எண்ணம் சொல்லாகும்

சொல் செயலாகும்
செயல் பழக்கமாகும்
பழக்கம் குணாதிசயமாகும்
குணாதிசயம் நீயாவாய்
- (ஜெய் குருதேவ் பூஜ்ய ஷ்ரீ ஷ்ரீ ரவி சங்கர்)எண்ணங்கள் சில நம் வாழ்வின் பாதையையே மாற்றி அமைக்கும் வல்லமை உள்ளது.
அத்தகைய ஒரிறு சிந்தனைகள் என் வாழ்வையும் புரட்டிப் போட்டது.
மூலம் நம் தமிழுக்கு அன்னியமானாலும், விளைவு நம் மனித வாழ்வு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சிந்தனை 1 :
ராஜா என்றோரு பெயரை வைத்துக் கொள்வோமே. பள்ளி/ கல்லூரி நாட்களில் அவன் உங்கள் பரம எதிரி. அவனுக்கும் தங்களுக்கும் ஏழாம் பொருத்தம். அவனை பார்த்தாலே எரிச்சல் வரும், அப்படி ஒரு பிரகஸ்பதியை பள்ளி/ கல்லூரி முடிந்த பிறகு நீங்கள் பார்க்கவே இல்லை. வருடம் ஒரு பத்தை உருட்டி விட்டது என்றும் வைத்துக் கொள்ளலாமே.
நல்ல வேலை, குடும்பம் என நீங்கள் செட்டிலாகி விட்டீர்கள். பழைய நினைவு என்பது இப்போதும் இனிமையாகவே உணர்கிறீர்கள்.
இன்று தற்செயலாய் ரோட்டில் அவனை நீங்கள் பார்க்கிறீர்கள்.
முதலில் ஒரு சந்தேகம். அவனா இது. அவன் தானே. அதே ஒடிசல் தேகம், இன்னும் கருத்து இருக்கிறான். அவன் தான். சந்தேகம் இல்லை. இப்போ என்ன செய்ய. பகைமை அப்போது தானே, இன்னுமா. பேசலாமா, இல்லை வேண்டாமா என மனதில் ஒரு தர்க்கம். புன்னகைக்கலாமா, இல்லை அவன் என்ன செய்வான். சரி இருக்கட்டும் அவன் என்ன செய்கிறான் என பார்ப்போம். தீர்மானம் இல்லாமல் ஒவ்வொரு தப்படியாய் நடந்து செல்கீறிர்கள்.
நெருங்கி விட்டீர்கள்.
எதிர்பாராத்து நடக்கிறது. அவன் பாய்ந்து உங்கள் சட்டையை பிடித்து கன்னத்தில் சப்பென்று அடிக்கிறான்.
அவ்வளவு தான் உங்களுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வர, திருப்பி தாக்க கை முஷ்டி மடக்குகீறீர்கள். அப்போது அவன் கூட நடந்து வந்த சிலர் அவனை அமுக்கிப் பிடிக்க, ஒருவர் உங்கள் அருகில் வந்து உங்கள் கை பிடிக்க, சாலை விழி மேல் வைத்து பார்க்கிறது.
’சாரி சார், இவருக்கு மன நிலை சரி இல்லை. ஆஸ்பத்திரிக்கு தான் கூட்டிக்கிட்டு போறோம். தப்பு நடந்திருச்சு, மன்னிச்சுருங்க’
நண்பர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்.
சட்டென்று கை உதறி, பரிதாவமாய் அவனை பார்ப்பீர்கள் அல்லவா. எதாவது உதவி செய்ய முடியுமா என அவசரமாய் சிந்திப்பீர்கள் அல்லவா,
ஒரு கேள்வி.

அது எப்படி. ஒரு தகவலில் உங்கள் சிந்தனை அதன் தொடர்புடைய செய்கை மாறி விட்ட்து.
கோபம், ரவுத்திரம் என பொங்கியது ஒரு பத்து வார்த்தைகளில் இரக்கம், பச்சாதாபம் ஆக மாறி விட்டது.
இப்போதும் அவன் உங்களை அடிக்க திமிறிக் கொண்டு இருந்தாலும், உங்கள் பார்வை கனிவாகத்தானே உள்ளது.
இது என்ன விந்தை.

ஸ்டிபன் ஆர். காவி தனது புத்தகத்தில் இதையே ’பாரடைம்’ / ‘பாரடைம் ஷிப்ட்’ எனக் குறிப்பிடுகிறார்.
நமது பார்வையில் அல்ல உணர்வில் தான் எதுவுமே விளக்கப் படுகிறது. எந்த செய்கையும் அதை குறித்த நமது விளக்கமே நிர்மாணிக்கிறது.
சரி, ஒத்துக் கொள்கிறேன். இது என் வாழ்வை மாற்றி அமைக்குமா. கும்...
1. இனி சாலையில் அவசரமாய் செல்லும் போது நம்மை இடிப்பது போல சென்ற அந்த நபரை பார்த்து தூசன (கெட்ட) வார்த்தையால் வைய வேண்டாம். ஒரு நிமிடம் ஏன் இப்படி செல்கிறான். என்ன பிரச்சனை. சரி, எதோ பிரச்சை. இந்த சிந்தனை போதுமானது. நிச்சயமாய் அடுத்த்தாய் இப்படித்தான் நினைப்போம். என்ன அவசரமோ போகட்டும் என விட்டு விடலாம்.
அட போடா. தோத்து கொடுக்க சொல்றீயா! உப்பு சப்பு இல்லாம வாழ சொல்றீயா, என்ற நினைப்புக்கு இல்லை இந்த கோபமும் கெட்ட வார்த்தையும் நமது உடலையும் மனதையும் தானே சீரழிக்கும்.
ஒரு தகவல் நம் சிந்தனையை மாற்றும் வல்லமை பெற்றது என புரிந்தாலே மிகப் பெரிய மாறுதல் நமக்குள் நிகழும்.
வெறும் பதிவாய் இல்லாமல், அவசர அவசரமாய் வாசித்து முடித்து விட்டு

விடாமல், ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தால் இன்னும் பிரமாண்டமான விடயம் தங்களுக்கு தோன்றும். சிரம்ம் இல்லை என்றால் அதையும் பின்னூட்டமிடுங்கள்.
அடுத்த இது போன்ற ஒரு தகவலுடன் நான் விரைவில் வருகிறேன்.