னிலை விளக்கம்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி கண்டு அதிர்ந்தேன். ஒரு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி (ஒரு பள்ளியில் டீச்சராய் இருக்கலாம்) ஒரு சன்னியாசியின் பாதத்தில் விழுந்து அழுது புலம்பி கொண்டிருந்தார். பார்த்து வெகு நேரமாகியும் அந்த தாக்கம் என்னை விட்டு அகலவில்லை. எதனால் ...ஏன் .... இந்த காட்சி என்னுள் தங்கிவிட்ட்தே. நிகழ்ச்சி என்னவோ சாமியாரை பற்றி சேனல் புலம்பிய நிகழ்ச்சி பதிவு.

அந்த சாமியாரை பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர் டகால்டியா, நல்லவனா எனும் சிந்தனை கூட சைடில் தான் நிற்கிறது .

அக்காட்சியின் மூலம், ஆணி வேர் ; அந்த பெண்ணும் அழுகையும் அவ்வுணர்ச்சியும் என எனக்கு பட்ட்து.

அந்த பெண் என்னை கவர்ந்தார். என் தாய் போல் இருந்தார். என் நெருங்கிய நண்பனின் தாய் போலவும் இருந்தார். அவரது அழுகை நிஜம், கண்ணீருக்கு ஒப்பனையில்லை. என்னை காப்பாத்தேன் எனும் முழக்கத்தில் முரண் இல்லை.

இவர் மட்டும் இல்லை, உள்ளுக்குள் உருகும் உயிர்களாய்தான் நாம் எல்லோருமே உள்ளோம். அன்றாடம் நாம் காணும் மனிதர்கள் அனைவருக்கும் சோதனைகள், துன்பங்கள் சூழ்கின்றன.

என்னால் முடியவில்லை, தாங்க முடியவில்லை. இயலவில்லை. ஏதோ ஒரு சக்தி நம்மை காப்பாத்தாதா என ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கம் எனக்கு முக்கியமாய் படுகிறது. அந்த மனித மனத்தின் நினைப்பை பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்யும் வியாபாரிகளை விட்டுவிட்டு, வேருக்கு செல்ல வேண்டும்.

முடியுமா, என்னால் அவர்களின் நிலைக்கு உதவ முடியுமா, பல் இடுக்கில் மாட்டியிருக்கும் உணவு துணுக்கை நீக்கும் சிறு துரும்பாய் இத்தொடர் அமையுமா. மனித வாழ்வின் முக்கியமான மூல ஆதாரமான இவ்வுணர்ச்சியை அல்ச முடியுமா.

வாழும் கொஞ்ச காலம் தெளிவும் திடமும் பெற முடியுமா. பறந்து பறந்து நாம் சேகரித்த ஆன்மீக விடயங்களை கொஞ்சம் அலசலாமா.

முயற்ச்சிக்கிறேன்.

ஆன்மீகம் என்பது என்ன, அதன் நோக்கம் என்ன. மனித வாழ்வில் ஆன்மிகம் என்றால் என்ன, அது அவசியமா, அதன் சாதக பாதகங்கள் என்ன, என்மதம் உன்மதம் என நடக்கும் குடுமிபுடி சண்டையை தவிர்க்க அன்றில் தகர்க்க முடியுமா.

எல்லோருக்கும் பொதுவாய், எளிதாய் ஒரு முடிவு எடுக்க ஒரு பார்மூலா தர முடியுமா எனும் கேள்விகளின் படையெடுப்பே இத்தொடர்.

அப்படி ஒரு சிக்கலான விசயத்தை அலசுவதே இத்தொடரின் நோக்கம்.

என்ன திடிரென்று ஆன்மீகம் எனக் கேட்டால், மனித வாழ்வை பாதிக்கும் விசயங்களும், மனித வாழ்வின் சிந்தைகளும் என்னை கவர்கின்றன.

ஆங் ஓகே... ஆன்மிகம் நல்லது, அதிருக்கட்டும் தலைப்பில அது என்ன அல்வா.

அல்வா ஒரு நல்ல ஸ்வீட், அதன் டேஸ்ட் சூப்பர், வாயில வைச்சா வழுக்கிக்கிட்டு போகும். சுவையான விருந்து மட்டுமல்ல, உடலுக்கு மருந்தும் கூட. அதே அல்வாவுக்கு டவுள் மீனீங் உண்டு. ஒருவரை ஏமாத்தி அப்பிட் ஆவுறது அதன் இன்னொரு அர்த்தம். ஆன்மீகம் அல்வாவாகவும் அவனியில் உண்டு என அறிந்தால் போதுமானது.

