பக்கங்கள்

இதுதான் காதல் என்பதோ !!!

சுதாவின் கை பற்றி மெல்லமாய் அழுத்தி, நாராயணன் அவள் கண்களை ஊடுருவி பார்த்தான். சற்றும் எதிர்பார்க்காத அவள் அவன் கண்களை சந்தித்தாள்.

வார்த்தைகள் தொண்டைக்காற்றில் கலக்க, எச்சில் முழுங்கி சொன்னான் ‘ஐ லவ் யூ.... உன் லட்சியத்தை மிதித்து, என் கனவை நனவாக்கினேன்’ கன்னம் துடிக்க நீர் திரண்டு கண்ணில் வழிந்தது. சுதா பதறினாள். என்னாச்சு உனக்கு, ஷட் அப். நாம் இருவரும் எப்போதோ சேர்ந்து எடித்த முடிவுதானே இது.

அந்த உணவகத்தின் ஓர மேசையில் அமர்ந்து இருந்த அந்த இருவரையும் பார்க்கும் சுவாரசியம் இந்த உலகுக்கு இல்லை. எழுபது வயது ஆண், முன் மண்டையின் வழுக்கை, சிதறிய நரை, கண்ணை மறைத்த கண்ணாடி என அவனும் அல்லது அவரும் காஞ்சிபுர சேலையில் தன் தளர்ந்த உடல் மறைத்த எழுபதை எட்டிப் பிடிக்கும் பெண்ணாய் அவளும் அல்லது அவர்களும் இருந்தனர். கூப்பிட்டால் மட்டுமே வர தயாராய் சர்வர்கள் மூலையில் பதுங்கியிருக்க,
அந்த மாலை வெயிலில் இருவரும் தளர்வாய் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்போது ஏன் கலங்குகிறாய். நம் காதல் உயர்ந்தது. நாகரிகமானது, நாசுக்கானது, ஆழமானது, முக்கியமாய் வெற்றியானது. நமக்கு மட்டும் அல்லாது நம் தேசத்துக்கும் பெறுமை. இதில் இன்று வருந்த ஒன்றுமே இல்லை.

சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்த்த, அவன் கையை ஒரு செல்ல தட்டு தட்டி விட்டு, நினைவிருக்கிறதா அந்த மழை பெய்யும் நாளை, நான் காதலிக்கிறேன் என்று சொன்னாயே அந்த நாளை. சுருங்கிய கண்ணை சிமிட்டி உதடை சுழித்தாள்.

நாராயணன் வாய் விட்டு சிரித்தான். மூக்கு கண்ணாடியை கழற்றி துடைத்தான். சுதா முன்னேறி ‘ அடேயப்பா.... எவ்வளவு நாள் இழுத்தடிச்ச, சட்டுன்னு சொல்ல வேண்டியது தானே’ புறங்கையில் கிள்ளி செல்லமாய் அடித்தாள் சுதா. பின்னிருக்கையில் தன் முதுகை சாய்த்து ‘ நீயுந்தான் எவ்வளவு நாள் இழுத்தடிச்ச, சட்டுன்னு சரின்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே’ என பதில் உரைத்தான். ’சீக்கிரமா சொல்லியிருப்பேன்’ சிரிப்புடன் சுதா சொன்னது ‘பின்ன!!! நீ காதல் சொன்ன முறை அப்படி’

அவர்கள் குறிப்பிட்ட அந்த தேதி தேடி, நாமும் காலக் குதிரையில் ஏறி, நாற்பது வருடங்கள் முன்னால் செல்வோம்,

மழை பெய்யும் அந்த மாலை வேளையில் நாராயணன் அந்த உணவு விடுதியின் வாயிலில் நிலை கொள்ளாது நின்றிருந்தான். பதற்றம் பல் இளித்து கொண்டு இருந்த்து. கையில் ப்ராஜெக்ட் பேப்பர்ஸ் ஒரு பெறும் சுமையாய் கனத்தது. வலது இடது என கை மாற்றி கை மாற்றி ஒவ்வொரு முறையும் சாலையை பார்த்து கொண்டிருந்தான்.

எத்தனை நாள் இம்சை. எப்போது சுதாவை காதலிக்க தொடங்கினேன் என தெரியவில்லை. நிச்சயம் முதல் முறை அவளை சந்தித்த போது இல்லை. நடுவில் எப்போதோதான் நடந்திருக்க வேண்டும். முதலில் நல்லது என தோன்றியது பின்னர் பிடித்தது. நல்ல பெண் இவள் என்ற அபிப்பிராயம் சற்று வளர்ந்து பிரியமாய் மலர்ந்தது, அதுவே சில காலத்தில் அவள் மனைவியாய், துணைவியாய் வேண்டும் என ஆனது. அவள் இல்லாமல் இல்லை எனவும் ஆனது. இன்றைய நிலை கண்டிப்பாய் வேண்டும் என ஆகிப் போச்சு.

அவள் இல்லாமல்..... ஹுகும்.. அந்த நினைப்பெல்லாம் இல்லை. வேண்டும், வேண்டும், நிச்சயம் வேண்டும். ஆயினும் சொல்லும் துணிவு மட்டும் வருவதே இல்லை. இன்று நாளை என்று எத்தனையோ நாள் சொல்ல முயன்று தோற்றும் போனேன். ஆனால் இன்று நிச்சயம். எப்படியும் இன்று காதலை சொல்லி விட வேண்டும். இனியும் பொறுக்க முடியாது.

