பக்கங்கள்

குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….

கல்லூரியில்……. பெண்ணுக்கு சீட் கிடைக்குமா என விசாரித்து விட்டு சீனுவாசன் தன் காரில் நகரத்துக்கு திரும்ப துவங்கினார். ஊரின் வெளியே ஒய்யாரமாய் அமைந்திருந்த ஒரு கல்லூரியின் கேம்பஸ் அது…. கிளம்பிய காரில், டேப் சுழல ஆரம்பித்தது. பாடல் காரை நிறைத்தது.

என்னவோ ஏதோ….
எண்ணம் திரளுது கனவில்
எனும் பாடல் உயர்தர ஸ்டிரீயோவில் ஒலிக்க….. அவர் மனம் ஒரு வரியில் ஸ்தம்பித்தது…
ஓ…  ஒ….
குவியமில்லா….
குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….
ஓ… ஓ….
உருவமில்லா…..
உருவமில்லா ஒரு நாளை…

ஹப்பா… என்ன ஒரு வார்த்தை கோர்வை இது…. என்ன வலிமையான சொற்கள்… என்ன நுணுக்கமான நுண்ணியமான ஒரு வார்த்தை….
Unfocussed Visual Illusion….. Shapeless Tommorrow…………….

குவியம்… எப்போதோ பள்ளியில் பிசிக்கிஸில் படித்தது… குவியம் இல்லா …. எனும் இரு வார்த்தைகள் இணைந்து …. குவியமில்லா என கேட்கும் போது இனிக்கிறதே…

Unfocussed Visual Illusion … அதிலும் அந்த காட்சிப் பேடை….
ஆஹா… இப்படி ஒரு மொழிபெயர்ப்பை இது வரை கேட்டதில்லையே சமீபத்தில் உணர்வு இங்கனம் உணர்ந்ததில்லையே….

என்ன ஒரு ஆழமான சொற்பதம்… அற்புதமான மொழியின் வீச்சு என சிந்தனை ஓடிக் கொண்டிருந்த போது அவர்களை கவனித்தார். கல்லூரி இளைஞர்கள். பயணப் பொதிகளுடன் சாலை ஓரத்தில் வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தனர். காரை மெல்லமாக்கி, அவர்கள் அருகில்வர, சன்னலை திறந்து…

சிட்டிக்குத்தான்னா, வாங்க ஏறிக்கோங்க…. டிராப் பண்றேன்…. என்றார்.
அவர்கள் மகிழ்ச்சியாய் ஏறி அமரும் அந்த தருணத்தில், இக்கல்லூரியை குறித்தும்…. படிப்பு வசதிகள் என அனைத்தும் குறித்து அத்தனையும் விசாரிக்கலாமே என மனம் குறிப்பு கொடுக்க கை நீட்டி, டேப் ரிக்கார்டரை அணைத்து விட்டு… பேச துவங்கினார்…

அவர்கள் பேசிய ஆரம்ப பேச்சுக்கள் சீனுவாசனுக்கும் அவர் பெண்ணுக்கு மட்டுமே உபயோகமானதால், நமக்கு தேவையானது வரும் வரைக்கும்……….. பாஸ்ட் ஃபார்வேர்ட்டு செய்து கேட்போமா…..

ஆமா தம்பி அடுத்ததா என்ன படிக்க போறீங்க…
பி.ஹை.டி… பண்ணனும் சார், டாக்ட்டரேட் வாங்கணும், ஆனா இப்பவே செய்யணுமா என்ன செய்யணும்ன்னு குழப்பமா இருந்துச்சு… ம்… யோசிச்சுக்கிட்டு இருக்கேன்….

சீனுவாசன் தலை திருப்பி அவர்களை பார்த்தார்…. முனைவராகும் முயற்ச்சியில் உள்ள இளம் குருத்தை பார்த்த போது மனம் மகிழ்ச்சியானது… இன்றைய தலைமுறையின் சிந்தனையும் வேகமும் பார்த்த போது, மனம் அடுத்த தலைமுறை குறித்த ஆக்கபூர்வம் பற்றி சிந்தித்து…. பெருமிதப்பட்டது….

நல்லது தம்பி…. நல்ல விசயம் தான செஞ்சுருங்க… எனக்கு எப்பவும் ஏதாவது குழப்பம் இருந்துச்சுன்னா இந்த 5 வொய்… எனும் அணுகுமுறை கொண்டு முயற்ச்சிப்பேன்…. அப்ப தெளிவாயிடும்…

அதென்ன சார், 5 வொய்…
பழைய முறைதான் தம்பி, எளிமையானது தான். வொய்… வொய்ன்னு…. 5 தடவை … நொய்… நொய்..ன்னு கேள்வி கேக்குறது…. மெல்லிய சிரிப்பு காரில் பரவ அனைவரும் இலகுவாகினர்.
இப்ப உங்க விசயத்தையே கேப்போமே….

