பக்கங்கள்

குமரி முதல் காஞ்சி வரை...

கண் இமைக்கும் நொடியில் இங்கு எதுவும் நடக்கும்

ஆம்… சட்டப் பேரவை தேர்தல் எண்ணிக்கை நேற்று துவங்கி முதல் சில மணி நேரத்தில், அதிமுக முன்னிலை என தெரிந்த உடனேயே, போயஸ் தோட்டம் களை கட்டியது. தொண்டர்கள், அரசின் உயர் அதிகாரிகள், ஊடகங்கள் என சாலையை நிறைத்து, மனித தலைகள் படை எடுக்கவும், அந்த ஏரியாவே கல கல என ஆனது. உற்சாகம் எங்கும் பரவ, பட்டாசுகள் உச்சஸ்தாயியில் சப்திக்க, இனிப்புக்கள் இலவசமாய் வினியோகிக்கப்பட, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரத்தத்தின் ரத்தங்கள் மகிழ, பரவசம் அங்கு உச்சத்தில் இருந்தது. அறிவாலயம் அமைதியாய் ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. தோல்வியில் அமைதி வருமோ….

கருத்துக் கணிப்புக்கள் இம்முறையும் பல் இளிக்க, வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாய் குமரி முதல் காஞ்சி வரை ஒரே சிந்தனைக் கோட்டில் இணைந்தனர்.

கூட்டணி ஆட்சி தான் என எல்லோரும் அபிப்பிராயப்பட, வாக்காளர்களோ சூப்பர் ஸ்டார் போல, அதிரடி முடிவெடுத்தார்கள்.

அதிமுக தனிப் பெரும்பாண்மை என்பதும். தேமுதிக எதிர்கட்சி என்பதும் எதிர்பாராத திருப்பங்கள்.

திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதும், மதிப்பிற்குறிய அமைச்சர்கள் தோற்றதும் பெரிய சோதனைகளே. ஓட்டுக்கு நோட்டு எனும் திட்டமும், இலவச சிலுமிசங்களும் பாய் போட்டு படுத்து, மூஞ்சி மூடி கிடப்பதும்…. பல்கலை கழகத்தில் ஆய்வு பாடத் திட்டமாகமே சேர்க்கலாம்.

காங்கிரஸ், பா.ம.க. நிராகரிக்கப்படும் என எதிர்பார்த்தது உண்மை, ஆனால் இத்தனை வீரியமான அடி என்பது யாரும் எதிர்ப்பார்க்காததே.

மதிமுக இந்த சூறாவளியில் சிக்கி சிதைந்து போனது ஆச்சரியமே. ஜெ போட்ட 160 சீட் கணக்கும், அவரது அதிரடி அணுகுமுறையும்… அவசியமோ, என நினைக்கவும் வைத்த தேர்தல் ரிசல்ட் இது.

வெற்றியின் தருணத்தில் ஜெ. தந்த பேட்டி, மிகவும் பிரமாதம். அடக்கமாகவும், பொறுப்பாகவும், திடமாகவும் பேசினார். ஒரு கட்டத்தில் தத்துவார்த்தமாக கூட பேசினார்.

‘முயற்சி ஒன்று தானே முக்கியம். இது நடக்குமா… எப்படி முடியும் என்ன வாகும் என மலைத்து நிற்காமல், முயல வேண்டும் அல்லவா…. என அவர் சொன்னது, அவரது ஆழ் மனத்தின் ஓட்டத்தை பிரதிபலித்தது. ஆனால் அவர் பால்கனியில் நடக்கும் போது, ஏனோ தெரியவில்லை, பழைய வேகம் கொஞ்சம் மிஸ்ஸிங். வயதோ, அல்லது ஏதோ சோர்வோ ஒன்று அவரிடம் தெரிந்தது. நல்ல உடல் பலத்துடன், (மன பலம் தான் எக்கச் சக்கம் இருக்கிறதே) அவர் நல்லாட்சி தரட்டும்.

2 கருத்துகள்:

  1. பின்னூட்டத்துக்கு நன்றி தலைவா....

    ஜி.... என்ன ஜி இப்படி சொல்லீட்டீங்க....

    தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்கும்ன்னு கரெக்ட்டா சொன்னது நீங்க...

    அதனால்.... தங்களுக்கு மட்டுமே அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்குது தலை...

    பதிலளிநீக்கு