பக்கங்கள்

பெந்தே கோஸ்தேயும் எல் ஐ சி ஏஜெண்டும்

(கிறிஸ்த்தவம் என்றதும்....... ஸ்தோத்திரம்… வெண்ணுடை…. நகையணியா நங்கைகள் என ஒரு மாயத்தோற்றம் இன்று நிலுவையில் இருக்கிறது. சினிமாக்கள் கூட அதை சொல்கிறது... அது உண்மையல்ல... அவர்கள் ஒரு பிரிவு... இன்னும் சொல்லப்போனால் அவர்கள் கிறிஸ்த்தவர்களே அல்ல.. வியாபாரிகள்...வெள்ளந்திகளின் கூ(த்து)ட்டு கும்மாளம்... அவர்களை பற்றி.... )

அந்த டே ஒரு சண்டே…… அப்பாடி, இன்னிக்கு லீவுதானே… ஆபிஸ் தான் போ வேண்டாமே, அரக்க பரக்க வேலை செய்ய வேண்டாமே என சோம்பேறித்தனத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு, படுத்தும் படுக்காமலும் டிவி முன்னால் இருந்து கொண்டு, டிவி பார்த்தும் பார்க்காமலும் குடும்பத்தோடு சுணங்கி கொண்டு…. வீட்டில் இருந்த சமயத்தில்,….. வாசலில் சந்தடி கேட்டது…. 

மதிக்கத்தக்க நடுத்தர வயதில் இருவர் டிப் டாப் உடையில் வீட்டின் முன்னால் எண்ட்ரீ கொடுத்தனர்.




யார் இவர்கள். உள்ளே அனுமதிக்கலாமா, நாட்டு நடப்பு சரியில்லையே…. வெளியிலேயே வைத்து பேசி அனுப்பி விடுவதுதான் நல்லது… யாரோ சேல்ஸ் மேனோ… சோஷியல் சர்வீஸோ…. யாராக இருக்கும்…. என சிந்தனையோடே எழுந்து வந்து..... யாருங்க என கேட்டேன்….

ஒருவர் ஆரம்பித்தார். சார், நீங்க ஃப்ரீயா…!!!??? தொந்தரவு இல்லியே
(இது என்னங்க கேள்வி, தலையும் புரியாம வாலும் சொல்லாம…. எனக்கு என்ன ஞான திருஷ்டியா… இதுக்கு என்ன பதில் சொல்றது) என மண்டைய சொறிந்து கொண்டே… சொல்லுங்க சார், யார் நீங்க என்ன வேணும்….

ஜெஸ்ட் ஒரு ஃபைவ் மினிட்ஸ் உங்ககிட்ட பேசணும் அவ்வளவுதான்….
சரளமான ஆங்கிலமும், சுமாரான சட்டை பேண்டும், முகத்தில் இருந்த அமைதியும் நல்லவர் என முத்திரை குத்த தகுதியான முக அமைப்பும், சரி… என சொல்லி, கேட்டை திறந்து முற்றத்தில் அவர்களை அனுமதித்து, நிற்க வைத்தே பேச தொடங்கினேன்….

உங்களை ரட்சிக்கவும், உங்களை புனிதமாக்கவும், சொஸ்தமாக்கவும் நீங்கள் பாவத்திலிருந்து விடுபடவும் நான் வந்திருக்கிறேன்… தேவனாகிய யேசு கிறிஸ்து…. என தொடங்கியவர்….. ஒரு ஐந்து நிமிடங்கள் நிற்காமல் பேசினார். என்னை ஈடுபடுத்தவோ பேசவோ அனுமதிக்காமல் அவரே பேசினார்.

ஆ…ஆங்… புரிந்து கொண்டேன்… இது பெந்தே கோஸ்தே… வியாதி… ஐயாம் சாரி பெந்தோகோஸ்தேவாதி….