வொய்… நீங்க டாக்ட்டரேட் பண்ணனும்…. பதில் சொல்லுங்க….
ம்….. எல்லாரையும் விட நான் பெரிசாகணும்… அங்கீகாரம் வேணும்… ஈசியா வேலை கிடைக்கும்….

ஓ… ஒக்கே… வொய்… நீங்க எல்லாரையும் விட பெரிசாகணும்…. இது ரெண்டாவது வொய்....


ஆமா... நீங்க ஏன் பெரிசாகணும்.... ஏன் சின்னவங்களா இருந்தா என்ன குறைஞ்சு போச்சு…. ஏன் ஒரு கருணாநிதி அல்லது ஜெயலலிதாவ விட நாம செயல் குறைவும் சிந்தனை குறைவும் ஆளுமைக் குறைவும் உள்ளவங்கத்தான… அதனால நாம என்ன குறைஞ்சு போயிட்டோம்…. பொறந்த எல்லாருமே தலைவராக முடியுமா…. ஏன் நம்ம அடுத்தவங்கள விட பெரிசா ஆகியே ஆகணும்….

சீனுவாசனின் இந்த கேள்வியால் அமைதி அங்கே அலற ஆரம்பித்தது… அவரே அதை கலைத்தார்.

ம்… இந்த முனைவராகும் முயற்ச்சியில்… நான் என்னை உணர வேண்டும்…. சில கருத்துக்கள் பற்றிய தெளிவு வேண்டும்….. ஒரு ஆய்வு வேணும்… ஒரு ஆழ்ந்தறிதல் வேணும்…. இந்த மனித குலத்துக்கு என்னால் ஏதும் அறிவு சார்ந்த எண்ணத்தை விட முடியணும்மான்னு……….  நீங்க சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்குமே… இல்லியா தம்பி….

உங்களுக்கு பிடிச்ச கார் எது…..
ம்.. டயோட்டா…. கரோலா….
ஓ…  நல்ல கார் அது…. ஆமா அது ஏன் பிடிக்கும்…. வொய்...!!!

ம்… தம்பி லேசாக விழித்தான்….
டயோட்டா பிடிக்கதுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்…. ஆனா அது உங்களோட உள்ளுக்குள்ள இருந்து வரணும்… வந்தா நீங்க புத்திசாலி….

அடுத்த வீட்டுக்காரரு…. உங்களுக்கு பிடிச்ச ஒரு மனுசரு… இவங்கல்லாம் ஒட்டுறதால மட்டும் டயோட்டா பிடிச்சா தப்பு…. இப்படி… அடுத்தவங்கள் பார்த்து வராம… உங்க உள்ளுக்குள்ள இருந்து வர்றத பாருங்களேன்…

ஓரு கார் வாங்கணும், சரி என்னென்ன கார் இருக்குது..எல்லா கார்களோட தன்மைகளும் என்ன என்ன..… கார்ன்னா என்ன…. அதை அலசி ஆராய ஒரு பத்து விசயங்கள்…. இன்ஜின்… அதனோட செயல்திறன்… மைலேஜ்… உக்காரக் கூடிய இருக்கைகள், வண்டியோட கம்பர்ட், ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ்… இப்படி, பல தளங்களில் யோசிச்சு, அப்புறமா உங்களுக்கு இதுதான் பிடிக்கும்ன்னு சொன்னா நல்லது.

ஒரு வேளை, இது மாதிரி ஆராய்ஞ்சு, உங்களுக்கு பிடிச்ச கார் என்னவா வேணும்னா இருக்கலாம்… ம்… அது ரோல்ஸ் ராயாக் கூட இருக்கலாம் …… தப்பே இல்லை… உங்களுக்கு தோணனும்… எனக்கு இதுதான் வேணும்ன்னு …. அப்படி தோண்றது தான் ஆழமான சிந்தனை, ஆணித்தரமான லட்சியம்…


ம்… இது மாதிரியான சிந்தனைகள் தான் தன் இலக்கை அடைஞ்சே தீரும்….. இல்லாம அடுத்தவனுக்காக யோசிக்கிறது வெறுமனே நம்ம நேரத்தத்தான் வீணாக்கும் இல்லியா தம்பி…

கார் இப்போது முழுக்க அமைதியானது… சீனுவாசன் மனதிற்குள் சிந்தித்தார்… கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ…. பாவம் சின்ன பசங்கதான…. இன்னும் பட்டு தெளிய காலமிருக்கே…,.ம்…

தம்பி… ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுருங்க…. மனசுக்கு தோணுச்சு பேசிட்டேன்...., மனசுல வைச்சிக்காதீங்க…

கார் அவர்களை இறக்கிவிடும் இடத்தை நெருக்க… தம்பி அவசரமாய் மறுத்தான்.