இதை படித்து விட்டு தங்கள் எண்ணங்கள் தெரியவும் வேண்டுகிறேன்.

படிக்க எளிமையாகவும், சுவாரசியமாகவும் இத் தொடரை கொண்டு செல்ல எண்ணமுண்டு. தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை பயனுள்ளவனாக்க வேண்டுகிறேன்.


தொடர் விரைவில் ஆரம்பம்

3 கருத்துகள்:

  1. தங்களின் மேலான வாக்குகளை அளித்து இப்பதிவை பிரபலமாக்கிய அத்தனை அன்பு தோழமைக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றியும் வணக்கங்களும்.

    தமிழிஷ்க்கும் நன்றி.

    தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை பயனுள்ளவனாக்க வேண்டுகிறேன். என தொடரில் நான் குறிப்பிட்டுள்ளது போல, இருக்கும் காலம் வரை ஏதாவது என்னால் முடிந்ததை செய்து விட்டு போக வேண்டும் என்ற என் ஆவல், தங்கள் ஊக்குவிப்பால் ஊட்டம் பெறுகிறது.

    மிக்க நன்றி.


    1. paarvai
    2. chuttiyaar
    3. kosu
    4. ldnkarthik
    5. MVRS
    6. mounakavi
    7. ashok92
    8. tamilz
    9. easylife
    10. mvetha
    11. urvivek

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி. இலகுவான நடையில், இயல்பான நகைச்சுவையோடு, இமாலய இலக்கோடு, இருளை நீக்க விளையும் விளக்காக இத்தொடரைத் துவக்கியுள்ளீர்கள். உங்கள் முன்னுரையைப் படித்ததும் ஒரு நதியின் முகத்துவாரத்தில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு. இப்படியே பயணித்து நதி மூலம் காண வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. சீரிய சிந்தனையோடும், சிதறாத கருத்துத்தெளிவோடும், சிந்தை மகிழ்விக்கும் சொற்கோர்ப்பாலும், சிரித்து சிந்திக்க வைக்கும் உஙகள் தனிச்சிறப்பு நடையாலும், ரசிக்க வைக்கும் உங்கள் “இடுகைத்தமிழ்” (முத்தமிழுக்கு பின் வந்திருக்கும் நான்காவது தமிழ்)மணம் கமழ்ந்து இத்தொடர் பலர் மனம் கவர்ந்து வெற்றி பெறும் என ஆழமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //// JoeBasker சொன்னது… நல்ல முயற்சி. இலகுவான நடையில், இயல்பான நகைச்சுவையோடு, இமாலய இலக்கோடு, இருளை நீக்க விளையும் விளக்காக இத்தொடரைத் துவக்கியுள்ளீர்கள். /////

    மிக்க நன்றி. தங்கள் அன்பும் ஆலோசனையும் என்னை வழி நடத்தும் என நம்பி தொடர்கிறேன்.



    ///// உங்கள் முன்னுரையைப் படித்ததும் ஒரு நதியின் முகத்துவாரத்தில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு. இப்படியே பயணித்து நதி மூலம் காண வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. /////

    என் பொறுப்பு எவ்வளவு என்பதை உணர்த்துகிறது இந்த வரிகள்.

    இருந்தாலும் தயக்கமோ, பயமோ இல்லை.

    இலக்கியவாதி இலக்கியம் படைப்பதில்லை. இலக்கியம் தன்னை ஒரு எழுத்தாளன் மூலமாய் எழுதிக் கொள்கிறது என நம்புகிறேன்.


    //// சீரிய சிந்தனையோடும், சிதறாத கருத்துத்தெளிவோடும், சிந்தை மகிழ்விக்கும் சொற்கோர்ப்பாலும், சிரித்து சிந்திக்க வைக்கும் உஙகள் தனிச்சிறப்பு நடையாலும், ரசிக்க வைக்கும் உங்கள் “இடுகைத்தமிழ்” (முத்தமிழுக்கு பின் வந்திருக்கும் நான்காவது தமிழ்)//////

    ஆஹா.... இப்ப புதுசா இப்படி ஒண்ணு வந்திருச்சுல்ல., இடுகைத் தமிழ்....


    //// மணம் கமழ்ந்து இத்தொடர் பலர் மனம் கவர்ந்து வெற்றி பெறும் என ஆழமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள். /////

    எங்கோ ஒரு மூலையில் - மூளையில் என்னால் ஒரு முளை விடுமாயின் என் பிறவிப் பயன் பெருவேன்.

    பதிலளிநீக்கு