ஐய்யோ… நமக்கு பிடிக்காத விசயம் அல்லவா பேசப் போகிறார். அதிகம் நான் பேசக் கூடாதே… சும்மாவே சாமியாடுவேன்…. இந்த மாதிரி கடுப்படிச்சா கர்ண கொடுரமா பேசுவேனே… நல்லபடியாய் அவரை சிரித்த வாக்கிலேயே திருப்பி அனுப்ப வேண்டுமே…  காயப்படுத்தாமல் இவரை எப்படி திருப்பி அனுப்புவது என்பதை குறித்து யோசிக்க துவங்கினேன்…. அவர் சொன்னதை ஊம் …ஊம் கேட்டு, ஒக்கே… பைன் எனும் வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு ஒரு மாதிரி….. ஒரே மாதிரி பேசினேன்.
இறுதியாக, ரொம்ப நன்றி சார், நீங்க வந்ததுக்கு. உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் எல்லா நலமும் பெருகட்டும் என மனதார வாழ்த்தி …. போயிட்டு வாங்க சார் என்றேன்…..

அவர் ஒரு நோட்டீஸை கையில் திணித்து அடுத்த வாரம் சர்ச்சுக்கு வாங்க என்றார்.

ஒக்கேங்க என சிரிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தேன். அவர் நகர்ந்தாலும், நான் நகர்ந்தாலும் இந்த நிகழ்வின் நினைவு மட்டும் அகலவில்லை.

என்னோடு வந்து பேசிய அவரை பார்க்கும் போது பாவமாக இருந்தது. போங்கள் போய் நற்செய்தியை பாவிகளுக்கு சொல்லுங்கள் என எவனோ ஏவி விட வந்த அம்பு இது. இப்படி அனுப்பும் போது... அலர்ட்டாய் சொல்வார்கள்...  அவர்கள் ஒருவேளை வெளியில் துரத்தி அவமானப்படுத்தலாம்… அப்போது நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள் என.... எது எப்படியோ... எவனோ கொம்பு சீவி விட்டுருக்கிறான். இந்த வளர்ந்து கெட்ட குழந்தையும் பாவம் என் வீட்டில் வந்து நிற்கிறது.

வந்த இந்த புண்ணியவான் ஏன் தன்னை பாவி என நம்புகிறான். அவன் செய்த பாவத்தினால் கேடு என நம்புகிறான்.... பாவம் என்ன பாகற்காயா காய்த்து தொங்குவதற்கு.. பாவம் என்பதே உன்னை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பொறி... 

பாவம் பற்றி என்றுணர்வாயோ.... பாவம்.. ஆனால் வந்தவனோ... தெளிவாக  அவனது எல்லா உலக துன்பங்களுக்கும் அவன் பாவம் செய்ததனாலேயே என நினைக்கிறான். 

என்ன கொடுமை இது.... வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், இன்ப துன்பம் விரவி கிடக்கும், வந்தால், ஏன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாய்.

அந்தோ பாவம்... 

இந்த பெந்தோ கோஸ்தே மார்க்கத்தில் வந்து, சில விஷயங்கள் செய்தவுடன் தான்.... தான் பரிசுத்தம் ஆகிவிட்டதாக நம்புகிறாய். இப்போது மட்டும் என்ன வாழ்வு டாப் கியரிலா செல்லப் போகிறது. அப்படியும் இப்படியும் இடைஞ்சல் தரத்தானே போகிறது.
சரி உன்னளவில் நீ என்ன வேணுமென்றாலும் சொல்லிக் கொள். 

ஆனால் என்னை ஏன் பாவி என முத்திரை குத்தினாய்… அவன் சர்ச்சுக்கு, அவன் கும்பிடப் போகும் இடத்துக்கு நான் போகாததாலேயே, மிக சௌகரியமாக என்னை பாவி என்கிறான். என்னையும் அவனைப் போலவே செய்ய சொல்லுகிறான். அவன் இடத்துக்கு நானும் போனால் நான் தூய்மையானவனா…