ஐய்யய்யோ…. இல்ல சார், நீங்க சொன்னது நல்லா இருந்துச்சு… யோசிக்க வைச்சிது.. இன்னும் நிறைய விசயம் உங்ககிட்ட பேசணும்… டெலிஃபோன் நம்பர் தருவீங்களா…

சீனுவாசன் நெகிழ்ந்தார்…. கண் லேசாய் கண்ணீரை நிரப்பியது… மனம் விம்மி தளர்ந்தது… எண்ணை கொடுத்து விட்டு அவர்களை இறக்கி விட்டு, காரை செலுத்தினார். மனம் கனிந்தது. சந்தோசம் வந்தது. உற்சாகம் கொடுத்த ஊக்கத்தில்…. பாடல் கேட்போமே என டேப்பை ஒலிக்க விட்டார்…. விட்ட இடத்திலிருந்து பாடல் ஒலித்தது... 


ஆனால் அது இப்போது உருவாக்கிய அர்த்தத்தை... நிகழ்ச்சி தொடர்பில் சீனுவாசன் அதிர்ந்தார்.... இசை அதையறிமால் ஒலித்தது.... ஸ்பீக்கர் அதன் இயல்பாய் அதிர்ந்தது...

ஓ…  ஒ….
குவியமில்லா….
குவியமில்லா ஒரு காட்சிப் பேடை….
ஓ… ஓ….
உருவமில்லா…..
உருவமில்லா ஒரு நாளை…  
ஓ….ஓ….
அரைமனதாய்
விடிகிறது என் காலை….. !!!!

4 கருத்துகள்:

  1. திரைப்படப்பாடல்களில் மிகச்சிறந்த இலக்கிய நயமும், ஆழ்ந்த உணர்வுகளும் மிகுந்திருந்தாலும் இசையின் லயிப்பில் நாம் அவற்றை உணர்வதில்லை. உங்களின் இந்தப்பதிவு அந்த நயத்தை அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறது. 5 நொய் நொய்யை நிரம்ப ரசித்தேன். தொடரட்டும் உங்கள் ஆக்க பூர்வமான அறிவைத்தூண்டும் பதிவுகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி... மிக்க நன்றி... திரு. JoeBasker....

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    //// திரைப்படப்பாடல்களில் மிகச்சிறந்த இலக்கிய நயமும், ஆழ்ந்த உணர்வுகளும் மிகுந்திருந்தாலும் இசையின் லயிப்பில் நாம் அவற்றை உணர்வதில்லை. /////

    ஆம். மிக சரியான கருத்து.... இதை தொடங்கியதே தாங்கள் தான்.... ஒரு ஒன்றரையணா பாட்டுக்குள் ஒளிந்திருந்த அற்புதமான வரிகளை வெளிக்கொணர்ந்து கோடு போட்டதே தாங்கள் தான்.... கல்லுக்குள்ளே தூங்கிக் கிடந்த சிற்பம் போல, பாட்டுக்குள் அடைந்திருந்த அந்த வரிகளை பற்றி பேசி, பாடல்களை இப்படி கேட்க வேண்டும் என தூண்டிய தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    //// 5 நொய் நொய்யை நிரம்ப ரசித்தேன். தொடரட்டும் உங்கள் ஆக்க பூர்வமான அறிவைத்தூண்டும் பதிவுகள்...////

    ஹா...ஹா.... வொய்...வொய்... 5 வொய்....ன்னு வெறுமனே எழுதுவதை விட, அதில் ஒரு நொய்... நொய்... என சொல்லும் போது, அந்த கருத்து ஆழமாக மனதில் பதிந்து விடுகிறது. ஆழமான வாசிப்பாளர்களை விட என்னைப்போல் மேம்போக்கு வாசகர்களை மனதில் கொண்டு எழுதுவதானாலேயே... இது போல் சில பிர்காக்களை சேர்க்கிறேன்... பஸ்....புஸ்... என சத்தம் போட்டது என்பது போல்... இந்த எழுதும் முறையை தூண்டி விட்ட நண்பர் கோபிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்

    பதிலளிநீக்கு
  3. தங்களின் எழுத்தை மிகவும் ரசித்து வாசிக்கும் பலரில் நானும் ஒருவன்...

    எதை எழுதினாலும் அதில் ஆழமாய் இறங்கி எழுதும் உங்கள் பாங்கு பலருக்கும் கைவருவதில்லை... அதனாலேயே தங்கள் எழுத்தில் மற்றவர்க்ளிடம் காண முடியாத ஒரு சிறப்பு இருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்க்ஸ் தலைவா...

      இன்றைய என் எழுத்துக்களுக்கும் அதன் குணங்களுக்கும்... தங்கள் அன்பும் ஆலோசனையுமே முக்கிய காரணம்... மிக்க நன்றிகள்....

      நீக்கு