எனக்கு மட்டுமல்லாது குடும்பத்துக்கே பிடித்தது. வசந்தபாலனுக்கும், ஜெயமோகனுக்கும் மொத்தக் குழுவுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.நம் எல்லோரையும் சிரிக்க வைத்து, அழ வைத்து, கைதட்ட வைத்து, வாழ்க்கையை பற்றி சொல்லி.... அடேயப்பா படம்ன்னா இப்படித்தான் இருக்கணும்.
விளிம்பு கோட்டுக்கு மிக சமீபமாய் ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கி சின்னா பின்ன மாகும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வு, அவர்கள் ஆசைகள், உணர்வுகள் என துல்லியமாய் படம் பிடித்த நேர்த்தி பாராட்டுதலுக்குறியது. ஆர்ட் படம் என நம் பொறுமையை சோதிக்காமல் கலகல கும்மாளமுமாய், பரவசப்படுத்தும் காதல் காட்சிகளுமாய் செய்த பேக்கேஜிங் நிச்சயம் வெகு ஜனத்தை கவரும் ஜில் ஜில் ஐஸ் கிரீம்.

படம் பார்த்தபின் இனிமேல் ரங்கராஜன் தெரு சென்றால் நம் பார்வை நிச்சயம் வேறுபடும். சாலையில் நம்மிடம் வந்து விற்கும் அத்தனை ஆண் பெண்ணையும் இரக்கத்தோடு நிச்சயம் பார்ப்போம். சேல்ஸ்மேன், கழிவரை காப்பவர் என அத்தனை பேரையும் அன்பு செய்யும் அபாயம் கூட உண்டு.
மழை பெய்த இரவு சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் சில்மிஷம் செய்வதில் படம் தொடங்குகிறது. சே! வாட் நான்சென்ஸ் என எல்லோராலும் வெறுக்கப் படுகிறது. ஏன் நாமும் கூட லேசாய் எரிச்சலாகிறோம். ஆயினும் அந்த பாரடைம் ஷிப்ட் எபக்ட் கொடுக்கிறாரே அங்கு
தொடங்குகிறார் இயக்குனர். படம் முழுக்க பின்னிப் பிரித்து இருக்கிறார். விமர்சனம் எழுதலாம், நல்ல விடயங்களை பட்டியலிடாம் என சிறு குறிப்பு எழுதி வைத்தேன். கூட்டிப் பார்த்தேன், 48 விஷயங்கள் இருக்கிறது. யேயப்பா. இத்தனையும் எழுதினால் எப்படி அது விமர்சனமாகும்...எதை விடுப்பது எதை கோர்ப்பது..ஆக்கபூர்வமாய் ஒரு படம். யானை வாழுற காட்டில தான் எறும்பும் வாழுது இதே ரோட்டில நான் வாழ்ந்து காட்டுறேண்டா என ஹீரோ முழங்குகிறாரே. தஞ்சாவூர்க்காரர் ‘மனச தளர விடாதீங்க, இத எடுத்துட்டு போயி கூவி கூவி வில்லுங்க, விக்கத் தெரிஞ்சவன் வாழுவான். முப்பது வருசமா மனுசன நம்பி கடை வைச்சேன், ஒரு குறையும் இல்ல என்கிறாரே’. அண்ணன் கடை பையை வாஞ்சையுடன் தொட்டு, பின் வாங்கி சாமிபடத்துக்கு பக்கத்தில் மாட்டும் தங்கச்சி. உன் சேர்க்கைக்கு தான வீட விட்டு வந்தேன், பேசாம இருக்காத என அழும் நண்பன், நரம்பு கோளாறில் உயிர் விடும் ஊழியன், பூப்படையும் சிறுமி, இப்படி அட்லீஸ்ட் ஒரு முப்பது நாப்பது இடங்களில் கைதட்டி, கண்ணீர் மல்க நம்மை ஆட்கொள்கிறார்கள் படக்குழு.
இல்லையென்று சொல்லாமல் குறையாய் இது தோன்றியது. வட்டாரத்தமிழ் ஓங்கி ஒலிக்கிறது. தென் மாவட்டங்களை சேர்ந்தவர் சிலாகிப்பார், மிச்சவர் புரிந்தால் மட்டுமே ரசிப்பார். செத்த மூதி கால தரிச்சுப் புடுவேன் என்கிற ஒரு வசனம். அரிவாளால் வெட்டி இரு துண்டங்களாக்குவது. அங்கும் இங்கும் வெட்டி மரத்தையோ, கட்டையையோ கொஞ்சம் சின்னதாய் ஆக்குவது தரிப்பது. கோட்டி பிடிப்பது என்பது மனம் பிறழுவது (மரை கழலுவது / லூஸ்) இது போல் ஒரு களஞ்சியமே படத்தில் இருக்கிறது.எல்லா தமிழ் ரசிகரும் பார்க்க வேண்டிய படம். தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து இருக்கிறது, நமக்கெல்லாம் பெருமை.
பார்த்து, படித்து, சிலாகித்து பாராட்ட வேண்டிய நல்ல படம்.