அவன் மதம் மட்டும் தான் கடவுளின் பாதையாம், மற்ற எல்லாமே சாத்தான்களாம். அப்படி சொல்வதை அவன் நம்புகிறான். ஏன்… இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்தான். கையை தட்டி, உரக்க பாடி, மனதில் இருக்கும் குறைகளையும் அழுத்தங்களையும் வாய் விட்டு கதறி அழுவது நல்லது. அ[ப்படி செய்கையில் மனதின் பாரம் குறைந்து, புத்துணர்ச்சியும் அமைதியும் வரும். இது பற்றி எனக்கு தெரியும்….மன இயலின் நுணுக்கங்களும், மனித இயல்பின் தன்மையும் அறிந்தவனே நான். சூப்பியிசத்தின் நுண்ணிய பயிற்சிகளை முயற்சித்து இருக்கிறாயா... அல்லது கபாலாவின் பயிற்சிகள் அறிந்திருக்கியா....  இப்படி நீ மட்டும் செய்வது தான் உயர்ந்தது என ஏன் நினைக்கிறாய் என்பது மட்டும் புரியவில்லை..

பெந்தே கொஸ்தே என்பது இன்றைய சமூகத்தில் உள்ள ஒரு மன வியாதி.

ஏன் இத்தனை கடினமான வார்த்தை சொல்கிறேன் என்றால். ஒரு ஆன்மீக வாதி உள்ளத்தில் பகை கொள்ள மாட்டான். உள்ளத்தில் பயம் கொள்ள மாட்டான்... ஆன்மீக வாதி அன்பானவன். ஆக்கபூர்வமானவன். இன்னொரு மதத்தையோ இன்னொரு மார்க்கத்தையோ நல்லதில்லை என சொல்வது அரசியல் சித்து விளையாட்டு.

தூய வெள்ளையில் உடை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்…. சரி ஒக்கே…. தங்க நகைகளை தூக்கி போட்டு விட்டு, மூழியாய் இரு… என்பது எந்த விதம் என புரியவில்லை. சரி, இவர்களாய் உருவாக்கி கொண்ட அடையாளங்கள் ஓக்கே, கொள்கைகளும் சகித்து கொள்ளலாம்… ஆனால் மருத்துவமனை செல்ல வேண்டாம். இறைவன் இருக்கிறான், நானே குணப்படுத்துகிறேன்……. சுத்திகரிப்பு, ஆவியின் பெருங்கொடை என அவர்கள் தூக்கி பிடித்து கொண்டு வருவது கொஞ்சம் நெருடுகிறது.

பெந்தேகோஸ்தே எனும் அமைப்பு, நாடு நகரமெல்லாம் புற்றீசல் போல் பரவி கிடக்கிறது. இந்த வியாபாரிகள்,

மனதிற்குள் கில்ட் இருப்பவர்களையும் கழுத்தில் தங்க நகை கில்ட் இருக்கிறவர்களையும் தேடிக் கண்டுபிடித்து, … அதாவது தப்பு செஞ்சிட்டேனா… தப்பு செய்கிறேனோ… என தடுமாறும் நபர்களாக தேடிப்பிடித்து, அவர்களுக்கு ஆறுதல் தந்து கொஞ்சம் அருகதை யாக்கி, அவர்கள் வேல்யூவை உசத்தி விட்டு, பின் அவர்களை தூண்டில் புழுவாக்கி காசு பார்க்கும் வித்தை தெரிந்த சில வியாபாரிகள் செய்யும் தகிடுதத்தம்.

எல்லா தினகரன்களும், திரவியங்களும் ஓலைக் கொட்டகையில் ஆரம்பித்து, பின் நாகரீக ஜெப வீட்டில் குடியேறி விட்டார்கள். தேவ அழைப்பு என சொல்லி உண்டியல் குலுக்கி செழித்து வாழ்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் தேடி வந்து ஆறுதல் பெற்று போவது மகிழ்ச்சியே… என்றாலும் இவர்கள் ஆற்றுவது ஆன்மீக பணி அல்லது சேவை என தோன்றாமல் ஒரு வணிகம் போலத்தான் நடக்கிறது.