முடிவு எடுத்தாலும் தைரியம் தான் இன்னும் குறைவு. நெஞ்சு பலமாய் துடிக்கிறது, நிலை கொள்ளாது உடல் பரபரக்கிறது. எத்தனை முறை சொன்னாலும் கேட்காது சின்ன சின்னதாய் மூச்சு வெப்பமாய் பூக்கிறது. எப்படி சொல்ல்லாம் என பல நாட்கள் யோசித்து இது தான் சரி என பட்டதை பல முறை சொல்லிப் பார்த்தாயிற்று. பல முறை சொல்லி பார்த்து கொண்ட அந்த வார்த்தை கோர்வை சரிதானா. இப்படித்தான் காதலை சொல்ல வேண்டுமா. தெரியவில்லை. எனக்கு இது சரி என படுகிறது.

சுதா சாலை முனையில் வந்தாள். பதற்றம் பெறுகி, வயிறு வரை இம்சை செய்த்து. இன்னைக்கு வேண்டாம், பேசாமல் தள்ளி போட்டு விடலாமா. சூ! சும்மா இரு. மனதை கண்டிப்பாய் அதட்டி அடக்கினேன். என்னை நெருங்கி வந்து ஹலோ சொன்னாள். சொன்ன ஹலோவில் சுரத்தை இல்லை. அவளை பார்க்க நான் படும் பரவசம் நிச்சயம் அவளிட்த்தில் இல்லை. என் காதலில் ஒரு சிறு பெர்சண்டேஜ் கூட அங்கு இல்லை. மிக தெளிவாய் தெரிகிறது. என்னை அவள் விரும்பவில்லை,

என்ன செய்வது.

உன் எண்ணம் உண்மைதானே. கண்டிப்பாய் அவள் வேண்டும் அல்லவா. பின் என்ன, முயற்சி செய். கடினம் எனப் பார்த்தால் எதுவும் முடியாது. தொடங்கு.

உள் அமர்ந்த முதல் சில் நிமிடங்கள், பொதுவாய் கழிந்தன. கண்ணை மூடி ஒரு கணம் தைரியம் வரவழைத்து சொல்லத் தொடங்கினேன்.

‘என் உயரம் 5 அடி 4 அங்குலம்’. மிடில் கிளாஸ், பணக்காரன் இல்லை, பணக்காரன் ஆகவும் முடியாது. நீ புத்திசாலி, கூர்மையானவள், அழகி. நீ நினைத்தால் என்னை விட நல்ல துணை உனக்கு கிடைக்கும். ஆனால் உன்னை மணம் செய்ய நான் விரும்புகிறேன். என்னை மண்ந்து கொள்வாயா’

ஏற்கனவே அறிமுகம் ஆனதால் நாராயணன் பற்றி தெரியும். அவனது நேர்மை, குணம் எல்லாம் தெரியும். அதிலும் அவனது சமீபத்திய நடவடிக்கைகள், கண்ணின் ஆர்வம் எல்லாம் தெரிந்த்தால் சுதா, இது வரும் என எதிர்பார்த்து தான் இருந்தாள். ஆயினும் இன்று சொல்வான் என எதிர்பார்க்கவில்லை.

நாராயணன் யார். என் நண்பன் பிரசன்னா தரும் புத்தகம் மூலந்தான் அவன் முதல் அறிமுகம். என் பிரியமான நேரப்போக்கு புத்தக வாசிப்பு. எனக்கு பிடித்த புத்தகங்களில் பார்த்த பெயர் தான் நாராயணன். எல்லா புத்தகத்திலும் அந்த பெயர் இருக்கும்.

பிரசன்னாவிடம் கேட்ட போது, அது நாராயணன் புத்தகம் என்பான். பெயரும் அந்த ரசனையுமே எனக்கு முதலில் அறிமுகம். முதல் முறை சந்தித்த போது சற்று அதிர்ச்சியாகவும் இருந்த்து. நான் மனதில் வைத்திருந்த பிம்பம் வேறு, காணும் காட்சி வேறு. அந்த புத்தக ரசனையின் அடிப்படையில் செதுக்கி இருந்த பிம்பம் ஒரு வேளை நான் பார்த்த சினிமா காட்டியதோ.

சரி கேள்வி கேட்டு பதிலுக்கு காத்திருக்கும் நாராயணனுக்கு என்ன சொல்ல. இப்போது என்ன செய்ய, சொல்வான் என யோசித்திருந்தேன், என்னையே பார்க்கிறான், கண்ணில் ஆர்வம் தெரிகிறது என்றெல்லாம் சிந்தித்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் எனவும் யோசித்திருக்க் வேண்டுமே. இப்போது சொல்ல ஒன்றுமே இல்லாமல் முழிக்க வேண்டியிருக்கிறதே.

தலை கவிழ்ந்து தரை பார்த்தாள். தூரத்து மரம் பார்த்தாள், பின்னர் திரும்பி ‘கொஞ்சம் டைம் கொடுங்க, யோசிச்சு சொல்றேன்’ என்றாலும் அவன் காதல் சொன்ன விதம் உண்டாக்கிய ஆச்சரியம் இன்னும் விலகவில்லை.

அடுத்த பகுதியில் நிறையும் ....

2 கருத்துகள்:

  1. என்ன தலைவரே ! கதையில் காதல் ரசம் கொட்டுகிறது.. களை கட்டுகிறது... கல்யாண நாள் நினைவா ? உங்களுக்கும் உங்கள் வழ்க்கைத்துணைவியாருக்கும் “திருமண நாள் நல் வாழ்த்துக்கள்”.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள், வணக்கமும் நன்றியும்.

    வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    தங்கள் பின்னூட்டம் படிக்கும் போது லேசாய் புன்னகையும் வெக்கமும் வருகிறது. கல்யாண நாள் நினைவு தான் மூடு கிளப்பிருச்சு போல..

    பதிலளிநீக்கு