அது என்ன குனகரன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இறைவன் ஒரு சேனலை தொடங்கி ஆசிர்வாதத்தை அள்ளி தெளிக்கிறார் எனும் சூட்சமம் புரியவில்லை. 


கல்வாரி ஏசு…. காலுக்குள்ள சூசு….. 
என மேற்கத்திய சங்கீதத்துடன், ஆடிப்பாடும் முனகரனின் பேத்தி செய்யும் ஆன்மீக சேவை எந்த பிரிவு என்பது புடிபடவில்லை…

கிறிஸ்தவர்களில் மிதவாதப் போக்கும், சார்ந்திருக்கும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காத ஒரு பிரிவு ஒன்று உண்டு. இவர்கள் ஆர்.சி, எனும் பிரிவு. இவர்களை பற்றி விளக்க ஒரு தகவல்.

இந்த ஆர்.சி. பிரிவை சார்ந்த கிறிஸ்த்தவ பெண்கள், முகம் நிறைந்து மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள், நெற்றி நிறைக்க குங்குமம் இடுவார்கள், தலை நிறைந்து மல்லிகை பூ சூட்டி, பல வண்ணங்களில் பட்டாடை உடுப்பார்கள். ஞாயிற்று கிழமைகளில் கோவில் செல்வதும், பண்டிகை காலங்களில் வழிபடுவதும், பின் சமூக பரிமாணத்தில் வாழ்வதும் மட்டுமே இவர்கள் கிறிஸ்தவர்களாக செய்வார்கள். முக்கியமாக மதம் மாற்றுகிறேன் நான் என கிளம்ப மாட்டார்கள். பொங்கல் தீபாவளி என எல்லா திருவிழாக்களும் கொண்டாடுவார்கள்.

ஏன் என கேட்டேன். எளிமையாக சொன்னார்… பொங்கல்….. தமிழர் திரு நாள். அவ்வளவுதானே, அதில் என்ன பிரச்சனை. அன்றைய தினம் காலை எழுந்து பொங்கல் செய்து, குளித்து புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் மகிழ்ந்திருப்பார்கள். சரி, பொங்கல் தமிழர் திருநாள், தீபாவளி எப்படி எனக் கேட்ட போது,

அது இந்த மண்ணின் திருவிழா. அண்டை வீட்டு சகோதரன் கொண்டாடும் போது நாமும் கலந்து கொள்வதில் என்ன தவறு என கேட்டு. தீபாவளி அன்று காலை எழுச்சியும், எண்ணை குளியலும், வடையோடு சாப்பாடும், வெடியும் புது துணியும் என இவர் கொண்டாடுகிறார்.

இவரின் இத்தகைய தெளிவு என்னை மகிழ்ச்சியாக்குகிறது. தவறு என எனக்கு படவில்லை. வாழ்வை கொண்டாட்டம் என பகுப்பதிலோ, மாற்று மார்க்கங்களை அதனதன் நம்பிக்கையோடு விடுவதிலோ முதிர்ச்சியும் பரந்த மனதுமே இருக்கிறது.

அடையாளங்களை துறந்து மனித நேயம் மின்னும் ஒரு ஆரோக்கிய சமுதாயத்துக்கு நாம் வழி செய்ய வேண்டும். நாம் சார்ந்த மதத்தில் நம்பிக்கையும் அடுத்தவர் மதத்தில் மரியாதையும் கொண்டு வழி விலகி நின்று அணுகுவது சாலச் சிறந்தது.

மதத்தின் பெயரால் வியாபாரம் நடத்தும் விஷமக்காரர்களை இனம் கண்டு அவர்களிடத்தில் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருப்பது நலம்.
எப்படி எல் ஐ சி ஏஜெண்ட்டுக்களை பார்த்து பயந்து ஓடினோமோ அது போல் இன்றும் பெந்தே கோஸ்தே பொன்ற பெரு வியாதியஸ்தர்களை பார்த்து பயந்து ஓட வேண்டியிருக்கிறது.

4 கருத்துகள்:

  1. தாங்கள் பரம்பரைக் கிறிஸ்தவராகவும். அடித்தள கத்தோலிக்க சபையை சார்ந்தவராகவும் இருப்பதால் இப்படி எழுதிவிட்டீர்கள்...

    அதையெல்லாம் விட்டு வெளியே வந்து யோசித்தால் கிறிஸ்து போதித்த ஒன்றையும் எந்த கிறிஸ்தவ சபையும் பின்பற்றுவதில்லை என்ற நேர்மையான மனநிலைக்கு நாம் வரவேண்டும்...

    உலகெங்கிலும் நீ போய் சுவிசேஷத்தை அறிவி என்பதுதான் இயேசுவின் மைய செய்தி... அதற்காகத்தான் அவர் தம் சீடர்களை தயார் படுத்தினார்.... முதன்முதலாக அச்சீடர்கள் 3000 பேரை கிறிஸ்துவவை நோக்கி திருப்பியபோது (அப் 2 :41) அந்த மக்கள் கிறிஸ்து கற்பித்த நெறிமுறைகளை பிரதிபலித்தார்கள்... அதனால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரினை பெற்றார்கள்... அப்படிப்பட்ட பெயரினை பெற்ற நாம் என்ன செய்துவிட்டோம்?

    உண்டு, குடித்து, மகிழத்தான் இந்த மண்ணுலக வாழ்வு என்றால் பின் நமக்கெதுக்கு மதமும், சபைகளும்....

    என் அப்பா சொல்வார்கள் ஒரு பழமொழி ஒன்று : கழுத லத்தில முன்னாடி என்ன பின்னாடி என்ன, எல்லாம் ஒரே மாதிரிதான்"....

    கிறிஸ்தவத்திலே கத்தோலிக்கம் என்ன பெந்தகோஸ்து என்ன ரிவைவல் மினிஸ்ட்ரி என்ன.... எல்லாம் ஒரே சாக்கடைல ஊறுன சாக்கடைதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தோலிக்கர், சி.எஸ்.ஐ. போன்றவர்களுக்கு மதமாற்றம் முதன்மைக் குறிக்கோள் அல்ல. காலம்காலமாக கல்வி, மருத்துவம், ஆதரவற்றோரைப் பராமரிப்பது போன்றவற்றில் பாராட்டத்தக்க சேவை செய்துவருகிறார்கள். பெந்தகொஸ்தே, யெஹோவாவின் சாட்சிகள் போன்றவர்கள் அப்படி அல்ல. அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்குள்ளேயே பிற பரிவினரைத் தங்கள் பக்கம் இழுக்க முயல்பவர்கள். இது ஒரு வியாபாரம்.

      நீக்கு
  2. மிக்க நன்றி... தங்கள் கருத்துக்களுக்கு...

    பதிலளிநீக்கு
  3. ஏசுநாதர் சொன்னது என்ன? அடுத்தவர்கள்மீது அன்பு செலுத்து, உனக்குத் துன்பம் தந்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மையே செய், கடவுளும் நீ செய்யும் தவறுகளை மன்னிப்பார் என்றார். அவ்வளவுதானே? இதை இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, பௌத்தராகவோ இருந்துகொண்டு கூட செய்ய முடியுமே! மதத்தைப் பரப்புவதற்குப் பதிலாக அன்பையும் அஹிம்சையையும் கடைப்பிடிக்கச் சொல்லி (இருக்கும் மதத்திலேயே இருந்தபடி) பிரச்சாரம் செய்தால் அதுதான் உண்மையில் ஏசுநாதரின் நற்செய்தியைப் பரப்புவது.

    உண்மையில் மதப்பிரச்சாரம் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்துக்காக செய்யப்படும் தொழில் மட்டுமே. இதில் ஏகப்பட்ட போட்டி, பொறாமை, ஊழல், பொய்க்கணக்கு காட்டுவது இருக்கிறது. இவர்களுக்கும் ஏசுநாதருக்கும் எள்ள்ளவு சம்பந்தமும் இல்லை. இது ஒரு கேவலமான வியாபாரம்.

    பதிலளிநீக்கு